Friday, February 29, 2008

சென்னை வாசத்தால் கடன் கழியவில்லை

காலை எழுந்தவுடன்
கடுங்குளிர்

அக்கம் பக்கத்திலே
அளவு கடந்த கூட்டம்

கூட்டுரிமைப் பொதுக் கழிப்பறை
நிரம்பி வழிந்தது
நீரில்லாமல்
மக்களால்

மாநகரக் கழிப்பறைக்குச் சென்றால்
மக்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள்

காசு கொடுத்தால் இங்கு கொஞ்சம்
கழுவத் தண்ணீர் கிடைக்கும்
வரிசை கழிய வேண்டுமே முதலில்

வரிசை கழிந்து
வந்து பார்த்தால்

கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட கழிவறை
கதவு மட்டும் தான் இல்லை

தண்ணீர் கிடைக்கும்
ஊற்றும் போது மட்டும்

நேரத்தைக் கழிக்கக் கூடாது
சீக்கிரம் வாங்க என்கிற சத்தம்
காதைப் பிளக்கும்
நாசி வேறு பிளக்கப்படுகிறது

மொத்தத்தில்
காசு மட்டும் கழிந்தது
கடன் கழியவில்லை



அன்புடன் ஜோதிபாரதி

Thursday, February 28, 2008

என்றும் சுஜாதா


திருவரங்கக் காவிரி

கொள்ளிடம் சென்று

கடலில் கலந்து விட்டது

அதன் பிரதான நதியும்

கிளை நதிகளும்

என்றும் நம்முடன்...


2000-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கு சன் டெக் சிட்டி செற்றிருந்த போது, புத்தக மற்றும் மென்பொருள் கடைகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்தேன். திடீரென்று யாரோ ஒரு பெண்மணியின் குரல் தம்பி! என்று அழைத்தது கேட்டது. சட்டெனத் திருப்பிப் பார்த்தேன். அந்த பெண்மணிக்கு பக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா நின்று கொண்டு இருந்தார். ஆச்சர்யத்துடன் அவர்கள் இருவருக்கும் புன்முறுவலுடன் வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர்களிடம் சென்றேன். நான் திரு சுஜாதாவோடு பேசுவதற்குள் அந்த பெண்மணி இவர்தான் எழுத்தாளர் சுஜாதா என்று எனக்கு அறிமுகப் படுத்திவிட்டார். இவ்வளவு உயர்ந்த, பிரபலமான எழுத்தாளரை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாரே என்று கொஞ்சம் சங்கடத்தில் நெளிந்தது உண்மை. நான் சொன்ன பெண்மணி திரு சுஜாதா அவர்களின் துணைவியார் என்று பின்பு தெரிந்து கொண்டேன். பிறகு சுஜாதா அவர்களிடம் இணையத்தைப் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் பெற்று வந்தேன்.அந்த அமைதியான, அபூர்வமான மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம். அவரை இழந்தாலும், அவருடைய எழுத்துக்கள் என்றும் வாழும் நம்முடன்...



அன்புடன் ஜோதிபாரதி

Tuesday, February 26, 2008

எண்ணெய்க் குளியலுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தேன்

ரொட்டிப் பரோட்டா கேட்டேன்

எண்ணெயில் முக்கி மூழ்கடித்துப்

பொரித்துக்கொடுத்தாய் -நீ

அவசரமாய்க் கொடுத்ததை

அவசரமில்லாமல் காத்திருந்து

வாங்கிச் சென்றேன்

ஒன்றை மட்டும் கொடுக்க

மறந்து விட்டாய்

குழம்புக்குப் பதிலாக

அரப்பைக் கொடுத்திருந்தால்

அழகாகக் குளிப்பாட்டி இருப்பேன்

எண்ணெய் என்ன செய்யும் என்று

நீ உரைக்காமல் புரிந்திருப்பேன்.



அன்புடன் ஜோதிபாரதி

Friday, February 22, 2008

அழகின் அழகு அமிழ்கிறது காணீர்!

அழகின் அழகு அமிழ்கிறது காணீர்!

இறக்கையில் முதுகில்
இளம் பச்சை

மார்பிலோ
மாம்பழ நிறம்

கண்ணுக்கு மையிட்ட
கச்சிதமான அழகு

வானின் நீல நிறம்
வாலுக்கு வைத்துக் கொண்டாய்
வாலுக்குக் கீழே
வசீகரிக்கும்
வண்ணக் குங்குமப் பொட்டோ?

வெடுக்கென்ற பார்வை
விஞ்சுகின்ற அழகு


அழகான கால்கள்
அசைந்து வரும் ஒன்றாய்



தவ்வித் தவ்வி அழகாய்
தவழ்ந்து வரும் அழகு

தவிக்கவிடும் நம்மை
தமிழச்சியோ என்று

அழகானப் பாதை -நீ
விரும்புகிற பாதை

ஆயுத பூசை அன்று
ஆயிரம் பேர் வருவீர்கள் என
அங்கலாய்த்து நாமிருந்தோம்

முன்பே வந்திடுவாய் -உன்
முக அழகைக் காட்டிடுவாய்

சீட்டடித்து நாம் பாட
சிங்கார நடைதனையே
சிறப்பாக நடந்திடுவாய்

அழகாக வாலாட்டி
அருமையாக ரசித்திடுவாய் -நீ
அப்பாவி என்றுணர்ந்து
அடைந்திடுவார் உன்னை

அவர் அழகானக் கொண்டையைப் பிடித்துக்கொண்டு
ஆடச்சொல்வார் பொய்யாக

“இருந்த இடத்தில் கொண்டுபோய் விடுறேன்
கூத்தாடு கூத்தாடு” என்று

அழகாய் ஆடி ஆடி
அனைவரையும் மகிழ்விப்பாய்

இயல்பாய் செய்கிறாய் என்று
இறக்கையையும் பிடுங்கிடுவார்

அழகை அமிழ்த்திடுவார்
அருமை தெரியாதார்

காச்சுள் என்கிற உன்பேரை
தவறாகப் புரிந்து கொண்டு

காச்சு என்று உரைத்தனரோ
கவலையிலே வாடுகிறோம்




அன்புடன் ஜோதிபாரதி

Thursday, February 21, 2008

கிராமங்களைச் சீரழிக்கும் திமிங்கிலங்களும், திரைகடலோடிகளும்

கிராமங்களைச் சீரழிக்கும் திமிங்கிலங்களும்,திரைகடலோடிகளும்

கிராமங்களில் உள்ள கோவில்களில் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாக்கள் களை கட்டும். கிராம மக்களுக்கு இந்த தருணம் மகிழ்ச்சியான தருணமும் கூட. உறவினர், நண்பர்களை திருவிழாக்களுக்கு அழைத்துவந்து உபசரிப்பது. புத்தாடை அணிந்து மகிழ்வது. இன்னும் பட்டியல் நீளும்.

திருவிழாக்கள் ஒரு மாதம், 15 நாட்கள், ஒருவாரம், ஒரு நாள் இப்படி வசதிக்கு தகுந்தபடி கொண்டாடுவார்கள். இந்த கொண்டாட்டங்களில், திரைப்படங்கள் திரையிடுதல், கரகாட்டம், நடன நிகழ்ச்சிகள், சமுக நாடகங்கள் மற்றும் புராண நாடகங்கள் வள்ளித் திருமணம், அரிச்சந்திர மயானகாண்டம், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி போன்றவைகளும் வசதிக்கேற்ப சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

சமீப காலமாக இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி, கலை இரவு என்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக நண்பர் திரு.சரவணன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் விவரித்த விதம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. சினிமாவில் நாம் பார்த்து ஆபாசம் என்று சொல்கிறோம் அல்லவா? அதையும் தாண்டி அருவெறுக்கத்தக்க விரசமான ஒரு நிழ்வாக இருப்பதாகவே திரு சரவணன் மேலும் கூறுகிறார். இதை கோவில் போன்ற புனிதமான இடங்களாகக் கருதப்படும் இடங்களில் நிகழ்த்துவது ஏனோ? அதையும் தாண்டி கிராமத்துக் கோவில்களில் இந்த நிகழ்ச்சியின் போது இளம் சிறார்கள், குழந்தைகள் கொட்ட கொட்ட விழித்திருந்து பார்ப்பதாகவும் தெரிவித்தார். இது மேலும் நமது வேதனையைக் கூட்டியது. இந்த பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் வானரங்களும் உட்கார்ந்து பார்ப்பதாகவும் கேள்விப்பட்டேன். அவர்களை அறுபதைத் தாண்டிய திமிங்கிலங்களாக, வாளை மீனு, விலாங்கு மீனாக சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் உருவகப்படுத்தியுள்ளார்கள். குழந்தைகளாக இருக்கும் போது நடக்கும் விடயங்கள் அவர்கள் வாழ்நாள் இறுதி வரை பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பது ஏன் இந்த திமிங்கிலங்களுக்குத் தெரியவில்லை?

இன்னொரு விடயம், இந்த நிகழ்ச்சிக்கு ஆகும் செலவு சுமார் ஐம்பது முதல் அறுபதாயிரம் என்றும் கேள்விப்பட்டேன். நண்பர் திரு சரவணன் கூற்றுப்படி, இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு மற்றும் பண உதவியை அந்த கிராமத்தைச் சேர்ந்த "மலேசிய,சிங்கை வாழ் ஊழியர்கள்" செய்திருக்கிறார்கள். இது அதை விடக் கொடுமை. நீங்கள் கடின உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் குடும்பத்துக்கு, அம்மாவிற்கு, அப்பாவிற்கு, மனைவிக்கு அனுப்புங்கள். ஏன் இப்படி உங்கள் பணத்தை வீணடிக்கிறீர்கள். வீணடிப்பதோடு மட்டும் அல்லாமல் பிஞ்சுக் குழந்தைகளையும், அப்பாவி கிராம மக்களையும் கெடுத்து, எடுத்து வைத்து மூடாதீர்கள். அப்படியே நீங்கள் எதாவது ஊருக்கு செய்ய வேண்டும் என்று நினைத்தால் நன்றாகப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப் படுத்துங்கள், விளையாட்டு விழாவிற்கு பண உதவி செய்து உங்களை கௌரவப் படுத்திக் கொள்ளுங்கள். பள்ளிக் கட்டிடம் சரியில்லை என்றால் புதிதாகக் கட்டிடம் கட்டி கொடுங்கள். நூலகம் கூட கட்டிக் கொடுக்கலாம். குளத்தைத் தூர் வார உதவி செய்யலாம்.

இதைப் படிக்கும் நல்லெண்ண சமூக ஆர்வலர்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தங்களை அறியாமல் இந்த செயலில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், இதன் தீமைகளை நாசூக்காக எடுத்துக் கூறி இது போன்ற நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



அன்புடன் ஜோதிபாரதி

Saturday, February 16, 2008

ஆயுதம் செய்வோம்

ஆயுதம் செய்வோம்

நிராயுதபாணியாய் நிற்கிறேன்
நிலை தடுமாறிப் போகிறேன்

ஊக்கம் கொடுக்க
ஒரு குருவி இல்லை
ஒப்பாரி வைக்கிறேன்

ஆக்கம் செய்வதற்கு
அஞ்சு காசு இல்லை
அவதிப் படுகிறேன்

ஏக்கம் ஒன்றே
கொண்டுள்ளதால் -யாரும்
ஏறெடுத்துப் பார்க்கவில்லை

நோக்கம் இல்லாமல்
நொந்து தவித்ததனால்
தூக்கமும் இழந்து
தவிக்கிறேன்

கோபம் கொப்பளிக்க
குறுக்கு வழியில் போனதால்
குட்டிச் சுவாராகிப்
போனதே மிச்சம்

அன்பே அறியவில்லை
அரவணைப்பு தெரியவில்லை

அன்பென்பது அமுதசுரபி -நான்
அதை அறியாத் தனிப்பிறவி

நிலை தடுமாறிவிட்டேன்
நிராயுதபாணியாக நிற்கிறேன்
அன்பு மட்டுமே ஆயுதமாய் -ஆம்
ஆயுதம் செய்வோம்



அன்புடன் ஜோதிபாரதி

எனதருமை வள்ளி

எனதருமை வள்ளி

காலை எழுந்தவுடன்

கணிவுடனே வந்திடுவாள்

சோலையிலிருந்து

சொக்கவைக்க வந்திடுவாள்

நாளையும் அவள் வேண்டும் -என்று

நச்சரித்துக் கொண்டிருப்பேன்

அம்மாவிடம் சொல்லி

அனுசரித்துப் போகச்சொன்னேன்

அவளின் குரல் கேட்டு

அவசரமாய் ஓடிடுவேன்

ஆசை ஆசையாய் -அவளை

அள்ளி அணைத்துக் கொள்வேன்

வெளுத்த நிறத்தாள்

வழவழக்கும் தோலாள்

வசீகரிப்பாள் என்னை

சுவைக்க நினைத்திடுவேன்

சும்மா இருக்க மாட்டேன்

பக்கத்து ஊரிலிருந்து வரும்

பதுமையல்லவா அவள்

சொர்க்கத்தாள் என்று

சொல்லிச் சொல்லி

சுவைத்திடுவேன்

அவள் எனக்குத் தந்தது

உரம் அள்ளி

என்னை அள்ளிக் கொண்ட

அவளோ மரவள்ளி



அன்புடன் ஜோதிபாரதி

பாலம் வேண்டும்!

பாலம் வேண்டும்!

நாசா சொன்னதென்று
நா கூசாமல் சொல்வர்

நம் நாட்டு நல்லறிஞர்களை
நகைப்புக்குள்ளாகினர்

பேசா ஊமைகளாய்
பெரும் பெரும் அறிஞர்கள்
தாஜா செய்வர் -பெரும்
பண முதலைகளை - ஆங்கே
அவர்கள் அங்கலாய்க்கும்
அமெரிக்கா சொன்ன -அந்த
ஆதாம் பாலமும் வேண்டாம்

இதிகாசம் சொல்லும்
இடியாப்பச் சிக்கலில் -நீங்கள்
இறுகிப் போகவும் வேண்டாம்

சூத்திரன் சொன்னது -என்று நீங்கள்
ஆத்திரமும் படவேண்டாம்

ஆத்திகன் சொல்வதைக் கேட்டு
அவசரப் படவும் வேண்டாம்

நாத்திகன் சொல்வதைப் பார்த்து
நஞ்சைக் கக்கவும் வேண்டாம்

ராமர் பாலம் என்று
ரகளையிடும் -அந்த
ராமர் பாலமும் வேண்டாம்

கடல் வளங்களைக்
கரைத்து ஊற்றுபவர்
கரிசனமும் நமக்கு வேண்டாம்

மேடாக்கி மெலிந்து
போகவும் வேண்டாம்
பள்ளமாக்கி
பறிகொடுக்கவும் வேண்டாம்

பிட்டுக்கு மண்சுமந்த
காலம் போய் -நீ இப்போது
துட்டுக்கு மண்
சுமக்கவும் வேண்டாம்

பாரதி என்ற பகலவன்
நேரெதிர் நின்று சொன்ன
சேது பாலத்திற்காக -நீங்கள்
மோதவும் வேண்டாம்

துன்பக் கேணியில்
துயரத்தில் வாடும்
எம் ஈழத்தமிழனுடன்
பாரதனில் எமக்கு
உறவுப் பாலம் வேண்டும்
செய்வாயா? -எம்
பாரத மாதாவே! -எமக்குப்
பாலம் வேண்டும்


அன்புடன் ஜோதிபாரதி

Friday, February 15, 2008

தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும், ஜெ.வி.பி -க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவப்புக் கம்பளம்

தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும், ஜெ.வி.பி -க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவப்புக் கம்பளம்

இந்தியாவின் இருபெரும் இடதுசாரிக் கட்சிகளின் மகாநாடுகள் அடுத்த மாதம் தென்னிந்திய நகரங்களில் இடம்பெறவிருக்கின்றன. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPI(M)அதன் 19 ஆவது மகாநாட்டை தமிழ் நாட்டின் கோயம்புத்தூரிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி CPI அதன் 20 ஆவது மகாநாட்டை ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்திலும் நடத்தவிருக்கின்றன. இக்கட்சிகள் இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)யுடனும் தோழமைத் தொடர்புகளைப் பேணி வருகின்றன. அத்துடன், கம்யூனிஸ்ட் கட்சியும் ஜே.வி.பி.யும் இந்திய இடதுசாரிக் கட்சிகளின் மாநாடுகளுக்கு அழைக்கப்பட்டும் வந்திருக்கின்றன. இந்தத் தடவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் மாநாட்டுக்கு ஜே.வி.பி.யை அழைத்திருக்கின்ற அதேவேளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்புவிடுப்பதைத் தவிர்த்திருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜே.வி.பி.யை அழைக்காதமை குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. தமிழ் நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட மாநிலத்தில் உள்ள தங்களது நேசசக்திகளுடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதற்காகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜே.வி.பி.யை அழைக்கவில்லை என்று சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. `2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜே.வி.பி. கூடுதலான அளவுக்கு சிங்களப் பேரினவாதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. ஜே.வி.பி.யின் இப்போக்கு இலங்கையில் பதற்ற நிலையைத் தணிக்க உதவவில்லை. அதன் காரணத்தினாலேயே அக்கட்சியை மாநாட்டுக்கு அழைக்கவில்லை' என்று தன்னை இனங்காட்டிக் கொள்ள வேண்டாமென்று நிபந்தனை விதித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியற் குழு உறுப்பினர் ஒருவர் இணையச் செய்தி சேவையொன்றிற்கு சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். பி.பி.சி. தமிழோசை செய்தியாளரிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் இலங்கையின் முக்கிய பிரச்சினையில் ஜே.வி.பி.யுடன் நிலவும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இந்தத் தடவை மாநாட்டுக்கு அந்த இலங்கைக் கட்சியின் பிரதிநிதிகளை அழைக்கவில்லை என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டார்.

ஜே.வி.பி. இடதுசாரிக் கட்சி என்ற வகையில் அந்தக் கட்சியுடன் எமக்குத் தொடர்புள்ளது. அந்தத் தொடர்பு நீடித்துவருகிறது. அந்த வகையிலேயே கடந்த மகாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பிறகு இரு முக்கிய பிரச்சினைகளில் ஜே.வி.பி. எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் எமக்கு உடன்பாடில்லை. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைப்பதற்கு வழியமைக்கக்கூடிய சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட சமரசத் தீர்வு யோசனைக்கு ஜே.வி.பி. கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. அத்துடன், ஒற்றையாட்சியின் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் ஜே.வி.பி. அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் யோசனைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இலங்கை இனப்பிரச்சினையில் அமைதி திரும்புவதற்கு எதிர்மாறான கொள்கையில் ஜே.வி.பி. உள்ளதால் அக்கட்சியின் பிரதிநிதிகளை இந்தத் தடவை எமது கட்சி மாநாட்டுக்கு அழைக்கவில்லை என்று வரதராஜன் தமிழோசையில் விளக்கம் அளித்திருந்தார்.

இச்சந்தர்ப்பத்திலே மூன்றரை வருடங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஜே.வி.பி. குறித்து தெரிவித்திருந்த கருத்துகளை நினைவு மீட்டிப்பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். ஜே.வி.பி.யின் தலைமையகத்துக்குச் சென்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பிரகாஷ் காரத்திடம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றின் செய்தியாளர் `இலங்கையில் உள்ள உங்கள் நேச அணிகளில் ஒன்றான ஜே.வி.பி. கடுமையான இனவாதப் போக்கைக் கடைப்பிடிப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா' என்று கேட்டிருந்தார். அக்கேள்விக்குப் பதிலளித்த பிரகாஷ் காரத் ஜே.வி.பி.யின் கொள்கைகளை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தில் அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து இப்போது கருத்துச் சொல்வது பொருத்தமானதல்ல என்று மாத்திரம் குறிப்பிட்டார். இலங்கையில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு தோல்வி கண்ட பின்னர் ஜனநாயக அரசியலில் பிரவேசித்து தென்னிலங்கையின் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கும் ஜே.வி.பி. இனநெருக்கடியைப் பொறுத்தவரை எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது என்பதை அயலகத்தின் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த இதழின் ஆசிரியராகவும் விளங்கிய பிரகாஷ் காரத் இதுவரை அறியாமல் இருப்பது எமக்கு அவரது மார்க்சிய ஆய்வின் ஆழத்திலும் அரசியல் அறிவு அனுபவத்திலும் பலத்த சந்தேகத்தைக் கிளப்புகிறது.

ஜே.வி.பி. பெயரளவில் தன்னை ஒரு மார்க்சிய வாதக் கட்சியென்று உரிமை கோரிக் கொள்கின்றபோதிலும் ஆரம்பத்தில் இருந்தே அதன் கொள்கை இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை அதன் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் நோக்கும் போது எந்தவித சந்தேகமுமின்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளையுமே தீவிரமாக எதிர்த்து வீதிப் போராட்டங்களில் இறங்கிய ஜே.வி.பி. அண்மைக் காலத்தில் நார்வேயின் அனுசரணையுடனும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளையும் எதிர்த்து நின்றது. எதிர்காலத்தில் எந்தவொரு சமாதான முயற்சியையும் முன்னெடுக்க அனுமதிக்கப் போவதில்லையென்று சூளுரைத்திருக்கும் ஜே.வி.பி. இனநெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வு சாத்தியம் என்று சிங்கள மக்களை நம்பச் செய்யும் விபரீதமான பிரசாரத்தை முன்னணியில் நின்று செய்துகொண்டிருக்கிறது. போரையும் படுமோசமான மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அக்கட்சியை இடதுசாரிக் கட்சி என்று எந்தவிதத்திலும் அழைக்கமுடியாது. இலங்கையின் சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான எந்தவொரு அபிலாசையையும் ஏற்றுக் கொள்ளத்தயாரில்லாத பேரினவாதக் கட்சியாகவே ஜே.வி.பி.யை நாம் காண்கிறோம். இருதசாப்த்தங்களுக்கும் கூடுதலான காலமாக போரினால் அவலப்பட்ட மக்களை மீண்டும் போர்க் கொடுமைக்குள் தள்ளிவிட்டதில் ஜே.வி.பி.க்கு பெரும்பங்குண்டு.

காலத்துக்கொவ்வாத பின்தங்கிய சிந்தனையைக் கொண்ட ஜே.வி.பி.யை அடையாளம் காண்பதற்கு இந்தியாவின் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு இவ்வளவு காலம் எடுத்திருக்கிறது என்பது எமக்கு வியப்பைத் தருகிறது. இப்போதாவது அக்கட்சியை ஓரளவுக்கேனும் அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதில் ஒரு சிறிய திருப்தி எமக்கு! இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லைப் போலும். அதனால்தான் ஹைதராபாத் மாநாட்டுக்கு ஜே.வி.பி.யின் பிரதிநிதிகளை அவர்கள் அழைத்திருக்கிறார்களோ? இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை இலங்கை இன நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை வலியுறுத்துவதுடன் மாத்திரம் அவை நின்றுவிடுகின்றன. மற்றபடி இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறை பற்றி அந்தக் கட்சிகள் எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை. மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறையை கம்யூனிஸ்ட் கட்சிகள் பெருமளவுக்கு ஏற்றுக் கொண்டுள்ளன என்றுதான் கூறவேண்டும். இலங்கையில் அமைதி திரும்புவதற்கும் இனநெருக்கடிக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கும் பெருந்தடையாக இருக்கும் பேரினவாதச் சக்திகளுக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய எந்தவொரு அணுகுமுறையையும் மத்திய அரசாங்கம் கடைப்பிடிக்கக்கூடாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் நெருக்குதல் கொடுக்க முடியும். அத்தகைய வல்லமைபொருந்திய ஒரு நிலையில் இன்று அந்தக் கட்சிகள் விளங்குகின்றன என்பது எமது உறுதியான அபிப்பிராயம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில், நமது தமிழகத்தைச் சேர்ந்த திரு டி.ராஜா போன்றவர்கள் அகில இந்திய அளவில் முக்கிய தலைவர்களாக இருக்கும் போது, நம் இனத்தை அழிக்க நினைப்பவர்களை நமது நாட்டுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு விருந்தாளியாக அழைக்கலாமா? இதற்கு திரு.டி.ராஜா, தா.பாண்டியன், ஆர்.நல்லகண்ணு, சி.மகேந்திரன் போன்ற தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நம்புவோம், இல்லையேல் இவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்வோம், புறக்கணிப்போம்.



அன்புடன் ஜோதிபாரதி

Wednesday, February 13, 2008

வைக்கத் தெரியாது!


வைக்கத் தெரியாது!

தொலைபேசி

மணியடித்ததும் –முக

மலர்ச்சியோடு எடுத்து

மணிக்கணக்கில் பேசுவேன்

மகிழ்ந்து மகிழ்ந்து பேசுவேன்

மனம் கவரப் பேசுவேன்

மறுமுனையில்

வைக்கட்டுமா? என்று கேட்டவர்

வைப்பதற்குள்

வைத்துவிடுவேன் தொலைபேசியை.

எனக்கு வைக்கத் தெரியாது!




அன்புடன் ஜோதிபாரதி

Sunday, February 10, 2008

திரு.வைகோ திரு.பழ நெடுமாறன் அவர்களே, ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி தொடங்குங்கள்!

திரு.வைகோ திரு.பழ நெடுமாறன் அவர்களே, ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி தொடங்குங்கள்!

தமிழக மக்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது தெரியவில்லை என்கிற சூழ்நிலையில், சில தமிழக, இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொலைக்காட்சிகள்(இப்போதிருக்கும் அனைத்து தொலைக்காட்சிகளும், இதற்கு எந்தத் தொலைக்காட்சியும் விதிவிலக்கல்ல), சில பத்திரிக்கைகள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் படு அவலத்தையும்,துன்பத்தையும்,துயரையும் இருட்டடிப்புச் செய்துகொண்டு இருக்கின்றன.
அதனால், தொலைக்காட்சியே சிறந்த ஊடகமாக அமையும் என்கிற பட்சத்தில் (அதைத் தான் மக்கள் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்) தாங்கள் ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கலாமே. தமிழ் உணர்வாளர்கள் உதவக்கூடும். தங்களுடைய கருத்துக்கள் தமிழக மக்களில் வீடுகளுக்கே சென்றடையும். தாங்கள் எவ்வளவு கூட்டங்களில் பேசினாலும் அது தாய்மார்களுக்கும், பெரியோர்களுக்கும் தெரிவதில்லை. வெகுஜன மக்கள் கேட்பதில்லை. ஆனால் அனைவரும் தொலைக்காட்சி பார்க்கிறார்கள். ஈழத்தில் நடந்தவற்றை/நடப்பவற்றை படம் பிடித்து இடைஇடையே போடலாம். மக்கள் விருப்பும் மசாலா நிகழ்ச்சிகளையும் வியாபார நோக்குடன் போட்டுக்கொள்ளலாம். இடையிடையே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் துயரங்களை, அவலங்களை எடுத்துரைக்கலாம்.
இதைப் பற்றிய உணர்வு மக்களிடம் ஏற்பட்டு விட்டால் தான் மத்திய அரசாங்கம், நாம் எடுத்துச் சொல்வதற்கு செவி சாய்க்கும். தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் ஒரே குரலில் ஒலிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பெரிய மாற்றம் நிகழும். இதற்கு தமிழ் உணர்வாளர்கள், கி.வீரமணி, கொளத்தூர் தா.செ.மணி, தொல்.திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, மருத்துவர் ராமதாசு, அறிவுமதி, தங்கர்பச்சான், சீமான், சத்தியராஜ், விஜய.டி.ராஜேந்தர், பாரதிராஜா, மகேந்திரன், புலவர்.புலமைப்பித்தன் போன்றோர்களும் மற்றும் பலரும் உதவக்கூடும். இந்தத் தொலைக்காட்சி ஈழ மக்களுக்கு ஒரு நல்ல பொழுது விடியும் வரைத் தொடரவேண்டும் என்பது எம் விருப்பம். இதைச் செய்துவிட்டீர்கள் என்றால் நாங்கள் என்றும் உங்களை மறக்காமல் நன்றியுடன் இருப்போம் என்பதை தமிழகத்தைச் சேர்ந்தவன் என்கிற வகையில் அன்புடனும், பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

Saturday, February 9, 2008

தமிழில் பாண்டித்தியம் பெற்ற ரஷ்யப் பேராசிரியர்


தமிழில் பாண்டித்தியம் பெற்ற ரஷ்யப் பேராசிரியர்!!!

ரஷியாவைச் சேர்ந்த மாஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியர் அலெக்சாண்டர் எம். டுபியன்ஸ்கியின் தமிழ் புலமை மற்றும் அவரது தமிழ் இலக்கிய ஞானத்தையும் பார்த்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருப்பவர் அலெக்சாண்டர் டுபியன்ஸ்கி. 1965ம் ஆண்டு திருக்குறளும், சிலப்பதிகாரமும் ரஷிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டபோது அவற்றைப் படித்து தமிழ் மீது தீராப் பற்று கொண்டார்.இதையடுத்து உடனடியாக தமிழ் கற்றுக் கொண்டார். தமிழைக் கற்றுத் தேர்ந்த அவர், ஞானத்தின் மொழி தமிழ் என தமிழின் புகழ் பாடத் தொடங்கினார்.மேலும் தமிழ் மொழி, இலக்கியம் குறித்த ஆய்விலும் ஈடுபட்டார். எந்தவித சிந்தனைகளையும், உணர்வுகளையும் மிகச் சரியாக வெளிப்படுத்தும் ஒரே மொழி தமிழ் என்பது அலெக்சாண்டரின் கூற்று.1969ம் ஆண்டு சங்க இலக்கியத்தை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார் அலெக்சாண்டர்.கடந்த ஆண்டு தனது மாணவர்கள் ஐந்து பேரோடு தமிழகம் வந்த அவர் தமிழ் கலாச்சாரம் குறித்தும், அதன் நீண்ட நெடிய பாரம்பரியம் குறித்தும் நேரில் கண்டறிந்து மகிழ்ந்தார்.

தற்போது திருச்சி வந்துள்ள அலெக்சாண்டர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கியம் குறித்தும், தமிழ் இலக்கியம் குறித்தும் அழகுத் தமிழில் உரையாற்றியைதக் கேட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் மெய் மறந்து போய் விட்டனர்.துல்லிய உச்சரிப்புடன் அவர் பேசும் தமிழ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.


இதே போல் அழகு தமிழில் பேசும் ஜெர்மனியைச் சேர்ந்த பேராசிரியை உள்ரிக் அவர்களை 2000-ம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ் இணைய மாநாட்டில்(உலகத் தமிழ் இணைய மாநாடு) சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவருடைய தமிழ்ப் பேச்சைக் கேட்டு வியந்தேன். நினைத்துக் கொண்டேன், தமிழர்களுக்கு மட்டும் தான் தமிழ் மண்டையில் ஏறமாட்டேன் என்கிறது, நாக்கில் நுழைய மாட்டேன் என்கிறது என்று...


அன்புடன் ஜோதிபாரதி

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் க.இராசாராம் மறைவு!



திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் க.இராசாராம் மறைவு!

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், பெரியார்,அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவரும், எம்.ஜி.ஆர், கலைஞர்,ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவையில் அங்கம் வகித்தவருமான திரு.க.இராசாராம் அவர்கள் காலமானார்.

முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான திரு.க.இராசாராம், உடல்நலக் குறைவினால் பிப்ரவரி 8 மாலை காலமானார்.சென்னை ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனியில் உள்ள மாசிலாமணி தெருவில் வசித்து வந்தவர் திரு.க.இராசாராம்; வயது 82. இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர். ராஜசேகர் என்ற ஒரு மகன் உள்ளார். திரு.க.இராசாராம் 1971ம் ஆண்டில் தி.மு.க., ஆட்சியில் சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பணியாற்றினார். 1972ம் ஆண்டில் தொழிலாளர் நலத் துறை மற்றும் வீட்டு வசதி வாரியம், போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றினார். 1980ம் ஆண்டில் சபாநாயகர் பதவியும், டில்லி சிறப்பு பிரதிநிதி பதவியும் வகித்துள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கடந்த 91ம் ஆண்டு முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் உணவு துறை அமைச்சராக ராசாராம் பணியாற்றினார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். சமீபகாலமாக இதய நோயால் அவதிப்பட்டார். ஒருவாரத்திற்கு முன், தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிப்ரவரி 8 மாலை 5.45 மணிக்கு காலமானார். ராசாராம் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் நெருங்கி பழகியவர். திரையுலகிலும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் உண்டு. அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி இரவு அஞ்சலி செலுத்தினார். அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.முதல்வர் இரங்கல்: முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரும், பெரியாரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவரும், 1971 முதல் 76 வரை எனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவரும், பின்னர் சபாநாயகராகவும் பணியாற்றிய அருமை நண்பர் ராசாராம் திடீரென்று மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சேலம் மாவட்டத்தில் தொடக்க காலத்தில் தி.மு.க.,வை வளர்க்க அரும்பாடு பட்டவர்' என கூறியுள்ளார்.
இவரைப்பற்றி நான் படித்த செய்தியை இங்கு தருகிறேன்.

கருணாநிதியிடம் வீட்டு வசதித்துறை அமைச்சராக, எம்.ஜி.ஆர். ஆட்சியில் சபாநாயகராக, மீண்டும் ஜெயலலிதாஆட்சியில் அமைச்சராக மிகுந்த செல்வாக்கோடு விளங்கிய க.ராசாராம் இன்றும் வாடகை வீட்டில் தான் வசித்துவருகிறார்.அவர் இவ்வளவு நியாயமாக இருப்பதாலோ என்னவோ அவரை தமிழக மக்கள் அரசியலில் இருந்து ஒதுக்கிவைத்துவிட்டனர்.அண்ணா காலத்தில் திராவிட இயக்கத்தில் நுழைந்தவர் ராசாராம். 5 ஆண்டுகள் சட்டசபை சபாநாயகராக இருந்தார்.5 ஆண்டுகள் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவீட்டுவசதித் துறை வீடுகளைக் கட்டினார்.ஆனால், தனக்கென்று ஒரு வீட்டைக் கூட கட்டிக் கொள்ளவில்லை இந்த அதிசய அரசியல்வாதி.இப்போதும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ராசாராம். 1971ம் ஆண்டு தான் குடியேறிய அதே வீட்டில் தான்வாடகைக்கு இன்றும் வசித்து வருகிறார். பதவியில் இருக்கும்போது வீட்டு வாடகையை அரசிடம் இருந்து வாங்கிக்கட்டியவர், பதவியில் இல்லாத காலத்தில் சொந்த காசில் வாடகை கட்டி வருகிறார்.இவர் வாடகைக்கு இருப்பதை அறிந்த எம்.ஜி.ஆர். அவருக்கு ஒரு வீடு வாங்கித் தர முன் வந்தபோது அதைமறுத்திவிட்டாராம். நீங்கள் இருக்கும் வீட்டையே அதன் உரிமையாளரிடம் பேசி வாங்கித் தருகிறேன் என்றுஎம்.ஜி.ஆர். நிர்பந்தித்தும் அதைத் தவிர்த்திருக்கிறார் ராசாராம்.இவர் மீது மிகுந்த மரியாதை கொண்ட அந்த வீட்டின் உரிமையாளரே இவருக்கு அந்த வீட்டை இலவசமாகத் தரபலமுறை முன் வந்திருக்கிறார். அதையும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ராசாராம்.செல்வாக்கோடு இருந்தபோது பல தொழிலபதிர்களும் இவருக்கு அந்த வீட்டை வாங்கித் தருவதாகக் கூறியபோதுஅவர்களைத் திட்டி விரட்டியிருக்கிறார் இந்த மனிதர்.எம்.ஜி.ஆர். ரூ 6 லட்சம் வரை தருவதாகவும் அந்த வீட்டை வாங்கிக் கொள்ளவும் வற்புறுத்திப் பார்த்தும் இவர்மசியவில்லையாம். ஆட்சியில் இருக்கும் போது அகப்பட்டதைச் சுருட்டும் அரசியல்வாதிகள்
மத்தியில் இப்படிப்பட்ட மனிதரும் திராவிடக் கட்சியில் இருந்திருக்கிறார்.இப்போது அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டு அமைதியாக வாழ்ந்து வருகிறார் ராசாராம். இவரை ஒதுங்கவிட்டதுதமிழக மக்களின் தவறு என்று தான் சொல்ல வேண்டும்.



அண்ணாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.



அன்புடன் ஜோதிபாரதி.

Friday, February 8, 2008

தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பவர்கள்!

தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பவர்கள்!

கோவையில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தை நள்ளிரவில் மீண்டும் கோவையில் தரையிறக்கி ரூ. 27 கோடி மதிப்புள்ள ஹெராயினை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் விமானம் புறப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் கோவையில் தரையிறக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விமானம் கோவையில் மீண்டும் தரையிறங்கியது.இதைத் தொடர்ந்து அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு அவர்களது உடமைகள் மீண்டும் சோதனையிடப்பட்டன.இதில் கோவை வெரைட்டிஹால் மானிய தோட்டம் பகுதியை சேர்ந்த அகமது என்பவரின் மகன் இப்ராகிம் (24) என்பவரின் பேகேஜில் இருந்து 27 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 27 கோடி.இப்ராகிமை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றதையடுத்து விமானம் மீண்டும் சிங்கப்பூர் கிளம்ப அனுமதிக்கப்பட்டது.

இப்ராகிம் மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பறந்து கொண்டிருந்த விமானத்தை தரையிறக்கி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நம் அதிகாரிகள் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதில் எப்போதுமே கெட்டிக்காரர்கள். வெளிநாட்டு விமான நிறுவனத்துக்கும் இழப்பை ஏற்ப்படுத்தி நம் நாட்டுக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பதிலும் கெட்டிக்காரர்கள். இது போல் சில முறை செய்துவிட்டால் எந்த வெளிநாட்டு விமான கம்பெனிகளும் நம்மூருக்கு விமான சர்வீஸ் தர தயங்குவார்கள் என்பது நிதர்சன உண்மை. இனியாவது திருந்துவார்களா?



அன்புடன் ஜோதிபாரதி

Wednesday, February 6, 2008

சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்

சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்


தினம் தினம்
கழுகாய் பருந்தாய்
வட்டமிடும்
வஞ்சக வானூர்தி
கருவறுக்க
கோழிக்குஞ்சாய்
எம் மக்கள்

இடிமுழக்கம் எங்கு பார்த்தாலும்
ஈழத்தமிழகத்தில் -குண்டுகளை
அள்ளி எரிந்து ஆர்ப்பரிக்கும்
அரக்கர் கூட்டம்

கைக்கெட்டும் தூரத்தில்
எம் உறவுகளின் தாய்த்தமிழ்நாடு

கேட்காமல் கேட்கும்
எம் உறவுகளின் ஓலங்கள்

இவன் வாழும் நாடோ காந்தியின்
அகிம்சை வழி

நேருவின் சமாதனப்புறா-அதுவோ
முதுகில் அடித்தவனை
முழுவதும் தொழும்

தாய்த்தமிழ் நாடென்ற பேர் எதற்கோ?

கூட்டுப் பயிற்சியும்
கொஞ்சிக்குலாவலும்
நம் குல நாசம்
செய்வதற்கேயன்றி வேறெதற்கு?

ரகசியப் பேச்சுக்களும்
ராடார் தளவாடங்களும்

ஒளிவு மறைவற்ற
ஒப்புதல் வாக்குமூலங்களும் -எம்
நலிவடைந்த உறவுகளை
நசுக்கத்தானே?

சமாதானம் என்று சொல்லி
சவ வண்டியனுப்பும்
சறுக்கிய தேசத்தின்
ஆற்றாமைத் தமிழன்
அழுகிறான் இங்கே
அவனுக்கு நாடிதுவே
வேறில்லை அவனியிலே

கண்ணீருக்கு தாழ்ப்பாள் போடும்
கயவர்கள் கூட்டம்
கட்சிக்கொடி ஏந்திக்
கல்லாக்கட்டும்

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
ஒப்பனைத் தமிழன்
ஒளிரா நிலவு அமாவாசை

உணர்வில்லா உறக்கம் பாவம்
உடுக்கை மானம் உண்டோ அறியேன்...


எழில் நிலா இணைய இதழ் 29.03.2008
பதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008
லங்காஸ்ரீ கவிதைகள் இணைய இதழ் 31.03.2008

அன்புடன் ஜோதிபாரதி

முன்னேறும் நண்டுகளை கீழே இழுக்கும் நண்டுகள், சானியா மிர்சாவையும் விட்டுவைக்கவில்லை

முன்னேறும் நண்டுகளை கீழே இழுக்கும் நண்டுகள், சானியா மிர்சாவையும் விட்டுவைக்கவில்லை

பெங்களூரில் உலக மகளிர் டென்னிஸ் சங்க பெங்களூர் ஓபன் போட்டி நடைபெறுகிறது. இதில் வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபல வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.ஆனால் ஆசியாவின் நம்பர் ஒன் வீராங்கனையான சானியா மிர்ஸா இதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் டென்னிஸ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தான் விலகியது குறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் சானியா கூறுகையில், பெங்களூர் ஓபன் போட்டியில் நான் விளையாடவில்லை. அங்கு விளையாட வேண்டாம். விளையாடினால் கடந்த காலங்களைப் போல இந்த முறையும் சர்ச்சைகள் எழலாம் என எனது மேனேஜர் அறிவுறுத்தியதால் நான் விளையாடவில்லை.

நான் எப்போதெல்லாம் இந்தியாவில் விளையாடுகிறேனோ, அப்போதெல்லாம் ஏதாவது பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது. எனவேதான் இந்தமுறை விளையாட வேண்டாம் என தீர்மானித்தேன்.இது மிகவும் தீவிரமான ஒரு முடிவு அல்ல. என்னைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட நிலையில் என்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாது. கடந்த சில வாரங்களில் நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டேன். இப்படிப்பட்ட நிலையில் விளையாட்டில் கவனம் செலுத்தி என்னால் விளையாட முடியாது. எனவேதான் விலகி விட்டேன் என்று கூறியுள்ளார் சானியா.


2005ம் ஆண்டு முதல் டென்னிஸில் பிரபலமாகி வருகிறார் சானியா. அது முதலே அவரைச் சுற்றி சர்ச்சைகளும் கூடவே ஒட்டிக் கொண்டுள்ளன.ஆரம்பத்தில் அவர் டிரஸ் குறித்து இஸ்லாமிய பழமைவாதிகள் பிரச்சினை எழுப்பினர். பின்னர் அவரது சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை எழுப்பின. சமீபத்தில் தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. விளம்பரப் படத்துக்காக ஹைதராபாத் மெக்கா மசூதியில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதும் கூட சர்ச்சை ஆனது. இப்படி தொடர்ந்து இந்தியாவில் அவரை நோக்கி சர்ச்சை அம்புகள் பாய்ந்த வண்ணம் இருப்பதால்தான் அப்செட் ஆகி பெங்களூர் ஓபன் போட்டியை சானியா புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தான் இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட பெறுவதில்லை. நாம் பைத்தியமாக அல்லது நம்மைப் பைத்தியமாக்கி இருக்கும் கிரிக்கெட், ஒலிம்பிக்கில் இல்லை. மற்ற விளையாட்டுகளிலும் நமக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. அப்படி யாராவது ஆர்வமுடன் இருந்தால் அவர்களை இந்தமாதிரி செயல்களால் முன்னேற விடுவதில்லை. சானியா தனது சொந்த நாட்டில், மண்ணில் விளையாட முடியாதது, ஒரு வேதனையான செய்தி.



அன்புடன் ஜோதிபாரதி

Tuesday, February 5, 2008

இது என்னுடைய வேலையல்ல! அதற்கு வேறு ஆள் பாருங்கள்!!

இது என்னுடைய வேலையல்ல! அதற்கு வேறு ஆள் பாருங்கள்!!

தாங்கள், அலுவலகத்திலோ அல்லது வேறு இடத்திலோ வேலை செய்பவராக இருந்தால், தாங்கள் வேலை செய்யும் இடத்தில் பல தரப்பட்ட ஊழியர்களைக் கண்டிருப்பீர்கள். அவர்களில் சிலரைப் பற்றி இப்போது சிந்திக்கலாமே.

அ) முதலாமவர், இவர் தனது வேலை வரம்பு உள்ளடக்கத்திற்குள்ளேயே(Job Scope Responsiblity) வேலை செய்பவர். அதைத் தாண்டி ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டார். மாய்ந்து மாய்ந்து வேலை செய்யும் தனது சக ஊழியர்களைக் கின்டலும், கேலியும் செய்வார். Hello! Work Smart!! என்று அடிக்கடி சொல்வது வழக்கம். யாராவது உதவி கேட்டால், இது எனது வேலை வரம்பிற்குள் வரவில்லை என்று சொல்லி விடுவது வழக்கம். இதனால் நிறைய புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்து விடுகிறார். இவர்களில் சிலர் புத்திசாலியாகக் கூட இருப்பதுண்டு. ஆனாலும் தனது தட்டிக் கழிக்கும் குணத்தால் இவர்கள் தனது வேலையில் இலக்கை அடைய முடியாமல் பின்தங்கி விடுகிறார்கள். ஆமை, முயல் கதையில் இவர்கள் முயலைப் போன்றவர்கள்.

ஆ) இரண்டாமவர், தனது வேலை வரம்பையும் தாண்டி வேலை செய்யக் கூடியவர்கள். புதிய புதிய விடயங்களையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இவர்களிடத்தில் உண்டு. மேலதிகாரி சொல்லும் வேலைகளுக்கு காரணத்துடன் மறுமொழியுடன் நன்மை,தீமைகளை விளக்கிச் சொல்லக்கூடியவர்கள். எளிதில் கற்றுக்கொள்ளும் ஆற்றலும் இவர்களிடத்தில் உண்டு. ஆகையால், இவர்களுடைய அறிவுத்திறன், அனுபவம் இவர்களிடம் இருக்கும் Positive Attitude, ஆகியவை மற்றவர்கள் மெச்சும் படி அமைந்துவிடுகிறது. நிதானமாக, தவறிழைக்காமல் வேலை செய்யும் வழக்கம் உடையவர்கள். வேலைகளை வெற்றிகரமாக முடித்து மேலதிகாரியிடம் நல்ல பெயரைத் தட்டிச் செல்வார்கள். இவர்கள் கொஞ்சம் ஆமை போல் இருந்தாலும் தனது இலக்கை அடைந்து, தனது அலுவலகத்தில் பிரகாசமாக எல்லோருக்கும் தெரிவார்கள்.

இ) மூன்றாமவர், இவர்கள் மேலதிகாரி எந்த வேலை கொடுத்தாலும் மாய்ந்து மாய்ந்து செய்யக்கூடியவர்கள். நன்மை தீமைகளை எடுத்துரைக்கும் பக்குவம் கிடையாது. இவர்கள் மேலதிகாரிக்குக் கொஞ்சம் பயப்படக்கூடியவர்கள். அவசரம் அவசரமாக எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வார்கள். நிறைய தவறுகளை செய்வார்கள். வேலைகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் மற்றவர் உதவியை நாட வேண்டிய சூழ்நிலையும் வரலாம். மற்றவர்கள் வந்ததும் வேலை முடிந்து, மேலதிகாரியிடம் மற்றவர்கள் நல்லபெயரை தட்டிச்செல்வதும் உண்டு. தாமதம், மற்றவர் உதவி நாடுதல், எந்த வேலையையும் உருப்படியாக முடிக்காதது ஆகியவற்றால் மேலதிகாரியிடம் திட்டு வாங்க நேரிடலாம். மொத்தத்தில் தனது இலக்கே தெரியாமல் பயணம் செய்ததால், தத்தளித்துக்கொண்டு தோல்வியே அடைவார்கள்.

இன்னும் சில வகைகளைப் பற்றி இன்னொரு சமயத்தில் சிந்திக்கலாம்.



அன்புடன் ஜோதிபாரதி

Saturday, February 2, 2008

கண்ணீர் விட்டது போதும்! இனி அழ வேண்டாம்!!



கண்ணீர் விட்டது போதும்! இனி அழ வேண்டாம்!!






கண்ணீர் சிந்த வைக்காத வெங்காயத்தை உருவாக்கிவிட்டனர் விஞ்ஞானிகள்.எதற்குமே கண் கலங்காதவர்களையும் கண்ணீர் விட வைக்கும் ஆற்றல் கொண்டது வெங்காயம். இந் நிலையில் கண்களுக்கு எரிச்சலூட்டாத, மூக்கு சிந்த வைக்காத வெங்காயத்தை உருவாக்கியுள்ளனர் நியூசிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.



வெங்காயத்தில் உள்ள கந்தகம் தான் அதை வெட்டும்போது காற்றில் பரவி கண்களை எரிச்சலூட்டுகிறது.இந் நிலையில் நியூசிலாந்தின் கிராப் அண்ட் புட் ஆய்வு நிறுவனம், ஆஸ்திரேலியாவின் பயோ-டெக்னாலஜி தொழில்நுட்பத்தை வைத்து வெங்காயத்தின் ஜீன்களை வெட்டி ஒட்டி (gene-silencing technology), கண்ணீரை வரவழைக்கும் கந்தகத்தை உருவாக்கும் என்ஸைமை (enzyme) செயல் இழக்கச் செய்துள்ளனர்.மேலும் இந்த என்ஸைமை வீணாக்காமல் அதை நல்ல வாசனையைத் தரும் விதத்திலும் மாற்றியமைத்துள்ளனர். இதனால் இந்த வெங்காயத்தில் நல்ல வாசனையும் வருகிறதாம்.ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெங்காயம் புழக்கத்துக்கு வர பல ஆண்டுகள் ஆகுமாம்.அதுவரை அழுவோம்.

இந்தியா போன்ற நாடுகளில் பயிரிட வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. நமக்கும் அந்த உரிமை கிடைக்கும் என நம்புவோம்.




அன்புடன் ஜோதிபாரதி

முரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம்



முரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம்






சனிக்கிழமை, பிப்ரவரி 2, 2008

ஹோபர்ட்: முத்தரப்பு போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் முட்டையை வீசியுள்ளனர்.ஆஸ்திரேலியாவில் நாளை இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா பங்குபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.இலங்கை அணியின் வீரர்கள், நேற்றிரவு ஹோபர்ட்டில் இரவு உணவை சாப்பிட்டு விட்டு தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது சுழற்பந்து வீச்சாளர் முரளீதரன் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் முட்டையை வீசி எறிந்தனர்.தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து வீரர்களை பாதுகாப்பாக அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் வந்த போதும் முரளீதரனை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேலி செய்துள்ளனர்.முரளீதரனின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய நடுவர்கள் குறை கூறினாலும், அதன் பின்னர் நடந்த சோதனையில் அவரின் பந்து வீச்சில் எந்த தவறும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.


தொடர்ந்து இதே வேலையைச் செய்யும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் மற்றும் வீரர்கள், தங்களை யார் என்று நினைத்துக் கொள்கிறார்கள்?



அன்புடன் ஜோதிபாரதி.


தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம்!

தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம்!

வெள்ளையைப் பார்த்து
வெளிரிப் போனது
தன் நிறம் மறந்து

மஞ்சளைப் பார்த்து
மறைத்துக் கொண்டது -தன்
மகிமையை

கறுப்பைப் பார்த்து
கவிழ்ந்து விட்டது
கடைச் சரக்காகி

சாயம் வெளுத்துக்கொண்டு
மகிழ்ந்திருந்தது
தன்னையே மாற்றிக் கொண்டு
சமூகப் பண்பாடு மறந்த
மாந்தளிர்...!



அன்புடன் ஜோதிபாரதி

வார்ப்பு இணைய இதழ் 31.03.2008
கீற்று இணைய இதழ் 01.04.2008
முத்துக்கமலம் இணைய இதழ் 02.04.2008
பதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008
லங்காஸ்ரீ கவிதைகள் 18.03.2008

Friday, February 1, 2008

நிற்காமல் நின்றுகொண்டு...

நிற்காமல் நின்றுகொண்டு...

பள்ளி விட்டதும்
எங்கும் நிற்காமல்
வீட்டுக்கு வந்துவிடு
அம்மா சொன்னது
மனதில் ஒலித்தது
காத்திருந்தேன் பேருந்துக்காக

இருட்டியதும் வந்தது
பேருந்து இறுமாப்புடன்

இடம் கிடைக்குமா என்ற
ஏக்கத்துடன் படியில்
உந்தி ஏறியதும்
நிற்காமல் பறந்தனர்
நடத்துனரும் ஓட்டுனரும்

மதியம் உண்ட களைப்பில்
மயங்கிப்போய் நான்
இருக்கையில் இருக்க
இடமில்லாமல்
நின்று கொண்டே விழுந்தேன்
தூக்கம் சொக்கியதும்

இடம் வந்ததும்
இறங்கிக்கொண்டேன்
எதுவுமே தெரியாத இருட்டு
இருந்தாலும் கண்டேன்
தெரியாத தெருவும்
எரியாத விளக்கும்
அதற்குத்தான்
தெருவிளக்கென்று பேரோ?
கும்மிருட்டில் காத்திருந்த
சிற்றொளிக் கைவிளக்கு
தம்பி என்று தழுவிக்கொண்டது
என் தாய்.



அன்புடன் ஜோதிபாரதி

வார்ப்பு இணைய இதழ் 03.03.2008
கீற்று இணைய இதழ்

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை