Saturday, June 20, 2009

பாலாற்றில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - துரைமுருகன் அதிர்ச்சி


பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு 15 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்திருப்பது அதிர்ச்சியும் ஆத்திரமும் அளிப்பதாக உள்ளது என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ஜெய்ராம் ரமேஷை நானே நேரில் சந்தித்து அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்துவேன் என்றார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சண்முகவேலு,

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு 15 நாளில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். தமிழக அரசு உடனே மத்திய அரசுடன் பேசி இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த துரைமுருகன் கூறுகையில்,

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் அறிவிப்பை ஆந்திர அரசு வெளியிட்டதுமே தமிழக அரசு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

மத்திய அரசு இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசி இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் [^] ஆலோசனை வழங்கியது. அதன் அடிப்படையில் மத்திய நீர்வள ஆணையமும் இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசியது.

இரு மாநிலங்களும் புள்ளி விவரங்களை தந்துள்ளோம். இது தவிர ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய தமிழ்நாட்டிலிருந்து ஒரு பொறியாளரை கேட்டார்கள். தமிழக அரசும் அவரை நியமனம் செய்திருக்கிறது. இந் நிலையில் பாலாற்றில் அணை கட்டுவதற்கான எந்த பணிகளையும் செய்யக்கூடாது என்று மத்திய நீர்வள ஆணையம் உத்தர விட்டுள்ளது. வழக்கு [^]ம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆனால் ஆந்திர மாநில அரசு அணை கட்டுவதற்கு 15 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்திருப்பது எனக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் அளிப்பதாக உள்ளது.

இந்த அமைச்சர் தமிழகத்தையும் நன்கு அறிந்தவர். அவரிடம் அணை பற்றிய விவரங்களை முழுமையாக தெரிவித்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். ஒருவேளை தெரிந்திருந்தும் அவர் இந்த முடிவுக்கு வந்திருந்தால் அவரை நானே நேரில் சந்தித்து நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவேன்.

அவரிடம் தமிழக அரசின் சார்பில் உண்மை நிலவரங்களை தெரிவித்து அணைக்கு அனுமதி வழங்குவது உகந்ததல்ல என்று தெரியப்படுத்துவேன் என்றார் துரைமுருகன்.

விட்டுக் கொடுத்துவிட்டு போராடுவதே தமிழர்களின் சிறப்பு!
தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழன் தான்!

Friday, June 19, 2009

தலையில்லாக் கோழிகள் - தலைவர்களே வாருங்கள்

தலைவர்களே வாருங்கள்
தமிழர்களைத் தரித்திரமாக்கி
சரித்திரம் எழுதலாம்
அதனை வாசிப்பதற்கு
வடக்கத்தியானை அழைக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
தனித்தமிழில் எழுதலாம்
அவர்களை படிக்கப் பழக்கலாம்
அடிமைத் தமிழரின்
பிரியாணிக்குக் கொடுக்கும்
பணத்தை மிச்சப் படுத்தி வைக்கலாம்

நீங்கள் எழுதும்
தமிழ் நூல்களை
அவர்களுக்குக் கொடுத்துவிட்டு
எடுத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
அடிமைகள் இல்லாத
நாட்டை உருவாக்க முனைந்து
அடிமையாக வாழலாம்

தலைவர்களே வாருங்கள்
தினந்தோறும்
தமிழ் பிணங்கள் விழுகின்றன
சிவலோக பதவிக்குப் பிறகும்
பதவியைத் தேடலாம்

தலைவர்களே வாருங்கள்
தொண்டைக் குழியைத் தாண்டிவிட்டால்
உண்ணும் அறுசுவை உணவும்
அருவெறுக்கத்தக்க மலமாகிப் போகும்
நாவால் சுவைத்துப் பிழைக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
பிணத்திடம் காசுகள் தலை வணங்கும்
பணம் வேறு வழியில் போகும்
அண்டாது
நடை பிணமாக இருந்து
பிழைத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
நடைபிணங்களை நாடாள
அழைப்போம்
அடிமைகளை அரசாள
கூப்பாடு போடுவோம்

தலைவர்களே வாருங்கள்
வேற்று கிரக
மனிதருக்கும் தமிழ்
கற்றுக் கொடுக்கலாம்

தமிழன் அழிந்த பின்னும்
பிழைத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
கல்லறைகள் உடைக்கப் பட்டதை
காவியமாக எழுதலாம்
கழிசடைத் தமிழன்
கடைசிவரை இருப்பான்
படிக்கச் சொல்லலாம்
வயிற்றுப் பிழைப்புக்கு ஆகும்

தலைவர்களே வாருங்கள்
புல் பூண்டு மண் மரம் மட்டை
எல்லாம் அழிந்தாலும்
மனிதன் பிறப்பான் என்ற
நம்பிக்கையோடு இருக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
பிழைப்பு நடத்தலாம்
கல்தோன்றி மண்தோன்றா
காலம் மீண்டும் வரும்
முதலில் தமிழன் பிறந்தால்
அவனிடம் தமிழை
விற்றுத் தீர்க்கலாம்






Tuesday, June 16, 2009

மலேசியா - சிங்கப்பூருக்கு இடையே நவீன தமிழ் பாலம்




சிங்கையில் நவீன தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம்

மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் நூல் அறிமுகம்

சிங்கப்பூர் இலக்கிய உலகத்தில் தானும் ஒரு தமிழ் நதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் திரு.பாலு.மணிமாறன். கவிதைகள், சிறுகதைகள் போன்ற படைப்பிலக்கியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர்,தமிழ் உணர்வாளர். இலக்கியப் பணியின் அடுத்த கட்டமாக, தனது தங்கமீன் பதிப்பகத்தினூடாக வளரும் எழுத்தாளர்கள்,கவிஞர்கள், இலக்கியவாதிகளின் படைப்புகளை அச்சேற்றி வருபவர்.

அண்மையில் பிரபல மலேசிய தமிழ் எழுத்தாளர் சை.பீர் முகம்மது அவர்களின் "பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்" என்கிற சிறுகதைத் தொகுப்பை தனது பதிப்பகத்தினூடாக சிங்கையில் வெளியிட முழு முதல் காரணமாயிருந்தார்.
அந்நிகழ்ச்சியினூடாக மலேசிய எழுத்தாளர் இளவல் திரு.கே.பாலமுருகன் அவர்களையும், சிங்கை இலக்கிய உலகுக்கு அறிமுகப் படுத்தும் நிகழ்வாகவே அமைத்திருந்தார்.

அடுத்து நிகழ்ந்த வாசகர் வட்டம் நிகழ்வுக்கு மலேசிய எழுத்தாளர்கள் புண்ணியவான், கே.பாலமுருகன், சாசின் தேவராஜன், நவீன் உள்ளிட்டோர் வந்திருந்து திரு கே.பாலமுருகன் அவர்களின் "அநங்கம்" இலக்கிய சிற்றிதழை சிங்கை இலக்கிய வட்டத்துக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது திரு சாசின் தேவராஜன் அவர்கள் நடத்திவரும் மௌனம் கவிதை சிற்றிதழைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

இது போன்ற நிகழ்வுகளுக்கு, மலேசிய மற்றும் சிங்கை எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாக கவிஞர் திரு.பாலு மணிமாறன் அவர்களும், கவிஞர் திரு பாண்டித்துரை அவர்களும் இருப்பது மனசுக்கு இதமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆறுதலாகவும் இருக்கிறது.

மலேசியாவில், சிங்கையைப் போன்று தமிழ் நூலகங்களை காண்பது அரிது. ஆதலினால், அங்கிருந்து வரும் தமிழ் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் வேட்கையை, மொழியுணர்வை, இன உணர்வை நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறோம். சிங்கையில் எல்லா நூலகங்களிலும் தமிழுக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார்கள். அங் மோ க்யோ போன்ற நூலகங்களிலும், தேசிய நூலகத்திலும் தமிழ் நூல்களை நிறைவாக வைத்திருக்கிறார்கள். அதனால் சிங்கையில் இருப்பவர்களுக்கு தமிழ் நூல்களைப் படிப்பதற்கு எளிதான சூழல் நிலவுகிறது.


அந்தவகையில், சிங்கை தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில், திரு பாலு மணிமாறன் அவர்களின் தங்கமீன் பதிப்பகத்தின் சார்பாக மலேசிய எழுத்தாளர்கள் திரு.சாசின் தேவராஜன் அவர்களின் "அரிதாரம் கலைந்தவன்" சிறுகதைத் தொகுப்பு மற்றும் திரு.கே.பாலமுருகன் அவர்களின் "கடவுள் அலையும் நகரம்" கவிதைத் தொகுப்பு ஆகிய இரண்டு நூல்கள் கருத்தரங்கத்திற்கு பின் அறிமுகம் கண்டன.

நூலாசிரியரே நூலை வெளியிடும் புதிய முயற்சியை காண முடிந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இறைவணக்கம் அல்லது தமிழ்த் தாய் வாழ்த்து பாடப் படவில்லை. நூலைப் பற்றிய ஆய்வு அல்லது விளக்க உரையையும் நூலாசிரியர்களே நிகழ்த்தினார்கள். முதல் நூலாக திரு சாசின் தேவராஜன் எழுதிய "அரிதாரம் கலைந்தவன்" சிறுகதைத் தொகுப்பை அவரே வெளியிட கவிமாலை காப்பாளர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அடுத்து திரு.கே.பாலமுருகன் எழுதிய "கடவுள் அலையும் நகரம்" கவிதைத் தொகுப்பை அவரே வெளியிட சிங்கப்பூர் எழுத்தாளர் இராம கண்ணபிரான் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சி நெறியாளராக அருமை நண்பர் கவிஞர் திரு.பாண்டித்துரை அவர்கள் சிறப்பாக பங்காற்றினார்கள்.

நூல் வெளியீட்டுக்கு முன்பு நடைபெற்ற கருத்தரங்கில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் திரு.இராம கண்ணபிரான் மற்றும் திருமதி சித்ரா இரமேஷ் ஆகியோர் நவீன இலக்கியத்தில், நவீனத்துவம், பின் நவீனத்துவம்,யதார்த்தம், மாய யதார்த்தம், கட்டுடைத்தல் போன்ற நவீன படைப்பிலக்கிய கூறுகளை ஆங்கில இலக்கியத்துடன் ஒப்பீடு செய்து சிறப்பான எடுத்துக்காட்டுகளுடன் மேற்கோள்களையும் ஒன்றிணைத்து உரையாற்றியது நிறைவாக இருந்தது. பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று கருதுகிறோம்.

நூல் வெளியீட்டின் தொடர்ச்சியாக அனைவரும் நூல் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நடந்தது. பின்னர் சில மணித்துளிகள் சிற்றுண்டி இடைவேளை, நிறைவடைந்தவுடன், மலேசிய எழுத்தாளர் திரு.சை.பீர் முகம்மது மற்றும் சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன்(சென்னை), எழுத்தாளர் நா.கண்ணன் (ஜெர்மனி) ஆகியோருடன் இலக்கியம் சார்ந்த தொலைபேசி கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் அங்கம் நடைபெற்றது.

விழாவில் கவிஞர் திரு ந.வீ.விசயபாரதி, ஆசியான் கவிஞர் கா.து.மு.இக்பால், பாத்தென்றல் இளமாறன், சிங்கப்பூர் தினமலர் திரு புருஷோத்தமன், திரு பாண்டியராஜன், பிரான்ஸில் இருந்து வந்திருந்த ஈழத்து உடன்பிறப்பு திரு ஸ்ரீரங்கன் (தமிழ் ஒலி வானொலி), பதிவர்கள் கோவி.கண்ணன், முகவை இராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், பல இலக்கிய நிகழ்வுகளின் நான் கண்ட சில பல முகங்களைக் காண இயலவில்லை.

மொத்தத்தில் இந்நிகழ்வை பயனுள்ளதாக ஆக்கிக் கொடுத்த, கவிஞர் திரு பாலு மணிமாறன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

Tuesday, June 9, 2009

ஈழ மக்கள் எங்கள் இரத்தம் - இரத்தம் கொதிக்கிறது


ஈழத்தில் தமிழர்கள் படும் பாட்டையும், வேதனையையும் நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது என்று ராஜ்யசபாவில் பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் வேதனையுடன் குறிப்பிட்டார்.

ராஜ்யசபாவில் திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் சார்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து முக்கியமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் சார்பில் பேசிய ஜெயந்தி நடராஜன், ஈழத் தமிழர் நிலை குறித்து கவலை தெரிவித்தார். அதிகாரப்பகிர்வை இலங்கை அரசு செய்தே ஆக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதேபோல திமுக சார்பில் பேசிய கனிமொழியும், போர் முடிந்தும் கூட இலங்கையில் தமிழர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது வேதனை தருவதாக தெரிவித்தார்.

இவர்களை விட ஒருபடி மேலே போன பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ், நன்னெறியிலிருந்து ஒரு வாக்கியத்தை இந்தியில் குறிப்பிட்டு ஈழத் தமிழர் நிலையை நினைத்தால் ரத்தம் கொதிப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.

சுஷ்மா பேசுகையில், மனித உடலில் ஏதாவது ஓர் அங்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் கண்கள் கண்ணீர் விடுகின்றன.

இலங்கையில் வசிப்பவர்கள் இந்தியாவிலிருந்து தூரத்தில் இருக்கலாம். ஆனால், அவர்களது ரத்தமும், நமது ரத்தமும் ஒன்றுதான்.

அவர்கள் துன்பப்படுவதைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது. பெண்களும், சிறார்களும் பாதிக்கப்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.

இலங்கையில் தமிழ் சகோதர, சகோதரிகள் மீது நடத்தப்படும் தாக்குதலையும், குழந்தைகள் பசியால் தவிப்பதையும் பார்த்துக் கொண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? என்றார் சுஷ்மா.

பின்னர் நன்னெறியில் வரும் "பெரியவர்தம் நோய் போல் பிறர் நோய் கண்டுள்ளம்'' என்று தொடங்கும் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.

சொரணை குறைவான, ஜனநாயக பிறவிகளான தமிழக எம்.பிக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கும் தமிழர்களின் அன்பிற்குரிய தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ்!








கோவி.கண்ணனும், நையாண்டியும் - சிக்கலின் நான்

முன்னணி பதிவர்களான திரு கோவி.கண்ணன் அவர்களும், திரு நையாண்டி நைனா அவர்களும் இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் என்னையும் மாட்டி விட்டிருக்கிறார்கள். எல்லாம் போட்டு வாங்குறதுக்குன்னு மட்டும் நல்லா தெரியுது.

படிக்கிறவங்க கண்ணுல இரத்தக்கண்ணீர் வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கோவி.கண்ணன் மற்றும் நையாண்டி நைனா என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை!

முன்னணி கலைஞரான கலைஞர் மு.கருணாநிதி போன்றவர்கள் திரு மோகன் கந்தசாமி போன்றவர்களுக்கு செவ்வி வழங்கியிருக்கும் போது என்னுடைய செவ்வி பின்னணி செவ்வியாக மட்டுமே பார்க்கப் படும் என்பது திண்ணம்.

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
இந்தக் கேள்வியெல்லாம் சாதனை பண்ணுனவங்க கிட்ட கேக்கணும். சோதனை பண்ணுறவங்களுக்கிட்ட கேட்கக்கூடாது.
என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்(அவருடைய தமிழ் பற்று). குழந்தையாக இருக்கும் போது என் தாய் சுப்பிரமணிய பாரதி என்றழைத்து மகிழ்ந்தார். பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன். உச்சரிப்புப் பிழை பொருட்பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நல்ல நோக்கத்தில்...! மற்றபடி யாரையும் சோதிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குக் கிடையாது.

2.கடைசியாக அழுதது எப்போது..?
இப்போதெல்லாம் மரத்துப் போன இதயங்களை உடையவர்களைக் கண்டு என் கண்கள் கூட அழ மறுத்துவிடுகின்றன, மனம் மட்டும் அழுகையை நிறுத்தாத போது...!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
கையெழுத்து அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். எழுதும் போது ரசித்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.(கையெழுத்து நல்லா இருந்தா தலைஎழுத்து நல்லா இருக்காது போன்ற உரையாடல்களை நம்புவதில்லை)

4.பிடித்த மதிய உணவு..
எல்லா சைவ உணவுகளையும் விரும்பி சாப்பிடுவேன். பரங்கிக்காய் மட்டும் பிடிக்காது.அசைவ உணவுகளில், நண்டு வறுவல் பிடிக்கும், இறால், விரா மீன், வாளை மீன் பிடிக்கும். மட்டன் பிடிக்கும், நம் தமிழகத்தில் மட்டும் தான். சிங்கையில்ஆட்டுக்கறி( மட்டன்) சாப்பிட அவ்வளவாக பிடிப்பதில்லை. சிங்கையில் ஒரு குறிப்பிட்ட உணவகங்களில் ஆட்டுக்கறி நன்றாக இருக்கும்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்கிற படியால், சீன உணவில் லக்சா, பிஷ் சூப், பிஷ் பால் நூடுல்ஸ் இன்னபிற உணவு வகைகள் பிடித்தமானது.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
என்னைப் பார்த்தவுடன் பழக வேண்டும் போல் இருக்கிறது என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் தான் நானும்...! வாங்க பழகலாம் என்னும் பிளாஸ்டிக் பழக்கம் எனக்கு ஒத்து வராது.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடலும் அருவியும் எங்க வீட்டுக்கு பக்கத்துல இல்லை. எனக்குப் பிடித்தாலும் அதனால் எனக்கு பெரிய பலன் ஒன்றும் இல்லை. சுற்றுலா சென்றால் அருவியில் குளிக்கத்தான் பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..
முகத்தை, கண்ணைப் பார்த்து பேசுவதே முறையாகும். அதுதான் எனக்கும் பிடிக்கும். மண்ணைப் பார்த்து பேசும் பெண்ணானாலும் கண்ணைப் பார்க்கவே விரும்புவேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது: ஓரளவுக்கு உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பது, முடிந்தவரை அதைக் காப்பாற்றி வருவது.
எழும்பூரில் காத்திருப்பவரிடம், நான் இந்தா வந்துடுவேன் சைதாபேட்டை வந்துட்டேன் என்று தாம்பரத்தில் இருந்து கொண்டு சொல்வது எனக்குப் பிடிக்காது.
பிடிக்காதது: ஒன்பது வேலைகளை ஆற போட்டுவிட்டு பத்தாவது வேலை வந்தவுடன் அதனையும் சேர்த்து சோறு, தூக்கம் எதுவும் பாராது ஒரே மூச்சில் முடிக்க நினைப்பது.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
பிடித்த விசயம் : நாம் மறந்த பலவற்றை ஞாபகம் வைத்திருப்பது. நோட்டு புத்தகம் வாங்குற செலவு மிச்சம்.
பிடிக்காத விசயம் : நாம் தெரிவிக்கும் கருத்துகளை பெரும்பாலும் ஆமோதிப்பது.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?

ஒரு சில மனிதர்களுடன் வாழும் வாய்ப்பு கிட்டியிருப்பதால் அந்த வருத்தம் இதுவரை ஏற்படவில்லை. இருப்பினும் நம் உறவுகள் அனைவரையும் விட்டுவிட்டு சிங்கை போன்ற இயந்திர உலகில் வாழ்வதற்கு யாருக்குத் தான் பிடிக்கும்.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
இந்த கேள்வியை கேட்டவர் என்னை காதலிக்க விரும்புகிறாரா? நான் திராவிட பாரம்பர்யத்தில் வந்த மஞ்சள் சட்டையும் போடவில்லை, அண்ணாயிசத்தை குழைத்த பச்சை கலர் சிங்குஜாவும் இல்லை. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..
பாட்டா? என் பாட்டையே நீங்க கேட்பீங்களா என்று தெரியவில்லை. இதுல நான் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் வேறா?

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
தொடர்ந்து தட்டச்சு மட்டும் செய்வதால், பேனாவாக ஆனால் எனக்கு இரண்டு வேலைதான். இருப்பினும் பேனாக்களிடம் ஏன் நிற வெறி காட்ட வேண்டும் என்பது எனது கேள்வி. தொடர்ந்து நிறம் சம்பந்தப் பட்ட கேள்விகளையே கேட்டுக் கொண்டு வருவதால், கேள்விகளைக் கேட்டவர் நிற வெறியுடையவரோ என சந்தேகிக்கிறேன்.

14.பிடித்த மணம்..
தமிழ் வாசம் வீசும் மணம் மட்டுமல்ல மானமும், மனமும் கூட பிடிக்கும்.

15.நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..
"டொன் லீ" சிவா தயாளன் - எமது ஈழத்து உறவு, நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்.
"நிஜமா நல்லவன்" பாரதி - கவிதைகள் எழுதுவார், பின்னூட்டங்களின் பின்னிப் பெடலெடுப்பவர், வாசிப்பு தேடல் உடையவர்.
"பித்தன்" விஜய் - மேன்மையான சீரிய கருத்துகளை கூரிய சொற்களால் கட்டமைப்பார். வாசிப்பை நேசிப்பாய் கொண்டவர்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..
இதை அனுப்பிய திரு கோவியார் எண்ணற்ற பதிவுகள் எழுதியுள்ளதால் எதை விடுப்பது எதைத் தொடுப்பது என்று தெரியவில்லை. கோவி கண்ணன் அவர்களின் பெரும்பாலான பதிவுகள் பிடித்தவையே!

இன்னொரு பதிவரான திரு நையாண்டி நைனா அவர்களின் பதிவுகளும் பெயருக்கேற்றாற்போல் நகைச்சுவை ததும்ப இருக்கிறது. பெரும்பாலான இவரது பதிவுகளும் எனக்கு பிடித்தவையே!

17.பிடித்த விளையாட்டு...
கிரிக்கெட் என்னும் பணக்கார விளையாட்டு அல்ல.

18) கண்ணாடி அணிபவரா?
ஏன் வயது 40 ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்களா? இல்லை.

19).எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...

இயல்பான, நகைச்சுவைகளை உள்ளடக்கிய படமும் பிடிக்கும். பிரமாண்டமும் பிடிக்கும். ஏன் உங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையா? அதற்கான கருத்துக் கணிப்பு போல் தெரிகிறதே, அதான் கேட்டேன்.

20.கடைசியாக பார்த்த படம்..
இப்போது ஏதும் பார்க்க வில்லை. சென்ற ஆண்டு பார்த்தது சேரனின் மாயக்கண்ணாடி. நீங்க படம் எடுக்கனும்னு நினைத்தால் சேரனை வைத்து எடுங்கள் அல்லது சீமானை வைத்து எடுங்கள்.

21.பிடித்த பருவ காலம்...
தை - அதுதான் தமிழனின் திருநாள் தொடங்கும் மாதம், அறுவடை செய்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் காலம்..

22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? - க.ப.அறவாணன் எழுதியது பலருக்கு பயன் படாத புத்தகம், எனக்காவது பயன்படுகிறதா என்று பார்ப்போம் என்ற ஒரே நம்பிக்கையோடு படிக்கிறேன்.

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
கணக்கு பண்ணி மாற்றுகிற நிரந்தர வேலையெல்லாம் கிடையாது. பெரும்பாலும் குழந்தைகளின் படங்களை போடுவது உண்டு. தற்போது போட்டிருப்பது என் மகன் நரேன் அவர்கள் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பாரதியார் வேடமிட்ட படம்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
பிடித்த சத்தம் : அழகின் சிரிப்பு
பிடிக்காதது: அவசர வேலையாக இருக்கும் போது தெரிந்தே நம்மை அழைக்கும் சத்தம்.

25.வீட்டை விட்டு சென்ற அதிகபட்ச தொலைவு ?
சிங்கப்பூர் - மலேசியா

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
தனித் திறமைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இனிமேல் இருப்பதாக யாரவது சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
ஓரிடத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டால் அது இயற்கை என்று கூறிவிட்டு, இன்னொரு இடத்தில் வெறும் தாக்குதலுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் தன்மையும் போக்கும்.

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
சாத்தான் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாததால், நம்பிக்கை உள்ளவர்களிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தால் நலம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..
நான் போன இடங்களில் குற்றாலம் பிடித்தது.

30.எப்படி இருக்கணும்னு ஆசை..
எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லாத நிலை வேண்டும் என்று நினைக்கிறேன். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
சமைப்பது - அது இல்லை என்றால் வேலைக்கு ஆகாது.
அவர்கள் இருக்கும் போது சமைக்க விரும்பினால் அவர்கள் சமைக்க விடுவதில்லை. நாம் சமைப்பது பிடிக்கவில்லை என்று சொல்வதுமில்லை. நன்றாக இருக்கிறது என்று மட்டும் கிளி பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
காஞ்சி காம கோடி பீடாதிபதி போன்ற ஆட்கள் சொன்னா நம்புவீங்க. நான் சொன்னா நம்புவியளா? இருந்தாலும் சொல்றேன்,
கட்டுமரம்! வாழ்க்கை என்பது ஓடம் என்று சொல்வார்கள். நம்பாதீர்கள்.








Monday, June 8, 2009

கடிதம் எழுதி கண்டிக்க வலியுறுத்துவோம்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது வெள்ளைக்காரர்கள் இனவெறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த 1 மாதத்தில் மட்டும் 10 இந்தியர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். நேற்று இந்திய மாணவரின் காருக்கு தீ வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு இந்திய மாணவரை தாக்கி உள்ளனர். அவரது பெயர் கமல்ஜித், மெல்போர்ன் நகரில் படித்து வந்த அவர் நள்ளிரவு 1.40 மணிக்கு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வெள்ளைக்கார இளைஞர்கள் அவரை சுற்றி வளைத்து தாக்கினார்கள். அவரை தரையில் தள்ளி இரும்பு கம்பியால் அடித்தனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்தம் வெளியேறி மயங்கி கிடந்தார்.அவரை இன்னொரு இந்திய மாணவர் பார்த்து ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். கமல்ஜித் மீது 2 வாரத்துக்கு முன்பும் தாக்குதல் நடந்தது. அவர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது வெள்ளைக்காரர்கள் முட்டையை வீசி அப்போது தாக்கினார்கள்.

ஆஸ்திரேலிய மாணவர்கள் இந்திய மாணவர்களை தொடர்ந்து தாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுத விழைகிறோம்.

இருப்பினும் ஆஸ்திரேலியா ஒரு இறையாண்மை மிக்க நாடு, இந்தியாவிடம் நட்பு பாராட்டும் நாடு, அதனால் அந்த நாட்டு உள் விவகாரங்களுக்குள் தலையிட முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விடயம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு கொண்டு செல்லப் பட்டால் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஒரு நாட்டில் பிரச்சனை என்று வரும் போது தாக்குதல், காயங்கள் ஏற்படுவது இயற்கையே. இதெல்லாம் மனித உரிமை மீறல் ஆகாது.

இந்திய மாணவர்களின் நடவடிக்கைகளை ஒழிக்கப் பாடுபடுவோம், அதற்கு ஆஸ்திரேலியாவிற்கு எந்த உதவியை வேண்டுமானாலும் செய்ய இந்தியா கடைமைப் பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா எவ்வளவு இறையாண்மை மிக்க நாடோ, அதை விட இறையாண்மை மிக்க நாடு இந்தியா.

அதனால் இது விடயமாக யாரும் குரல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். குரல் கொடுப்பவர் மீதுதான்...!

உயிர் என்பது, அது ஈழமக்கள் உயிர், இலங்கை மக்கள் உயிர், பாலஸ்தீனமக்கள் உயிர், எத்தியோப்பிய மக்கள் உயிர், இந்திய மக்கள் உயிர், இந்திய மாணவர்கள் உயிர் என்று நாங்கள் என்றும் வேற்றுமை பாராட்டியதில்லை. எல்லா உயிரும் எங்களுக்கு ஒன்றுதான்.
அதனால் நாங்கள் இன்றும் நிராயுதபாணியாய் வேடிக்கை பார்க்கிறோம்.
என்ன செய்வது!?

இதுதான் இன்றைய நமது நிலை!?
என்ன கொடுமை ஐயா இது!?

Friday, June 5, 2009

உண்மை சுடும் - நமக்காக கண்ணீர் வடிக்கும் நீதி

இலங்கையில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடைத் தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனுபவித்துவரும் இன்னல்களையும், துயரத்தையும் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை என்று சிறிலங்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா கூறியுள்ளார்.

நெகம்போ மாவட்டத்தில் மரவிலா என்று இடத்தில் நீதிமன்ற வளாகத்தை திறந்துவைத்து பேசினார் தலைமை நீதிபதி சரத் என். சில்வா. அப்போது அப்பாவித் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ‘நிவாரண கிராமங்களுக்கு’ தான் சென்று பார்த்த அனுபவத்தை விவரித்தார். அவருடைய பேச்சு முழுமையாக எம் டிவியில் ஒளிபரப்பானது.

“வன்னியில் இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்களுக்குச் சென்றேன். அங்கிருப்பவர்கள் படும் இன்னல்களையும், துயரைத்தையும் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை. செட்டிகுளத்தில் உள்ள முகாம்களுக்கு நான் சென்று பார்த்தேன். அங்கு நிலவும் பரிதாபகரமான நிலையை என்னால் விளக்க முடியவில்லை. அவர்கள் கடுமையான மன அழுத்தத்திலும், விவரிக்க முடியாத துயரத்திலும் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

இங்கு நாம் கட்டிடங்களை கட்டிக்கொண்டு வாழ்கின்றோம், ஆனால் அவர்கள் அங்கு கூடாரங்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஒரு கூடாரத்தில் 10 பேர் வாழ்கின்றனர். கூடாரத்தின் மையத்தில் இருப்பவர்தான் நேராக நிற்க முடியும். கூடாரத்தின் மூலைக்களுக்குச் சென்றால் அவர்கள் கழுத்து முறிந்து போகும்.

உடல் கழிவை வெளியேற்றிக் கொள்வதற்குக் கூட 50 முதல் 100 கஜ தூரமுள்ள நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இப்படித்தான் செட்டிக்குளம் முகாம்களில் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பார்த்து புன்னகைக்க முயன்றேன், ஆனால் முடியவில்லை. அவர்களிடம் எனது உணர்வுகளை தெரிவிக்க முயன்று தோற்றுப் போனேன். அவர்களுடைய துயரத்தைக் கண்டு நாங்களும் அழுகின்றோம் என்று கூற முயன்றேன், முடியவில்லை. உங்களுக்கு நாங்கள் புதிய ஆடைகளைத் தருவேன் என்று கூற முயன்றேன், முடியவில்லை.

இந்த நாட்டில் ஒரே இனம் தான் உள்ளது என்றோ, பெரும்பான்மை என்றும், சிறுபான்மை என்றும் ஏதுமில்லை என்றும் நாம் கூறுவோமானால் அது அப்பட்டமான பொய்யாகும்.

இந்த நாட்டின் சட்டங்களில் இருந்து அவர்களுக்கு நியாயம் கிடைக்காது. அவர்களின் இன்னல்களும், துயரங்களும் நமது நாட்டின் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்படுவது இல்லை. இதை நான் வெளிப்படையாக கூறுகின்றேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம்” என்று நீதிபதி சரத் என். சில்வா பேசியுள்ளார்.
நன்றி: வெப் துனியா செய்தி


உண்மை சுடும் - நமக்காக கண்ணீர் வடிக்கும் நீதி!
நமக்காக மலர்ந்திருக்கும் மாற்றான் தோட்டத்து மல்லிகை!
உண்மைகள் ஒவ்வொன்றாக பொத்துக் கொண்டு வெளிவரும்!




வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை