Saturday, June 20, 2009

பாலாற்றில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - துரைமுருகன் அதிர்ச்சி


பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு 15 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்திருப்பது அதிர்ச்சியும் ஆத்திரமும் அளிப்பதாக உள்ளது என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ஜெய்ராம் ரமேஷை நானே நேரில் சந்தித்து அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்துவேன் என்றார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சண்முகவேலு,

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு 15 நாளில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். தமிழக அரசு உடனே மத்திய அரசுடன் பேசி இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த துரைமுருகன் கூறுகையில்,

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் அறிவிப்பை ஆந்திர அரசு வெளியிட்டதுமே தமிழக அரசு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

மத்திய அரசு இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசி இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் [^] ஆலோசனை வழங்கியது. அதன் அடிப்படையில் மத்திய நீர்வள ஆணையமும் இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசியது.

இரு மாநிலங்களும் புள்ளி விவரங்களை தந்துள்ளோம். இது தவிர ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய தமிழ்நாட்டிலிருந்து ஒரு பொறியாளரை கேட்டார்கள். தமிழக அரசும் அவரை நியமனம் செய்திருக்கிறது. இந் நிலையில் பாலாற்றில் அணை கட்டுவதற்கான எந்த பணிகளையும் செய்யக்கூடாது என்று மத்திய நீர்வள ஆணையம் உத்தர விட்டுள்ளது. வழக்கு [^]ம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆனால் ஆந்திர மாநில அரசு அணை கட்டுவதற்கு 15 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்திருப்பது எனக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் அளிப்பதாக உள்ளது.

இந்த அமைச்சர் தமிழகத்தையும் நன்கு அறிந்தவர். அவரிடம் அணை பற்றிய விவரங்களை முழுமையாக தெரிவித்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். ஒருவேளை தெரிந்திருந்தும் அவர் இந்த முடிவுக்கு வந்திருந்தால் அவரை நானே நேரில் சந்தித்து நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவேன்.

அவரிடம் தமிழக அரசின் சார்பில் உண்மை நிலவரங்களை தெரிவித்து அணைக்கு அனுமதி வழங்குவது உகந்ததல்ல என்று தெரியப்படுத்துவேன் என்றார் துரைமுருகன்.

விட்டுக் கொடுத்துவிட்டு போராடுவதே தமிழர்களின் சிறப்பு!
தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழன் தான்!

Friday, June 19, 2009

தலையில்லாக் கோழிகள் - தலைவர்களே வாருங்கள்

தலைவர்களே வாருங்கள்
தமிழர்களைத் தரித்திரமாக்கி
சரித்திரம் எழுதலாம்
அதனை வாசிப்பதற்கு
வடக்கத்தியானை அழைக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
தனித்தமிழில் எழுதலாம்
அவர்களை படிக்கப் பழக்கலாம்
அடிமைத் தமிழரின்
பிரியாணிக்குக் கொடுக்கும்
பணத்தை மிச்சப் படுத்தி வைக்கலாம்

நீங்கள் எழுதும்
தமிழ் நூல்களை
அவர்களுக்குக் கொடுத்துவிட்டு
எடுத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
அடிமைகள் இல்லாத
நாட்டை உருவாக்க முனைந்து
அடிமையாக வாழலாம்

தலைவர்களே வாருங்கள்
தினந்தோறும்
தமிழ் பிணங்கள் விழுகின்றன
சிவலோக பதவிக்குப் பிறகும்
பதவியைத் தேடலாம்

தலைவர்களே வாருங்கள்
தொண்டைக் குழியைத் தாண்டிவிட்டால்
உண்ணும் அறுசுவை உணவும்
அருவெறுக்கத்தக்க மலமாகிப் போகும்
நாவால் சுவைத்துப் பிழைக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
பிணத்திடம் காசுகள் தலை வணங்கும்
பணம் வேறு வழியில் போகும்
அண்டாது
நடை பிணமாக இருந்து
பிழைத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
நடைபிணங்களை நாடாள
அழைப்போம்
அடிமைகளை அரசாள
கூப்பாடு போடுவோம்

தலைவர்களே வாருங்கள்
வேற்று கிரக
மனிதருக்கும் தமிழ்
கற்றுக் கொடுக்கலாம்

தமிழன் அழிந்த பின்னும்
பிழைத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
கல்லறைகள் உடைக்கப் பட்டதை
காவியமாக எழுதலாம்
கழிசடைத் தமிழன்
கடைசிவரை இருப்பான்
படிக்கச் சொல்லலாம்
வயிற்றுப் பிழைப்புக்கு ஆகும்

தலைவர்களே வாருங்கள்
புல் பூண்டு மண் மரம் மட்டை
எல்லாம் அழிந்தாலும்
மனிதன் பிறப்பான் என்ற
நம்பிக்கையோடு இருக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
பிழைப்பு நடத்தலாம்
கல்தோன்றி மண்தோன்றா
காலம் மீண்டும் வரும்
முதலில் தமிழன் பிறந்தால்
அவனிடம் தமிழை
விற்றுத் தீர்க்கலாம்






Tuesday, June 16, 2009

மலேசியா - சிங்கப்பூருக்கு இடையே நவீன தமிழ் பாலம்




சிங்கையில் நவீன தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம்

மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் நூல் அறிமுகம்

சிங்கப்பூர் இலக்கிய உலகத்தில் தானும் ஒரு தமிழ் நதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் திரு.பாலு.மணிமாறன். கவிதைகள், சிறுகதைகள் போன்ற படைப்பிலக்கியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர்,தமிழ் உணர்வாளர். இலக்கியப் பணியின் அடுத்த கட்டமாக, தனது தங்கமீன் பதிப்பகத்தினூடாக வளரும் எழுத்தாளர்கள்,கவிஞர்கள், இலக்கியவாதிகளின் படைப்புகளை அச்சேற்றி வருபவர்.

அண்மையில் பிரபல மலேசிய தமிழ் எழுத்தாளர் சை.பீர் முகம்மது அவர்களின் "பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்" என்கிற சிறுகதைத் தொகுப்பை தனது பதிப்பகத்தினூடாக சிங்கையில் வெளியிட முழு முதல் காரணமாயிருந்தார்.
அந்நிகழ்ச்சியினூடாக மலேசிய எழுத்தாளர் இளவல் திரு.கே.பாலமுருகன் அவர்களையும், சிங்கை இலக்கிய உலகுக்கு அறிமுகப் படுத்தும் நிகழ்வாகவே அமைத்திருந்தார்.

அடுத்து நிகழ்ந்த வாசகர் வட்டம் நிகழ்வுக்கு மலேசிய எழுத்தாளர்கள் புண்ணியவான், கே.பாலமுருகன், சாசின் தேவராஜன், நவீன் உள்ளிட்டோர் வந்திருந்து திரு கே.பாலமுருகன் அவர்களின் "அநங்கம்" இலக்கிய சிற்றிதழை சிங்கை இலக்கிய வட்டத்துக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது திரு சாசின் தேவராஜன் அவர்கள் நடத்திவரும் மௌனம் கவிதை சிற்றிதழைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

இது போன்ற நிகழ்வுகளுக்கு, மலேசிய மற்றும் சிங்கை எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாக கவிஞர் திரு.பாலு மணிமாறன் அவர்களும், கவிஞர் திரு பாண்டித்துரை அவர்களும் இருப்பது மனசுக்கு இதமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆறுதலாகவும் இருக்கிறது.

மலேசியாவில், சிங்கையைப் போன்று தமிழ் நூலகங்களை காண்பது அரிது. ஆதலினால், அங்கிருந்து வரும் தமிழ் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் வேட்கையை, மொழியுணர்வை, இன உணர்வை நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறோம். சிங்கையில் எல்லா நூலகங்களிலும் தமிழுக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார்கள். அங் மோ க்யோ போன்ற நூலகங்களிலும், தேசிய நூலகத்திலும் தமிழ் நூல்களை நிறைவாக வைத்திருக்கிறார்கள். அதனால் சிங்கையில் இருப்பவர்களுக்கு தமிழ் நூல்களைப் படிப்பதற்கு எளிதான சூழல் நிலவுகிறது.


அந்தவகையில், சிங்கை தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில், திரு பாலு மணிமாறன் அவர்களின் தங்கமீன் பதிப்பகத்தின் சார்பாக மலேசிய எழுத்தாளர்கள் திரு.சாசின் தேவராஜன் அவர்களின் "அரிதாரம் கலைந்தவன்" சிறுகதைத் தொகுப்பு மற்றும் திரு.கே.பாலமுருகன் அவர்களின் "கடவுள் அலையும் நகரம்" கவிதைத் தொகுப்பு ஆகிய இரண்டு நூல்கள் கருத்தரங்கத்திற்கு பின் அறிமுகம் கண்டன.

நூலாசிரியரே நூலை வெளியிடும் புதிய முயற்சியை காண முடிந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இறைவணக்கம் அல்லது தமிழ்த் தாய் வாழ்த்து பாடப் படவில்லை. நூலைப் பற்றிய ஆய்வு அல்லது விளக்க உரையையும் நூலாசிரியர்களே நிகழ்த்தினார்கள். முதல் நூலாக திரு சாசின் தேவராஜன் எழுதிய "அரிதாரம் கலைந்தவன்" சிறுகதைத் தொகுப்பை அவரே வெளியிட கவிமாலை காப்பாளர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அடுத்து திரு.கே.பாலமுருகன் எழுதிய "கடவுள் அலையும் நகரம்" கவிதைத் தொகுப்பை அவரே வெளியிட சிங்கப்பூர் எழுத்தாளர் இராம கண்ணபிரான் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சி நெறியாளராக அருமை நண்பர் கவிஞர் திரு.பாண்டித்துரை அவர்கள் சிறப்பாக பங்காற்றினார்கள்.

நூல் வெளியீட்டுக்கு முன்பு நடைபெற்ற கருத்தரங்கில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் திரு.இராம கண்ணபிரான் மற்றும் திருமதி சித்ரா இரமேஷ் ஆகியோர் நவீன இலக்கியத்தில், நவீனத்துவம், பின் நவீனத்துவம்,யதார்த்தம், மாய யதார்த்தம், கட்டுடைத்தல் போன்ற நவீன படைப்பிலக்கிய கூறுகளை ஆங்கில இலக்கியத்துடன் ஒப்பீடு செய்து சிறப்பான எடுத்துக்காட்டுகளுடன் மேற்கோள்களையும் ஒன்றிணைத்து உரையாற்றியது நிறைவாக இருந்தது. பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று கருதுகிறோம்.

நூல் வெளியீட்டின் தொடர்ச்சியாக அனைவரும் நூல் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நடந்தது. பின்னர் சில மணித்துளிகள் சிற்றுண்டி இடைவேளை, நிறைவடைந்தவுடன், மலேசிய எழுத்தாளர் திரு.சை.பீர் முகம்மது மற்றும் சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன்(சென்னை), எழுத்தாளர் நா.கண்ணன் (ஜெர்மனி) ஆகியோருடன் இலக்கியம் சார்ந்த தொலைபேசி கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் அங்கம் நடைபெற்றது.

விழாவில் கவிஞர் திரு ந.வீ.விசயபாரதி, ஆசியான் கவிஞர் கா.து.மு.இக்பால், பாத்தென்றல் இளமாறன், சிங்கப்பூர் தினமலர் திரு புருஷோத்தமன், திரு பாண்டியராஜன், பிரான்ஸில் இருந்து வந்திருந்த ஈழத்து உடன்பிறப்பு திரு ஸ்ரீரங்கன் (தமிழ் ஒலி வானொலி), பதிவர்கள் கோவி.கண்ணன், முகவை இராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், பல இலக்கிய நிகழ்வுகளின் நான் கண்ட சில பல முகங்களைக் காண இயலவில்லை.

மொத்தத்தில் இந்நிகழ்வை பயனுள்ளதாக ஆக்கிக் கொடுத்த, கவிஞர் திரு பாலு மணிமாறன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

Tuesday, June 9, 2009

ஈழ மக்கள் எங்கள் இரத்தம் - இரத்தம் கொதிக்கிறது


ஈழத்தில் தமிழர்கள் படும் பாட்டையும், வேதனையையும் நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது என்று ராஜ்யசபாவில் பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் வேதனையுடன் குறிப்பிட்டார்.

ராஜ்யசபாவில் திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் சார்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து முக்கியமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் சார்பில் பேசிய ஜெயந்தி நடராஜன், ஈழத் தமிழர் நிலை குறித்து கவலை தெரிவித்தார். அதிகாரப்பகிர்வை இலங்கை அரசு செய்தே ஆக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதேபோல திமுக சார்பில் பேசிய கனிமொழியும், போர் முடிந்தும் கூட இலங்கையில் தமிழர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது வேதனை தருவதாக தெரிவித்தார்.

இவர்களை விட ஒருபடி மேலே போன பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ், நன்னெறியிலிருந்து ஒரு வாக்கியத்தை இந்தியில் குறிப்பிட்டு ஈழத் தமிழர் நிலையை நினைத்தால் ரத்தம் கொதிப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.

சுஷ்மா பேசுகையில், மனித உடலில் ஏதாவது ஓர் அங்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் கண்கள் கண்ணீர் விடுகின்றன.

இலங்கையில் வசிப்பவர்கள் இந்தியாவிலிருந்து தூரத்தில் இருக்கலாம். ஆனால், அவர்களது ரத்தமும், நமது ரத்தமும் ஒன்றுதான்.

அவர்கள் துன்பப்படுவதைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது. பெண்களும், சிறார்களும் பாதிக்கப்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.

இலங்கையில் தமிழ் சகோதர, சகோதரிகள் மீது நடத்தப்படும் தாக்குதலையும், குழந்தைகள் பசியால் தவிப்பதையும் பார்த்துக் கொண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? என்றார் சுஷ்மா.

பின்னர் நன்னெறியில் வரும் "பெரியவர்தம் நோய் போல் பிறர் நோய் கண்டுள்ளம்'' என்று தொடங்கும் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.

சொரணை குறைவான, ஜனநாயக பிறவிகளான தமிழக எம்.பிக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கும் தமிழர்களின் அன்பிற்குரிய தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ்!








கோவி.கண்ணனும், நையாண்டியும் - சிக்கலின் நான்

முன்னணி பதிவர்களான திரு கோவி.கண்ணன் அவர்களும், திரு நையாண்டி நைனா அவர்களும் இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் என்னையும் மாட்டி விட்டிருக்கிறார்கள். எல்லாம் போட்டு வாங்குறதுக்குன்னு மட்டும் நல்லா தெரியுது.

படிக்கிறவங்க கண்ணுல இரத்தக்கண்ணீர் வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கோவி.கண்ணன் மற்றும் நையாண்டி நைனா என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை!

முன்னணி கலைஞரான கலைஞர் மு.கருணாநிதி போன்றவர்கள் திரு மோகன் கந்தசாமி போன்றவர்களுக்கு செவ்வி வழங்கியிருக்கும் போது என்னுடைய செவ்வி பின்னணி செவ்வியாக மட்டுமே பார்க்கப் படும் என்பது திண்ணம்.

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
இந்தக் கேள்வியெல்லாம் சாதனை பண்ணுனவங்க கிட்ட கேக்கணும். சோதனை பண்ணுறவங்களுக்கிட்ட கேட்கக்கூடாது.
என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்(அவருடைய தமிழ் பற்று). குழந்தையாக இருக்கும் போது என் தாய் சுப்பிரமணிய பாரதி என்றழைத்து மகிழ்ந்தார். பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன். உச்சரிப்புப் பிழை பொருட்பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நல்ல நோக்கத்தில்...! மற்றபடி யாரையும் சோதிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குக் கிடையாது.

2.கடைசியாக அழுதது எப்போது..?
இப்போதெல்லாம் மரத்துப் போன இதயங்களை உடையவர்களைக் கண்டு என் கண்கள் கூட அழ மறுத்துவிடுகின்றன, மனம் மட்டும் அழுகையை நிறுத்தாத போது...!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
கையெழுத்து அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். எழுதும் போது ரசித்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.(கையெழுத்து நல்லா இருந்தா தலைஎழுத்து நல்லா இருக்காது போன்ற உரையாடல்களை நம்புவதில்லை)

4.பிடித்த மதிய உணவு..
எல்லா சைவ உணவுகளையும் விரும்பி சாப்பிடுவேன். பரங்கிக்காய் மட்டும் பிடிக்காது.அசைவ உணவுகளில், நண்டு வறுவல் பிடிக்கும், இறால், விரா மீன், வாளை மீன் பிடிக்கும். மட்டன் பிடிக்கும், நம் தமிழகத்தில் மட்டும் தான். சிங்கையில்ஆட்டுக்கறி( மட்டன்) சாப்பிட அவ்வளவாக பிடிப்பதில்லை. சிங்கையில் ஒரு குறிப்பிட்ட உணவகங்களில் ஆட்டுக்கறி நன்றாக இருக்கும்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்கிற படியால், சீன உணவில் லக்சா, பிஷ் சூப், பிஷ் பால் நூடுல்ஸ் இன்னபிற உணவு வகைகள் பிடித்தமானது.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
என்னைப் பார்த்தவுடன் பழக வேண்டும் போல் இருக்கிறது என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் தான் நானும்...! வாங்க பழகலாம் என்னும் பிளாஸ்டிக் பழக்கம் எனக்கு ஒத்து வராது.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடலும் அருவியும் எங்க வீட்டுக்கு பக்கத்துல இல்லை. எனக்குப் பிடித்தாலும் அதனால் எனக்கு பெரிய பலன் ஒன்றும் இல்லை. சுற்றுலா சென்றால் அருவியில் குளிக்கத்தான் பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..
முகத்தை, கண்ணைப் பார்த்து பேசுவதே முறையாகும். அதுதான் எனக்கும் பிடிக்கும். மண்ணைப் பார்த்து பேசும் பெண்ணானாலும் கண்ணைப் பார்க்கவே விரும்புவேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது: ஓரளவுக்கு உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பது, முடிந்தவரை அதைக் காப்பாற்றி வருவது.
எழும்பூரில் காத்திருப்பவரிடம், நான் இந்தா வந்துடுவேன் சைதாபேட்டை வந்துட்டேன் என்று தாம்பரத்தில் இருந்து கொண்டு சொல்வது எனக்குப் பிடிக்காது.
பிடிக்காதது: ஒன்பது வேலைகளை ஆற போட்டுவிட்டு பத்தாவது வேலை வந்தவுடன் அதனையும் சேர்த்து சோறு, தூக்கம் எதுவும் பாராது ஒரே மூச்சில் முடிக்க நினைப்பது.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
பிடித்த விசயம் : நாம் மறந்த பலவற்றை ஞாபகம் வைத்திருப்பது. நோட்டு புத்தகம் வாங்குற செலவு மிச்சம்.
பிடிக்காத விசயம் : நாம் தெரிவிக்கும் கருத்துகளை பெரும்பாலும் ஆமோதிப்பது.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?

ஒரு சில மனிதர்களுடன் வாழும் வாய்ப்பு கிட்டியிருப்பதால் அந்த வருத்தம் இதுவரை ஏற்படவில்லை. இருப்பினும் நம் உறவுகள் அனைவரையும் விட்டுவிட்டு சிங்கை போன்ற இயந்திர உலகில் வாழ்வதற்கு யாருக்குத் தான் பிடிக்கும்.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
இந்த கேள்வியை கேட்டவர் என்னை காதலிக்க விரும்புகிறாரா? நான் திராவிட பாரம்பர்யத்தில் வந்த மஞ்சள் சட்டையும் போடவில்லை, அண்ணாயிசத்தை குழைத்த பச்சை கலர் சிங்குஜாவும் இல்லை. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..
பாட்டா? என் பாட்டையே நீங்க கேட்பீங்களா என்று தெரியவில்லை. இதுல நான் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் வேறா?

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
தொடர்ந்து தட்டச்சு மட்டும் செய்வதால், பேனாவாக ஆனால் எனக்கு இரண்டு வேலைதான். இருப்பினும் பேனாக்களிடம் ஏன் நிற வெறி காட்ட வேண்டும் என்பது எனது கேள்வி. தொடர்ந்து நிறம் சம்பந்தப் பட்ட கேள்விகளையே கேட்டுக் கொண்டு வருவதால், கேள்விகளைக் கேட்டவர் நிற வெறியுடையவரோ என சந்தேகிக்கிறேன்.

14.பிடித்த மணம்..
தமிழ் வாசம் வீசும் மணம் மட்டுமல்ல மானமும், மனமும் கூட பிடிக்கும்.

15.நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..
"டொன் லீ" சிவா தயாளன் - எமது ஈழத்து உறவு, நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்.
"நிஜமா நல்லவன்" பாரதி - கவிதைகள் எழுதுவார், பின்னூட்டங்களின் பின்னிப் பெடலெடுப்பவர், வாசிப்பு தேடல் உடையவர்.
"பித்தன்" விஜய் - மேன்மையான சீரிய கருத்துகளை கூரிய சொற்களால் கட்டமைப்பார். வாசிப்பை நேசிப்பாய் கொண்டவர்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..
இதை அனுப்பிய திரு கோவியார் எண்ணற்ற பதிவுகள் எழுதியுள்ளதால் எதை விடுப்பது எதைத் தொடுப்பது என்று தெரியவில்லை. கோவி கண்ணன் அவர்களின் பெரும்பாலான பதிவுகள் பிடித்தவையே!

இன்னொரு பதிவரான திரு நையாண்டி நைனா அவர்களின் பதிவுகளும் பெயருக்கேற்றாற்போல் நகைச்சுவை ததும்ப இருக்கிறது. பெரும்பாலான இவரது பதிவுகளும் எனக்கு பிடித்தவையே!

17.பிடித்த விளையாட்டு...
கிரிக்கெட் என்னும் பணக்கார விளையாட்டு அல்ல.

18) கண்ணாடி அணிபவரா?
ஏன் வயது 40 ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்களா? இல்லை.

19).எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...

இயல்பான, நகைச்சுவைகளை உள்ளடக்கிய படமும் பிடிக்கும். பிரமாண்டமும் பிடிக்கும். ஏன் உங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையா? அதற்கான கருத்துக் கணிப்பு போல் தெரிகிறதே, அதான் கேட்டேன்.

20.கடைசியாக பார்த்த படம்..
இப்போது ஏதும் பார்க்க வில்லை. சென்ற ஆண்டு பார்த்தது சேரனின் மாயக்கண்ணாடி. நீங்க படம் எடுக்கனும்னு நினைத்தால் சேரனை வைத்து எடுங்கள் அல்லது சீமானை வைத்து எடுங்கள்.

21.பிடித்த பருவ காலம்...
தை - அதுதான் தமிழனின் திருநாள் தொடங்கும் மாதம், அறுவடை செய்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் காலம்..

22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? - க.ப.அறவாணன் எழுதியது பலருக்கு பயன் படாத புத்தகம், எனக்காவது பயன்படுகிறதா என்று பார்ப்போம் என்ற ஒரே நம்பிக்கையோடு படிக்கிறேன்.

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
கணக்கு பண்ணி மாற்றுகிற நிரந்தர வேலையெல்லாம் கிடையாது. பெரும்பாலும் குழந்தைகளின் படங்களை போடுவது உண்டு. தற்போது போட்டிருப்பது என் மகன் நரேன் அவர்கள் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பாரதியார் வேடமிட்ட படம்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
பிடித்த சத்தம் : அழகின் சிரிப்பு
பிடிக்காதது: அவசர வேலையாக இருக்கும் போது தெரிந்தே நம்மை அழைக்கும் சத்தம்.

25.வீட்டை விட்டு சென்ற அதிகபட்ச தொலைவு ?
சிங்கப்பூர் - மலேசியா

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
தனித் திறமைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இனிமேல் இருப்பதாக யாரவது சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
ஓரிடத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டால் அது இயற்கை என்று கூறிவிட்டு, இன்னொரு இடத்தில் வெறும் தாக்குதலுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் தன்மையும் போக்கும்.

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
சாத்தான் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாததால், நம்பிக்கை உள்ளவர்களிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தால் நலம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..
நான் போன இடங்களில் குற்றாலம் பிடித்தது.

30.எப்படி இருக்கணும்னு ஆசை..
எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லாத நிலை வேண்டும் என்று நினைக்கிறேன். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
சமைப்பது - அது இல்லை என்றால் வேலைக்கு ஆகாது.
அவர்கள் இருக்கும் போது சமைக்க விரும்பினால் அவர்கள் சமைக்க விடுவதில்லை. நாம் சமைப்பது பிடிக்கவில்லை என்று சொல்வதுமில்லை. நன்றாக இருக்கிறது என்று மட்டும் கிளி பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
காஞ்சி காம கோடி பீடாதிபதி போன்ற ஆட்கள் சொன்னா நம்புவீங்க. நான் சொன்னா நம்புவியளா? இருந்தாலும் சொல்றேன்,
கட்டுமரம்! வாழ்க்கை என்பது ஓடம் என்று சொல்வார்கள். நம்பாதீர்கள்.








Monday, June 8, 2009

கடிதம் எழுதி கண்டிக்க வலியுறுத்துவோம்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது வெள்ளைக்காரர்கள் இனவெறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த 1 மாதத்தில் மட்டும் 10 இந்தியர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். நேற்று இந்திய மாணவரின் காருக்கு தீ வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு இந்திய மாணவரை தாக்கி உள்ளனர். அவரது பெயர் கமல்ஜித், மெல்போர்ன் நகரில் படித்து வந்த அவர் நள்ளிரவு 1.40 மணிக்கு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வெள்ளைக்கார இளைஞர்கள் அவரை சுற்றி வளைத்து தாக்கினார்கள். அவரை தரையில் தள்ளி இரும்பு கம்பியால் அடித்தனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்தம் வெளியேறி மயங்கி கிடந்தார்.அவரை இன்னொரு இந்திய மாணவர் பார்த்து ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். கமல்ஜித் மீது 2 வாரத்துக்கு முன்பும் தாக்குதல் நடந்தது. அவர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது வெள்ளைக்காரர்கள் முட்டையை வீசி அப்போது தாக்கினார்கள்.

ஆஸ்திரேலிய மாணவர்கள் இந்திய மாணவர்களை தொடர்ந்து தாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுத விழைகிறோம்.

இருப்பினும் ஆஸ்திரேலியா ஒரு இறையாண்மை மிக்க நாடு, இந்தியாவிடம் நட்பு பாராட்டும் நாடு, அதனால் அந்த நாட்டு உள் விவகாரங்களுக்குள் தலையிட முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விடயம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு கொண்டு செல்லப் பட்டால் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஒரு நாட்டில் பிரச்சனை என்று வரும் போது தாக்குதல், காயங்கள் ஏற்படுவது இயற்கையே. இதெல்லாம் மனித உரிமை மீறல் ஆகாது.

இந்திய மாணவர்களின் நடவடிக்கைகளை ஒழிக்கப் பாடுபடுவோம், அதற்கு ஆஸ்திரேலியாவிற்கு எந்த உதவியை வேண்டுமானாலும் செய்ய இந்தியா கடைமைப் பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா எவ்வளவு இறையாண்மை மிக்க நாடோ, அதை விட இறையாண்மை மிக்க நாடு இந்தியா.

அதனால் இது விடயமாக யாரும் குரல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். குரல் கொடுப்பவர் மீதுதான்...!

உயிர் என்பது, அது ஈழமக்கள் உயிர், இலங்கை மக்கள் உயிர், பாலஸ்தீனமக்கள் உயிர், எத்தியோப்பிய மக்கள் உயிர், இந்திய மக்கள் உயிர், இந்திய மாணவர்கள் உயிர் என்று நாங்கள் என்றும் வேற்றுமை பாராட்டியதில்லை. எல்லா உயிரும் எங்களுக்கு ஒன்றுதான்.
அதனால் நாங்கள் இன்றும் நிராயுதபாணியாய் வேடிக்கை பார்க்கிறோம்.
என்ன செய்வது!?

இதுதான் இன்றைய நமது நிலை!?
என்ன கொடுமை ஐயா இது!?

Friday, June 5, 2009

உண்மை சுடும் - நமக்காக கண்ணீர் வடிக்கும் நீதி

இலங்கையில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடைத் தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனுபவித்துவரும் இன்னல்களையும், துயரத்தையும் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை என்று சிறிலங்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா கூறியுள்ளார்.

நெகம்போ மாவட்டத்தில் மரவிலா என்று இடத்தில் நீதிமன்ற வளாகத்தை திறந்துவைத்து பேசினார் தலைமை நீதிபதி சரத் என். சில்வா. அப்போது அப்பாவித் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ‘நிவாரண கிராமங்களுக்கு’ தான் சென்று பார்த்த அனுபவத்தை விவரித்தார். அவருடைய பேச்சு முழுமையாக எம் டிவியில் ஒளிபரப்பானது.

“வன்னியில் இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்களுக்குச் சென்றேன். அங்கிருப்பவர்கள் படும் இன்னல்களையும், துயரைத்தையும் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை. செட்டிகுளத்தில் உள்ள முகாம்களுக்கு நான் சென்று பார்த்தேன். அங்கு நிலவும் பரிதாபகரமான நிலையை என்னால் விளக்க முடியவில்லை. அவர்கள் கடுமையான மன அழுத்தத்திலும், விவரிக்க முடியாத துயரத்திலும் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

இங்கு நாம் கட்டிடங்களை கட்டிக்கொண்டு வாழ்கின்றோம், ஆனால் அவர்கள் அங்கு கூடாரங்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஒரு கூடாரத்தில் 10 பேர் வாழ்கின்றனர். கூடாரத்தின் மையத்தில் இருப்பவர்தான் நேராக நிற்க முடியும். கூடாரத்தின் மூலைக்களுக்குச் சென்றால் அவர்கள் கழுத்து முறிந்து போகும்.

உடல் கழிவை வெளியேற்றிக் கொள்வதற்குக் கூட 50 முதல் 100 கஜ தூரமுள்ள நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இப்படித்தான் செட்டிக்குளம் முகாம்களில் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பார்த்து புன்னகைக்க முயன்றேன், ஆனால் முடியவில்லை. அவர்களிடம் எனது உணர்வுகளை தெரிவிக்க முயன்று தோற்றுப் போனேன். அவர்களுடைய துயரத்தைக் கண்டு நாங்களும் அழுகின்றோம் என்று கூற முயன்றேன், முடியவில்லை. உங்களுக்கு நாங்கள் புதிய ஆடைகளைத் தருவேன் என்று கூற முயன்றேன், முடியவில்லை.

இந்த நாட்டில் ஒரே இனம் தான் உள்ளது என்றோ, பெரும்பான்மை என்றும், சிறுபான்மை என்றும் ஏதுமில்லை என்றும் நாம் கூறுவோமானால் அது அப்பட்டமான பொய்யாகும்.

இந்த நாட்டின் சட்டங்களில் இருந்து அவர்களுக்கு நியாயம் கிடைக்காது. அவர்களின் இன்னல்களும், துயரங்களும் நமது நாட்டின் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்படுவது இல்லை. இதை நான் வெளிப்படையாக கூறுகின்றேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம்” என்று நீதிபதி சரத் என். சில்வா பேசியுள்ளார்.
நன்றி: வெப் துனியா செய்தி


உண்மை சுடும் - நமக்காக கண்ணீர் வடிக்கும் நீதி!
நமக்காக மலர்ந்திருக்கும் மாற்றான் தோட்டத்து மல்லிகை!
உண்மைகள் ஒவ்வொன்றாக பொத்துக் கொண்டு வெளிவரும்!




Thursday, May 28, 2009

சேது நாயகனைக் கவ்விய சூது - தஞ்சைக்கு விரைந்த டி.ஆர். பாலு


கருணாநிதி,கா.மு.செரீப்,துரைமுருகன்,டி.ஆர்.பாலு

திமுகவில் மத்திய அமைச்சர் பதவி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் குடும்ப நலன் மேலோங்கி தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த டி.ஆர்.பாலு தஞ்சை அருகே உள்ள தனது கல்லூரி விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கிறார். துணை சபாநாயகர் பதவியும் அவருக்கு தர மத்திய அரசு முன்வராதது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
.
மத்திய அமைச்சரவையில் தாங்கள் கேட்ட இடங்கள், இலாகாக்கள் கிடைக்காததால், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப்படும் என திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறி வந்தார்.

எனினும், தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து, காங்கிரஸ் பார்முலாவை ஏற்று கொண்டு மத்திய அமைச்சரவையில் இடம்பெற திமுக தலைவர் ஒப்புக்கொண்டார். இதன்படி, மு.க.அழகிரி உள்ளிட்டோருக்குப் பதவி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேற்று டெல்லிக்கு விரைந்தனர். ஆனால், நாடாளுமன்றக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு டெல்லிக்குச் செல்லாமல் திடீரென புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே புனர்குளத்தில் உள்ள அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் கிங்ஸ் பொறியியல் கல்லூரிக்கு வந்து தங்கியுள்ளார்.

அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படாததால், அதிருப்தி யடைந்த அவர் இங்கு தங்கியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அவருக்கு நெருக்கமான 2 நண்பர்களும், கல்லூரியின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அவரது செல்போன் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததுடன், யாரையும் சந்திக்க விரும்பாமல், யாரும் கேட்டால் தான் இல்லை என்று கூறும்படி கல்லூரிக்கு சம்பந்தப் பட்டவர்களிடம் அவர் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

டி.ஆர்.பாலுவுக்கு துணை சபாநாயகர் பதவியாவது தர வேண்டும் என்று திமுக கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அவையை நடத்துவதற்கு மிகுந்த பொறுமையும், சாதூர்யமும் வேண்டும். டி.ஆர்.பாலு கோபக்காரர் என்பதால் அவர் இப்பொறுப்புக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வ்வ்வும்!
இறுதியில் தர்மமே வெல்ல்ல்ல்லும்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
எல்லாம் அந்த ஸ்ரீமான் ராமன் அவர்களுக்கே வெளிச்சம்!
அண்ணா நாமம் வாழ்க!

பொறுப்புள்ள தமிழக முதல்வரின் பதில் என்ன?

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ராஜபக்சே அரசு பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது. நிராயுதபாணிகளாகத் தப்பியோடிய தமிழர்களை குண்டுவீசி தாக்கி படுகொலை செய்திருக்கிறது.

இந்தக் குற்றத்திற்காக ராஜபக்சே மீதும், அவரது சகாக்கள் மீதும் போர்க் குற்ற வழக்குத் தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு திரண்டு வருகிறது.

அதற்கு முதல் படியாக ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான விசாரணை தொடங்கியிருக்கிறது. கொலை வெறி பிடித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், தென்அமெரிக்க நாடுகளும் உலக அரங்கில் அணி திரண்டு நிற்கின்றன.

ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் நடக்கும் விசாரணையை முடக்கிப் போட்டுவிட வேண்டும் என்று இலங்கை பகீரத முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நமது பகை நாடுகளுடன் இந்தியாவும் கைகோர்த்துக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது.

இத்தகைய விசாரணை இப்போது தேவையில்லை என்கிற அளவுக்கு மனித உரிமை மன்றத்தின் முதல் நாள் விசாரணையில் இந்தியா வாதிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சே அரசின் துரோகத்திற்கு இந்தியா துணை போகக் கூடாது என்று உலகத் தமிழர்களெல்லாம் குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்கு வலிமை சேர்க்கும் வகையில், ஓங்கி குரல் எழுப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதலமைச்சருக்கு இருக்கிறது.

இலங்கை இறையாண்மை மிக்க நாடு; அதன் உள்விவகாரங்களில் தலையிடுவதன் மூலம், அதன் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதிக்கப்பட்டுவிடும் என்று இந்தியப் பேரரசு தொடர்ந்து சொல்லி வருவதை தமிழகத்தின் முதலமைச்சரும், எதிரொலித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.


ஈழத் தமிழர்களை ஈவு இறக்கமின்றிக் கொன்று குவித்தது தவறு என விசாரணை நடத்த வேண்டும் என்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும் என்றால், அதற்கு காரணமான போருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவியிருப்பது உள்விவகாரங்களில், தலையிட்டதற்கு ஒப்பாகாதா?


இந்தியா எங்களுக்கு உதவி வந்திருக்கிறது என்று இலங்கைத் தலைவர்கள் பலரும், பலமுறை பகிரங்கமாகவே அறிவித்து நன்றி தெரிவித்து வந்திருக்கிறார்கள். இன்றளவும் இது மறுக்கப்படவில்லை.

இனப் படுகொலைக்கு எதிரான விசாரணையை ஆதரிப்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது என்றால், அதற்கு உதவி இருப்பதும், உள்விவகாரங்களில் தலையிட்டதற்கு ஒப்பானதுதான் என்று இந்திய அரசுக்கு உணர்த்த தமிழகத்தின் முதலமைச்சருக்குத் தைரியம் இல்லாமல் போனது ஏன்?

மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை முடக்கிப் போட இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சி தமிழர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் நம்புகிறார்கள்;

தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களின் எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டு இலங்கைக்குத் துணை நிற்க வேண்டாம் என்று கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிற முதலமைச்சர், இப்போது ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரிந்து விட்டதற்குப் பின்னர் என்ன பரிகாரம் காணப்போகிறார்?’’ என்று தெரிவித்துள்ளார்.

இதை வெளியிட்டவரின் நம்பகத் தன்மை, கேள்வி கேட்கும் அருகதை போன்ற கேள்விகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு கொஞ்சம் சிந்தித்தால் உண்மை விளங்கும். இதற்கு பொறுப்புள்ள தமிழக அரசும் முதல்வரும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?




கருணாநிதியை மதிக்கும் மத்திய அரசும், சோனியா-மன்மோகன் கம்பெனியும்?


இந்திய மற்றும் அனைத்துலக விமானங்களும், தொலைபேசி சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கும் இவ்விக்கேட்டான நிலையிலும் அந்த சேவைகள் வரும் வரை காத்திராமல், பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருக்கிறார்.

பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,
ஒரு புறத்தில் ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவது ஒரு நாட்டின் இறையாண்மை, எல்லை ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் என்றாலும் இலங்கையை ஒரு விசேஷ நிலையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளில் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு தாக்கல் செய்துள்ள நகல் தீர்மானம் இலங்கை தமிழர்கள் நலன்களுக்கு எதிரானது என்று உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் பரவலாக நம்புகிறார்கள்.

எனவே இலங்கை தமிழர்களின் உணர்வுகள் மற்றும் அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீங்கள் இந்த விஷயத்தில் தகுந்த முடிவு எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.


கருணாநிதியின் கடிதத்திற்கு மத்திய அரசு வழங்கிய மரியாதையைப் பாருங்கள்!


இந்தியா, சீனா, கியுபா,எகிப்து உட்பட 47 நாடுகள் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கை அரசை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதில் ஏனைய நாடுகள் தலையிடுவது இலங்கை அரச விருப்பத்தைப் பொறுத்தே அமைய வேண்டும் என்றும் இந்தியா உட்பட 26 நாடுகள் விருப்புத் தெரிவித்ததற்கிணங்க இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மனித உரிமை அமைப்புக்களையும், உதவி அமைப்புக்களையும் அனுமதிப்பது தொடர்பாக இலங்கை அரசு தேவைப்பட்டால் அனுமதி வழங்கலாம் எனவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முடியாதெனவும் இந்த நாடுகளின் பெரும்பான்மை வாக்குகளுக்கிணங்க தீர்மானிக்கப்பட்டது.

இனியும் பயனற்ற கடிதங்களை எழுதுவதை விடலாமே?