Friday, November 30, 2007

வழக்கறிஞர் வே.சிதம்பரம் அவர்களைப் பற்றி இலங்கை தமிழறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள்

எனது அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய வழக்கறிஞர் வே.சிதம்பரம் அவர்களை பற்றி இலங்கை தமிழறிஞர் பேராசிரியர் முனைவர் கா.சிவத்தம்பி அவர்கள், தனது "தமிழ் இலக்கிய வரலாறு" எனும் நூலின் முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் என்பதை அறிந்து பெருமிதம் கொள்கிறேன்.

"தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நான் ஆய்வுப் பணி மேற்கொண்டிருந்த பொழுது எனக்குப் பேருதவி புரிந்த எனது தஞ்சை நண்பர்கள் பற்றிக் குறிப்பிடல் வேண்டும். அறிவுத் தொடர்பாகத் தொடங்கியது இன்று அன்பிணைப்பாக வளர்ந்துள்ளது. அ. மார்க்ஸ், அவர்களின் உதவியில்லையேல் இப்பணியினை நான் நிறைவு செய்திருக்கவே முடியாது. பின்னிணைப்புக்கள் தயாரிப்பில் அவர் பெரிதும் உதவினார். மார்க்ஸ் தன்னலமற்ற நண்பன்; அவரது நண்பராய் வந்து, இன்று எனது நட்பைத் தமதுரிமைப் பொருளாக்கிக் கொண்ட திரு. பொ.வேலுசாமி, எமது பல்வேறு உரையாடல்களின் பொழுதுகேட்ட கேள்விகள் காரணமாகப் பல்விடயங்கள் பற்றிச் சிந்திக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. வழக்கறிஞர் வே.சிதம்பரம் அவர்கள் காட்டிய அன்பு பெரிது. சி.அறிவுறுவோன், ரமணி, மதிவாணன் முதலியோர் பெரிதும் உதவினர். இவர்களுக்கு என் நன்றி."

அன்புடன் ஜோதிபாரதி

Thursday, November 29, 2007

மலேசிய தமிழர்களை காக்க நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கோரிக்கை

மலேசிய தமிழர்களை காக்க நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கோரிக்கை

வியாழக்கிழமை, நவம்பர் 29, 2007

டெல்லி: மலேசியாவில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் நலனைக் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று அனைத்துக் கட்சி எம்பிக்களும் தீவிரமான கோரிக்கை விடுத்தனர்.ராஜ்யசபாவில் இந்த பிரச்சனையை திமுக எம்பியான திருச்சி சிவா கிளப்பினார். அவர் பேசுகையில்,தங்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்துவதை எதிர்த்தும், சம உரிமைகள் கோரியும் மகாத்மா காந்தியின் படத்துடன் அமைதியான ஊர்வலம் நடத்திய தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது மலேசிய அரசு போலீசாரை விட்டு தாக்கி பலப் பிரயோகம் செய்துள்ளது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் அந்த அமைதி ஊர்வலத்தில் வந்தவர்களை தாக்கியுள்ளனர்.

இது போன்ற ஏதேச்சதிகாரமான செயலை ஏற்கவே முடியாது.இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு உடனே நடவடிக்கையில் இறங்கும் என நம்புகிறோம் என்றார்.திமுக எம்பியான கனிமொழி பேசுகையில், இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மனித நேயமற்றது. அந்த நாட்டின் வளர்ச்சிக்காக இவ்வளவு உழைத்த மக்களை மலேசியா இவ்வாறு நடத்துவது மிகவும் தவறு என்றார்.அதிமுக எம்பியான மலைச்சாமி பேசுகையில், சம உரிமை கோரி தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் இயக்கத்தை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 64 இந்துக் கோவில்களை மலேசிய அரசு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியான ராா பேசுகையில், மலேசிய அரசின் செயல் மிகவும் கவலை தருகிறது. இந்திய வம்சாவளியினர் மலேசிய குடிமக்களாகிவிட்ட பின்னரும் அவர்களுக்கு சம உரிமை தரப்படவில்லை. அவர்களது மனித உரிமைகள் கூட மீறப்படுகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.காங்கிரஸ் எம்பியான நாராயணசாமி பேசுகையில், சீனர்களுக்கு சம உரிமை தந்துள்ள மலேசிய அரசு இந்தியர்களுக்கு அதைத் தர முப்பது ஏன். எந்தத் தவறும் செய்யாத இந்தியர்களை தாக்கி சிறையில் தள்ளியது ஏன். இதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இது குறித்து மலேசிய அரசுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கண்டிப்புடன் பேச வேண்டும் என்றார்.

உறுப்பினர்களின் கவலையை பகிர்ந்து கொண்ட அவையின் துணைத் தலைவர் ரஹ்மான் கான், இந்த அவையின் ஒட்டு மொத்த கவலை இது. இதை வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியது நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் சுரேஷ் பச்செளரியின் கடமை என்றார்.இதற்கு பதிலளித்த பச்செளரி, இது குறித்து முகர்ஜியுடன் பேசுவேன் என்றார்.மக்களவையில் இணையமைச்சர் இளங்கோவன் பேசுகையில், தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து மலேசிய அரசு விமர்சித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட மலேசியாவிற்கு உரிமை இல்லை என்றார்.

முன்னதாக கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்து மலேசிய நீதித்துறை அமைச்சரும் பிரதமர் அலுவலகத்துறை அமைச்சருமான நஸ்ரி அஜீஸ் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்பிக்களும், அமைச்சர்களும் மக்களவையில் அவையின் மையப் பகுதியில் வந்து நின்று கண்டனம் தெரிவித்தனர்.மலேசிய அமைச்சரைக் கண்டித்து குரல் எழுப்பினர்.

நன்றி-தட்ஸ்தமிழ்

வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு 10 கட்டளை! * மாணவர்களுக்கு அப்துல் கலாம் யோசனை

சென்னை: "இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு, பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் தேவை. இந்த குறிக்கோளை அடைந்தால், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்," என்று `தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுரை கூறினார்.

முன்னேற்றத்திற்கு 10 கட்டளைகளைப் பின்பற்றலாம் என்று யோசனையும் கூறினார். சென்னை மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கான `தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. சென்னை மாநகரில் உள்ள 36 மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில், `தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். `தினமலர்' வெளியீட்டாளர் இரா.லட்சுமிபதி, `தினமலர்' பங்குதாரர் இரா.ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:

`தினமலர்' நடத்தும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, மிகவும் நல்ல நிகழ்ச்சி. உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதற்காக `தினமலர்' குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்; மாணவர்களையும் வாழ்த்துகிறேன். இன்றைய நிகழ்ச்சியில், `இன்றைய இளைய சமுதாயம் வருங்காலத்தைப் பற்றி பயமே இல்லாமல் வாழ வேண்டும்' என்பதே என் கருத்து மூலமாகும். உங்களை காணும் போது பல காட்சிகளைப் பார்த்தேன். ஒரு காட்சியில் 20 வயதிற்குள்ளே இருக்கும் அனைத்து இளைஞர்களையும் பார்க்கிறேன். உங்களுடைய மலர்ந்த முகங்களைப் பார்க்கிறேன். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கல்வியினால், கல்விப் பயனால் உங்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாக திகழ, பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாக திகழ, நாட்டிற்கு நல்ல குடிமகனாக திகழ வாழ்த்துகிறேன். இந்தியா 2020ல் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே நம் நாட்டின் குறிக்கோள். வளமான நாடு என்றால், பொருளாதாரம் வளமிக்க, நுாறு கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நாட்டின் லட்சியம். வேலை இல்லை என்ற நிலை மாறி, நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்கு தேவை. இளைய சமுதாயம், எண்ண எழுச்சியுள்ள இளைய சமுதாயம் நாட்டின் அரும் பெரும் செல்வமாகும். 2020ல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை சமீபத்தில் நான் பார்லிமென்ட்டில் பேசும் போது தெரிவித்திருந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் சிந்தனை ஒன்றுபட்டால், செயல் ஒன்றுபட்டால் லட்சியம் நிறைவேறும். 10 கட்டளைகளைப் பின்பற்றினால் லட்சியம் நிறைவேறும்.

1)கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

2)சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லாருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

3)விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

4)பண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

5)விஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லுனர்களும், தொழில் முதலீட்டாளர்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு இடமாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

6)அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் தரமான மருத்துவ வசதி கிடைக்கக்கூடிய நாடாக மாற்ற வேண்டும்.

7)ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

8)வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

9)இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீடுநடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

10)உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக் கூடிய தலைவர்களை பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும். மன எழுச்சி அடைந்துள்ள 54 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க, நமது இளைய தலைமுறை எழுச்சி பெற வேண்டும். கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால், அது மாணவர்களின் படைப்புத் திறனையும், ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

சிறுவனாக இருந்த போது நானும் பயந்தேன்!:
விழாவில் கலாம் பேசும் போது குறிப்பிட்டதாவது: உங்களைப் போல் நான் சிறுவனாக இருக்கும் போது, என் மனதில் பல பயங்கள் தோன்றின. எனது கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற கேள்வி எழுந்தது. நான் ராமநாதபுரம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற போது, அங்கு மாணவர்கள் அருமையான உடைகளை அணிந்து, ஆங்கிலத்தில் பேசியதைக் கண்டேன். அவர்கள் குழுவில் என்னை சேர்ப்பார்களா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.

ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்ததும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்குமா, இன்ஜினியரிங் கல்லூரியில் சேர முடியுமா? என்ற எண்ணங்கள் என்னை வாட்டி எடுத்தன. பத்தாம் வகுப்பில் சென்றவுடன், இந்த எண்ணங்கள் என்னை விட்டு மறைந்து விட்டன. காரணம், எனக்கு கிடைத்த அருமையான பொக்கிஷம் என் ஆசிரியர். அந்த ஆசிரியர், நல்ல லட்சியத்தைக் கொடுத்தார்; நல்ல லட்சியத்தைக் கற்பித்தார். எனது புதிய லட்சியம் ஆரம்பித்தது. இவ்வாறு கலாம் குறிப்பிட்டார்.

இப்படியும் நல்ல மனிதர்கள்:
பழைய நிகழ்ச்சி ஒன்றை நினைவு கூர்ந்து கலாம் பேசியதாவது:
`தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியை பார்த்ததும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நான் ஜனாதிபதியாக இருந்தபோது, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்தேன். நான் பயணித்த விமானத்தில், பத்திரிகையாளர்களும் வந்தனர். இரா.கிருஷ்ணமூர்த்தியும் வந்திருந்தார். விமானத்தில் நான் பேட்டி கொடுத்தேன். பத்திரிகையாளர்கள் மிகவும் கடினமான கேள்விகளை எல்லாம் கேட்டனர். `எப்போதாவது நல்ல மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா?' என்று கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கேள்வி கேட்டார். அதற்கு, அப்போது என்னால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக வந்தபோது, ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை பதிலாக கூறுகிறேன்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் அப்போது மூர் மார்க்கெட் இருந்தது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பழைய புத்தகங்களை வாங்குவதற்காக நான் அங்கு செல்வேன். ஒரு நாள் திடீரென்று நீ ராமேஸ்வரம் வர வேண்டும் என்று தகவல் வந்தது. அப்போது, அங்கு புயல் வீசிக் கொண்டிருந்தது. ராமேஸ்வரம் செல்வதற்கு கையில் என்னிடம் பணம் இல்லை. அப்போது நான் எம்.ஐ.டி.,யில் படித்துக் கொண்டிருந்தேன். எம்.ஐ.டி., தலைவர் மற்றும் துணைவேந்தராக லட்சுமணசாமி முதலியார் இருந்தார். அவர் எனக்கு பரிசாக கொடுத்த ஒரு புத்தகத்தை (ஸ்ட்ரென்த் ஆப் மெட்டீரியல்) வைத்திருந்தேன். அதன் விலை 200 ரூபாய்.அந்த புத்தகத்தை மூர் மார்க்கெட்டில் உள்ள கடையில் கொடுத்து, விவரத்தை கூறி, பணம் கிடைக்குமா என்று கேட்டேன். கடைக்காரரும் புத்தகத்தை வாங்கிக் கொண்டு நுாறு ரூபாய் கொடுத்தார். புத்தகத்தை கூர்ந்து பார்த்த கடைக்காரர், `துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியார் கையெழுத்து இருக்கிறதே! இது மிகவும் நல்ல புத்தகம். அதை உனக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். எனவே, புத்தகத்தை விற்க மாட்டேன். உனக்கு எப்போது கல்வி உதவித் தொகை கிடைக்கிறதோ, அப்போது வந்து பணத்தை திருப்பி கொடுத்து விட்டு புத்தகத்தை வாங்கிச் செல்' என்றார். அவர் பெயர் தட்சிணாமூர்த்தி; மிகவும் நல்ல மனிதர். பிறகு மூன்று மாதம் கழித்து நூறு ரூபாயை கொடுத்து விட்டு மீண்டும் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். இப்படியும் நல்ல மனிதர் இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டேன். தேவை ஏற்படும்போது உதவி செய்வது தான் நல்ல குணம்.

நன்றி-தினமலர்

பூனைக்கு மணி கட்டினார் மலைச்சாமி!

தமிழ் மொழிபெயர்ப்பாளர் பல மாதங்களாகவே இல்லாமல் இருந்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற இந்திய பாய்லர் சட்ட மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக எம்.பி.,யான மலைச்சாமி தமிழிலேயே தொடர்ந்து பேசினார். இதை மொழி பெயர்க்க ஆள் இல்லாத காரணத்தாலும் மற்ற எம்.பி.,க்கள் விழித்தனர்.

பார்லிமென்ட்டின் இரு அவைகளிலுமே அந்தந்த மாநில மொழிகளில் எம்.பி.,க்கள் பேசலாம். இவர்கள் தங்களது தாய்மொழியில் பேசும்போது, அதை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ மொழிபெயர்க்க ஏராளமான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். குறிப்பிட்ட எம்.பி., என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை உடனுக்குடன் இந்த ஊழியர்கள் மொழிபெயர்த்து மைக்கில் ஒலிபரப்புவர். இதனால், தங்களது சொந்த மொழிகளில் பிரச்னைகளை பேசும் வாய்ப்பு எல்லா எம்.பி.,க்களுக்குமே உண்டு.ஆனால் ராஜ்யசபாவில் பணியாற்றி வந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர் விருப்ப ஓய்வு பெற்றுச் சென்று ஒரு ஆண்டு ஆகும் நிலையில், இதற்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. இதுகுறித்து தமிழக எம்.பி.,க்கள் பலமுறை முறையிட்டும், கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. மொழி பெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும்படி விளம்பரம் வெளியிட்டும் யாரும் வரவில்லை என ராஜ்யசபா அலுவலகம் காரணம் கூறியதாக தெரிகிறது. பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் இந்த பிரச்னை நேற்று ராஜ்யசபாவில் வெடித்தது. நேற்று மதியம் ராஜ்யசபாவில் இந்தியன் கொதிகலன் சட்ட மசோதா மீது அதிமுக வைச் சேர்ந்த மலைச்சாமி எம்.பி., பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.அப்போது எழுந்த அவர், முதலில் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். "ராஜ்யசபாவில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் இல்லை என்ற குறையை பலமுறை சுட்டிக் காட்டியுள்ளோம். அதற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. பல காரணங்களை கூறி இப்பிரச்னை இழுத்தடிக்கப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை எனகூறி விளம்பரம் செய்யப்பட்டதாகவும், ஆட்கள் கிடைக்கவில்லை என்றும் காரணம் கூறப்படுகிறது. விளம்பரம், எங்கு எந்த நாளிதழில் தரப்பட்டது? தமிழ் நாளிதழ்களில் அல்லவா விளம்பரம் செய்திருக்க வேண்டும்? நிரந்தரமான பணி இது என்ற போதிலும் இப்பிரச்னை "ஜெனரல் பர்ப்பஸ்' கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகள் பிரச்னைக்கு தீர்வு காண்பது போல தெரியவில்லை. போகாத ஊருக்கு வழி சொல்வது போல உள்ளது. எங்களது பிரச்னைக்கு தீர்வு காண்பதை தவிர்க்க நினைக்கிறீர்கள். இன்று என்ன ஆனாலும் சரி. பூனைக்கு மணி கட்டும் நடவடிக்கையாக நான் எனது தாய் மொழியான தமிழ் மொழியில் தான் பேசப் போகிறேன்' என்று கூறினார். மலைச்சாமியின் இந்த திடீர் தாக்குதலால் பிற எம்.பி.,க்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக எம்.பி.,க்கள் மத்தியில் உற்சாகம் கிளம்பியது. அவர்கள் பலத்த ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தவுடன் தமிழில் பேச ஆரம்பித்தார் மலைச்சாமி. "தமிழ் தொன்மையான மொழி. தனித்தன்மையான மொழி. இனிமையான மொழியும்கூட. காட்டுமிராண்டிகளாக மனிதன் வாழ்ந்த காலங்களில் கூட எனது தமிழன் ஏடு கொண்டு இலக்கியம் படைத்துள்ளான். அப்படி கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த மொழிதான் எங்களது அருமை தமிழ்மொழி' என்று பேசிவிட்டு தமிழ் மொழியின் சிறப்பு குறித்த பாவேந்தர் பாரதிதாசன் கவிதை ஒன்றை சரளமாகக் கூற, அவையில் பரபரப்பு கூடியது.

மலைச்சாமி என்ன பேசுகிறார் என்பதை புரியாமல் பிற எம்.பி.,க்கள் முழித்தனர். எம்.பி.,யின் பேச்சை எவ்வாறு பதிவு செய்வது என்று தெரியாமல் ஊழியர்களும் பார்த்துக் கொண்டிருக்க அவைத் தலைவர் இருக்கையில் இருந்த சந்தோஷ் பகரூடியா," மிஸ்டர் மலைச்சாமி, நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். ஆனாலும், நீங்கள் தமிழில் பேசுவதால் எங்களுக்கு எதுவும் புரியவில்லை' என்று கூறினார். ஆனால் பிற தமிழக எம்.பி.,க்கள் சையதுகான், அன்பழகன், கோவிந்தராஜர், மைத்ரேயன், திருச்சி சிவா, சுதர்சன நாச்சியப்பன் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் அனைவரும் மலைச்சாமிக்கு ஆதரவாகவும் அவரை தமிழிலேயே பேசும்படியும் உற்சாகப்படுத்தினர்.

அவையில் திடீரென கிளம்பிய இந்த பரபரப்பால் சற்று கூச்சல் கிளம்பியது. "மலைச்சாமி தமிழில் பேசுவதில் நியாயம் உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பாளர் பிரச்னை வேண்டுமென்றே காலம் கடத்தப்படுவது முறையல்ல' என கர்நாடக, ஆந்திர மாநில எம்.பி.,க்கள் உள்பட பலரும் எழுந்து குரல் கொடுத்தனர். பின்னர் இறுதியாக மலைச்சாமி, " தமிழ் மொழிபெயர்ப்பாளர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதை அடையாளப்படுத்தவே தமிழில் தொடர்ந்து பேசினேன். அனைத்து எம்.பி.,க்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். எனவே இனி நான் இந்த மசோதா மீது ஆங்கிலத்திலேயே எனது உரையை தொடர்கிறேன்' என்று கூறிவிட்டு கொதிகலன் மசோதா மீது ஆங்கிலத்தில் பேசி முடித்தார். இதனால், ராஜ்யசபாவில் எழுந்த திடீர் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

-தினமலர் செய்தி

Wednesday, November 28, 2007

தமிழ்ப்பெண் எப்படி இருக்கவேண்டும்?

தமிழ்ப்பெண் எப்படி இருக்கவேண்டும்?





ஒரு நாட்டுக்கான சட்டதிட்டங்களைவிட, ஒரு பெண்ணுக்கான சட்டதிட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. பிறக்கும் ஆண் குழந்தை கண் திறப்பதற்கு முன்பே ஆணையிடக் கற்றுக்கொள்கிறது. பெண் குழந்தையோ, கத்தி முனைக்குத் தப்பித்தான் கண்களையே திறக்கிறது.காலமெனும் பெருவெள்ளம் ஓடிக்கொண்டே இருப்பதால் காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எழுச்சிமிக்க பெண்களின் புதிய யுகம் மலர்ந்திருக்கிறது. மரபின் மண்ணில் கால்பதித்துப் புதுமையின் வானில் தலை நிமிர்த்துவதாய் உள்ளது, இன்றைய பெண்ணியம். 'ஒரு தமிழ்ப் பெண் எப்படி இருக்கவேண்டும்?' என்று பல்வேறு தளங்களில் உள்ள பெண்களைக் கேட்டோம். இதோ, பெண்குலத்தின் குரல்கள்:


கீதா (குடிசைவாழ் பெண்மணி)

தமிழ்ப் பொண்ணு, அடக்க ஒடுக்கமா இருக்கணும். ஒழுங்கா டிரெஸ் போடணும். சேலை கட்டணும். சல்வார், சுடிதார் போடலாம்.நேரத்துக்குப் போயிட்டு நேரத்துக்கு வரணும். குடும்பத்துக்கு அடங்கி இருக்கணும். நம்ம இஷ்டத்துக்கு இருக்கக் கூடாது. பெரியவங்க பேச்சக் கேட்கணும்.வசதி இருந்தா ஆம்பளையவிட பொம்பளை அதிகம் படிக்கலாம். ஆம்பளை அல்லது பொம்பளை ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் படிக்க வைக்கணும்னா, நான் பொம்பளையத்தான் படிக்க வைப்பேன். ஆம்பளைப் பையன் வெளியில போறான், வரான். நாலும் தெரிஞ்சுக்குவான். தாய், தகப்பன் அனுமதியிலதான் பொம்பளை வெளியில போவுது. அதுக்குத்தான் படிப்பு வேணும்.படிச்ச பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி, வீட்டுக்காரர் நல்லவரா இருந்தா வெளியில வேலைக்குப் போவலாம். வேலைக்குப் போறதுக்கு மட்டுந்தான் படிப்புன்னு இல்ல. பஸ் நம்பர் பாக்கறதுக்கு, பேப்பர் படிக்க எல்லாத்துக்கும் படிப்பு உதவும்.நான் ஆறாவது வரைக்கும் படிச்சேன். கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிச்சதால புத்தி சுமாராத்தான் இருக்குது. எனக்கு ரெண்டு வயசுல ஒரு பொண்ணு இருக்கு. அதை நான் கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிக்க வைக்கமாட்டேன். கஷ்டப்பட்டாவது பீஸ் கட்டித்தான் படிக்க வைப்பேன். தமிழ்ப் பொண்ணு தவறான வழியில போகக் கூடாது. பொட்டு அவசியம் வெச்சுக்கணும். நகையில்லாமப் பெண்கள் இருப்பாங்களா, என்ன? கல்யாணத்துல பொண்ணுக்குத் தாலி வேணும். பாதுகாப்புக்குத் தாலி அவசியம். தமிழ்ப் பொண்ணுக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கணும்.


செளந்திரவல்லி (குடும்பத் தலைவி)

அவள் புடவை கட்டணும். பொட்டு வைக்கணும். அந்தக் கால நகைகள் அணியணும். கண்ணாடி வளையல் கூடாது. உடனே உடையும். அது அபசகுனம். பொருத்தமான அலங்காரம் வேணும். பட்டன் தோடு, நீளமாத் தொங்குற பிளாஸ்டிக் தோடு கூடாது.கணவன் - மனைவி இருவரும் ஒருவர்மேல் ஒருவர் அன்போட இருக்கணும். கணவன் சரியில்லை என்றாலும் பெண் ஓரளவு பொறுத்துப் போக வேண்டும். அவன் ரொம்ப அராஜகம் செய்தால், அவ வெளியே வரலாம்.எங்கே போனாலும் சொல்லிட்டுப் போகணும். இரவு வெளியே போகக் கூடாது. ஏன்னா, உலகத்துல பாதுகாப்பில்ல. சமையல், வீட்டுவேலை அவசியம் கத்துக்கணும்.கணவனுக்கு முந்தி எழுந்துக்கறது, அவன் கால்தொட்டு வணங்குறது, அவன் எள்ளுன்னா எண்ணெயா நிக்கறது... எல்லாம் செய்யலாம்தான். ஆனா, அதுக்குத் தகுதியாய்க் கணவன் நடந்துக்கணும். என்னைப் பொறுத்தவரைக்கும் கணவனுக்கு மனைவி கால்பிடிச்சு விடலாம்; மனைவிக்கும் கணவன் கால்பிடிச்சு விடலாம்.பொண்ணு தன்னை நம்பணும். அப்புறம்தான் தெய்வத்தை நம்பணும். நித்திய பூஜைகள் செய்யணும். வேலைக்குப் போறவங்க, முடியறப்ப செய்யலாம்.


சுதா (சட்டக் கல்லூரி மாணவி - பார்வையிழந்தவர்)

கட்டப்பட்ட மாடு மேய்வது போல்தான் பெண் இருக்கிறாள். சுடிதாரும் ஜீன்சும் அணிபவள்கூடத் தமிழ்ப் பெண்தான். தைரியம்தான் அவளின் அடையாளம். விஷய ஞானம் அவளுக்கு வேண்டும். பயம் கூடாது. எதிலும் துணிந்து இறங்கவேண்டும். தான் எப்படி இருக்கவேண்டும் என்று அவள் தானே தீர்மானிக்க வேண்டும். ஃபேஷன் ஷோ, அழகிப் போட்டிகள் அதிகமாவது கூடாது. நல்லவை வாழ வேண்டும். தீயவை வீழ வேண்டும்.முன்பு ஆண்களைப் பார்த்தாலே தப்பு; பேசினாலே தப்பு என்ற நிலை இருந்தது. இப்போது சகஜமாகத் தொட்டுப் பேசும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்பின் அறியாதவருடன் பேசும்போதுகூட 'ஹாய்' சொல்லிக் கைகுலுக்குவது இயல்பாய் இருக்கிறது. அதனால் 'கற்பு' என்பதன் அர்த்த எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. உண்மையில் தாய்மைதான் கற்பு. பாலியல் வன்முறைக்கு ஆளானவள், தற்கொலையும் செய்யக் கூடாது; அவனையே திருமணமும் செய்யக் கூடாது. அவன் மீது வழக்குத் தொடுக்க முன்வர வேண்டும்.தவறு, சரி என்பதைத் தானே தீர்மானிக்க வேண்டும். அவற்றைத் தன் வீட்டாருக்கு விளக்க வேண்டும். மூன்று வாய்ப்புகளிலும் அவர்கள் ஏற்காமல் எதிர்ப்பார்களேயானால், அவள் வெளியே வந்துவிடலாம். தன் காலில் நிற்கும் சக்தி அவளுக்கு உண்டு.குறிக்கோள், தன்னம்பிக்கை, தைரியம், சமாளிக்கும் திறன் என்ற நான்கு குணங்களைப் பெண்கள் குறைந்தபட்சம் கொண்டிருக்கவேண்டும்.


குணசுந்தரி (முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைப் பல்கலைக்கழகம்)

தமிழ்ப் பெண் என்ற சொல்லே அவளை மறு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. தாய்வழிச் சமூகத்திலிருந்து மாறித் தந்தை வழிச் சமூகத்திற்கு வந்த பிறகுதான் ஆண் முக்கியமானவன் ஆனான்.'வினையே ஆடவர்க்கு உயிரே' - என்பதை நான் ஏற்கமாட்டேன். 'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே' - என்ற பாடல், பெண்ணின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. பெண் அரவணைக்காவிட்டால் பிள்ளைகள் தறுதலைகளாகத்தான் திரிவார்கள்.அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவை எல்லா உயிர்களிடமும் உள்ளன. அவற்றைப் பெண்ணுக்கு மட்டுமே பொருத்தியுள்ளனர். பெண்களுக்கான குணங்கள் ஆண்களிடமும் இருக்கக் கூடாதா, என்ன?பெண்ணென்றால் குனிந்துதான் நடக்கவேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. பெண்ணுக்குக் கல்வி அவசியம். ஆனால், அந்தக் கல்வி, சூழலையும் வேலைவாய்ப்பையும் ஒட்டியதாக இல்லை. இன்று பெண்ணியம் பேசுபவர்கள்கூட அவர்கள் பேசுவதுபோல் வாழவில்லை.உடையில் ஒரு பாரம்பரியம் உள்ளது. சீனாவில் விழாக்களின் போது மரபுசார் உடைகளை அணிகிறார்கள். இங்கே சேலை கட்டும் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. சுடிதார் நல்லதுதான். ஆனால், அது தமிழ் அடையாளம் இல்லையே!வெப்ப நாட்டில் கதராடை அவசியம். ஆனால், அது இங்கே ஏழ்மையின் சின்னமாய் இறங்கிப்போய் விட்டது. வெப்பம் நிறைந்த இந்த நாட்டில் ஆண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். பெண்களும் பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.எங்கும் எதிலும் கலப்பு வந்துவிட்டது. பண்டிகைகளிலாவது பழக்கவழக்கம், மரபு, பண்பாட்டு அடையாளம், அணிகலன் என எல்லாவற்றையும் மீட்கவேண்டும். தாலி, மெட்டி போன்றவை தமிழ் அடையாளங்கள் இல்லை. அக்னி முன்பு திருமணம் செய்வது தமிழர் வழக்கமில்லை. தமிழர் அடையாளங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. நம் வழக்கங்களை நமது என்று சொல்லவே வெட்கப்படுகிறோம். காது குத்துதல், நரம்புகளுக்கு நன்மை சேர்க்கிறது. மஞ்சள் பூசுதல் அழகுப் பசைகளுக்கும் மருந்துகளுக்கும் மாற்று; உடலைப் பாதிக்கிறது. உடல் வெப்ப நிலைக்கேற்பவே வைரத்தை அணிந்து வந்தனர்.நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் காரண காரியத்தோடுதான் செய்தார்கள். ஆனால், அவர்கள் அதைச் சொல்லிவிட்டுப் போகவில்லை. எனவே எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்லிவிட முடியாது. ஆய்வு முக்கியம்.


சரசுவதி (பேராசிரியர், இராணி மேரி கல்லூரி)

பெண்ணுக்குப் பிறக்கவே சுதந்திரம் இல்லை. எல்லாத் தளங்களிலும் அவள்மேல் வன்முறை திணிக்கப்படுகிறது. உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குள் அவள் வாழ்கிறாள். அவள் ஒரு போகப் பொருளாக, பிள்ளை பெறும் யந்திரமாக, அழகுப் பொருளாகக் காட்டப்படுகிற போக்கு அடியோடு மாறவேண்டும். பெற்றோருக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, தன் குடும்பத்துக்காக வாழும் தியாகியாகவே அவள் உருவகம் உள்ளது. தனக்காக வாழ்கிற, தன் ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்கிறவளாக அவள் இல்லை. ஒரு சராசரித் தமிழ்ப் பெண் இப்படித்தான் இருக்கிறாள். இந்த 'லட்சுமணக் கோட்டினை' அவள் தாண்டவேண்டும்.எவ்வளவோ போராடி, இட ஒதுக்கீடு மூலம் அவளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தினால், மாநகராட்சி உறுப்பினர்களாகும் பெண்கள் பலரும் தம் கணவருக்குப் பினாமிகளாகவே செயல்படுகிறார்கள். அதனால், சலுகைகளைக் காட்டி மட்டும் பெண்களை முன்னேற்றிவிட முடியாது. அவளுடைய அறிவாற்றைலையும் வினையாற்றலையும் வளர்த்தெடுக்க வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.பிள்ளையைப் பெறுபவள்தான் குழந்தைக்குத் தலையெழுத்தை (முதலெழுத்து) வழங்கியிருக்க வேண்டும். ஆணாதிக்கச் சமூகம் அதை மாற்றியது. ஆண் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் பெண் சேர்ப்பது தமிழ் வழக்கம் இல்லை. அது, மேலைநாட்டு வழக்கம். வரதட்சிணை கூடத் தமிழ் வழக்கம் இல்லை.ஒரு தமிழ்ப் பெண் என்பதைவிட, அடிப்படையில் ஒரு மனுஷியாக அவள் எப்படி இருக்கவேண்டும் என்பதில்தான் எனக்கு அக்கறை அதிகம். மனுஷியானவள் சுதந்திரமாக இருக்கவேண்டும். எதற்கும் யாரையும் சார்ந்து வாழாத நிலை பெண்ணுக்கு வேண்டும். பொருளாதாரம், கல்வி, முடிவெடுத்தல்.... முதலான சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் அவளுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும். தன் சுவைக்கும் வசதிக்கும் ஏற்ப, அவள் உடை அணியவேண்டும்.இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எந்த எல்லைக் கோடுகளையும் நான் இட விரும்பவில்லை. சர்வ சுதந்திரமாகத் தன்னைத் தானே அவள் தீர்மானிக்கட்டும்.
(நன்றி-அண்ணாகண்ணன்)



-இந்த நேர்காணலில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பது தெளிவாகிறது. அம்பானிகளும், அய்யாச்சாமிகளும் வாழும் நாடாச்சே இந்தியா. வேறுபாட்டுக்கு இந்தியாவில் பஞ்சமா என்ன?

என்னை கவர்ந்தவை!

என்னை கவர்ந்தவை!


குடும்பமே தற்கொலைக்குத்
தயாராய்
தீப்பெட்டி


செத்தபின்னும்
நடக்கிறது மாடு
தோல் செருப்பு

-யூசுப்


மலரே நீயும் பெண் தானே
பிறந்த வீட்டில் மலர்கிறாய்
புகுந்த வீட்டில் உலர்கிறாய்

-பொன்ராஜ்




ஏரியின் மீதூர்ந்து
கரையாமல் மூழ்காமல்
பனைமரமீதினில்
ஏறிப்பின் இறங்கி
சிந்தாமல் சிதறாமல்
கள்ளிமுள் காட்டிடையே
காயப்படாமல்
குத்திய குச்சியில் வீழ்ந்து
கிழிபட்டும் போகாமல்,
பள்ளங்கள் பாய்ந்தும்
மேடேறி ஊர்ந்தும்
உடைபட்டு போகாமல்
பயணிக்கும்
பருந்தின் நிழல்

-இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்

Sunday, November 25, 2007

கவிஞர் அறிவுமதி

படகில் ஏறினோம்
படகுகளை விற்று
இங்கே வீடு கிடைப்பதற்குள்
அங்கே நாடு கிடைத்துவிடும்
இராமேசு வரத்தில்
எல்லோரும்
குளித்துக் கரையேறுகிறார்கள்
நாங்கள்
குதித்துக் கரையேறுகிறோம்.

கவிஞர் அறிவுமதி அவர்களின் கவிதையை படித்தபோது என்னுடைய நெஞ்சு கனத்தது.

Saturday, November 24, 2007

கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப் இந்தியா - CPM! CPI!(இவர்களா இப்படி?)

கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப் இந்தியா - CPM! CPI!


போலி கம்யுனிஸ்டுகளை புரட்சியாளர்கள் விமர்சனம் செய்வது என்ன புதிய விசயமா? ஆனால் போலி கம்யுனிஸ்டுகளை கண்டனம் செய்வது இன்று புதிய வழமையாக மாறி உள்ளது. ஏனேனில் நேற்று வரை போலி கம்யுனிஸ்டுகளை விமர்சனம் செய்வதற்க்கு ஒருவன் புரட்சியாளனாக, முற்போக்காளனாக இருக்க வேண்டும் அல்லது அரசியல் விழிப்புணர்ச்சி உள்ளவனாக இருக்க வேண்டும். இன்று ஒரு மனிதனாக சுயமரியாதை உடையவனாக இருந்தாலே போதும் அவன் போலி கம்யுனிஸ்டுகளை விமர்சிக்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு தள்ளப்படுகிறான். சத்தியமாக இதில் புரட்சியாளர்களின் பங்களிப்பு ஒன்றுமே கிடையாது. இது முற்றுமுதலாக போலிகளும், மறுகாலனிய எஜமானர்களும் சேர்ந்து உருவாக்கிய சூழல்தானேயன்றி வேறல்ல.நந்திகிராமில் நிகழ்ந்துள்ளவை எந்த மனிதனையும் CPM(டாடாயிஸ்ட்)களின் முகத்தில் காறி உமிழச் செய்யும் அளவு கேவலமான விசயங்கள். படு கோழைத்தனமாக போலிசு உள்ளிட்ட சகல அரசு இயந்திரத்தின் துணையுடனும் மக்கள் மீது யுத்தம் தொடுத்துள்ளார்கள் இந்த பாசிஸ்டு கோழைகள். நேற்றுவரை இந்த பாசிஸ்டு கும்பலுடன் இருந்தவர்கள் கூட இன்று வெட்கி வேதனைப் பட்டு இவர்களை கடுமையாக கண்டனம் செய்யும் அளவு நிலைமை வெட்கக்கேடாக உள்ளது. CPM ஆட்களோ தலையில் முக்காடு போடாத குறையாக பதில் சொல்ல அஞ்சி தமது நண்பர்களைக் கண்டு கூட ஓடுகிறார்கள். குஜராத் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வெட்கங்கட்ட வன்முறை கொலை வெறிச் செயலுக்கு எந்த வகையிலும் குறைவின்றி நந்திகிராமில் தாக்குதல் தொடுத்துள்ளனர் இந்த காம்ரேடுகள் – மார்க்ஸிஸ்டு வேடம் போட்ட பாசிஸ்டு கோழைகள்.


என்ன காரணமாம்? புத்ததேவ் சொல்கிறார், அவர்கள் எப்படி கொடுத்தார்களோ அதே போல நாங்களும் திருப்பிக் கொடுத்தோம் என்று. யார் இந்த ‘அவர்கள்’? நந்திகிராம் பகுதியிலிருந்த 2000 சொச்சம் CPM ஆதரவாளர்கள் தவிர்த்து மீதியுள்ள மிகப் பெரும்பான்மையான மக்கள்தான் அந்த ‘அவர்கள்’. யார் அந்த ‘நாங்கள்’? டாடா, இந்தோனேசியாவில் கம்யுனிஸ்டுகளை வேட்டையாடிய சலீம் கும்பல், போபாலில் விச வாயு கசிய விட்டு மக்களை கொன்று குவித்த பழைய யூனியன் கார்பைடு புதிய பெயரில் டௌவ் கெமிக்கல்ஸ, நந்திகிராமின் மீது முதல் முறை CPM குண்டர்கள் தாக்குதல் தொடுத்த போது கங்காணி வேலை பார்த்த CPM ஆதரவாளர்கள், இது தவிர்த்து CPM தரகு தாதாக்கள் இவர்கள்தான் அந்த ‘நாங்கள்’.மக்களாகிய ‘அவர்கள்’ இவர்களுக்கு என்ன கொடுத்தார்களாம்? பதிலடி கொடுத்தார்கள். நந்திகிராம் தொகுதியிலிருந்த விளை நிலங்களை பன்னாட்டு/தரகு கம்பேனிகளுக்கு CPM கூட்டி கொடுப்பதை மக்கள் எதிர்த்தனர். அதை தடுக்க அந்த மக்கள் மீது குண்டு வீசி துப்பாக்கியால் சுட்டு கோடூரமானதொரு தாக்குதலை CPM குண்டர்களும், போலீசும் சேர்ந்து சில மாதங்கள் முன்பு நடத்தினர். அதில் 44 பேர் படு கொலை செய்யப்பட்டனர். பெண்களை வன்புணர்ச்சி செய்தும் சாகசம் செய்தனர் ‘காம’ரேடுகள். அதனை தொலைக்காட்சியில் விளம்பரம் வேறு செய்தார் ஒரு ‘காம’ரேடு. தெஹல்காவால் அம்பலமான இந்து மத பயங்கரவாத பாசிச கும்பலுக்கும், இந்த பொருளாதார பாசிஸ்டுகளுக்கும் தான் எத்தனை ஒற்றுமை?



More Photos
இத்தனையும் செய்த பிறகும் நந்திகிராம் வீழவில்லை. அதற்க்கு பிறகு கடந்த மாதங்கள் முழுவதும் அது ஒரு யுத்த பூமியாகவே இருந்துள்ளது. CPM குண்டர்கள் அரசு துணையுடன் அந்த பகுதியில் செய்த பல்வேறு முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. நந்திகிராம் நின்று, பன்னாட்டு கும்பலுக்கு கூட்டிக் கொடுக்கும் திட்டத்தை விரட்டியடித்தது. கங்காணி வேலை பார்த்த CPM ஆட்களை நந்திகிராம் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த 2000 பேரை நந்திகிராமத்திற்க்கு மீண்டும் சேர்க்கவே இந்த சமீபத்திய யுத்தம் என்றும், திட்டத்தை கைவிட்ட பிறகும் ஏன் CPM ஆட்களை நந்திகிராம் மக்கள் உள்ளே விடமாட்டென் என்கிறார்கள் என்றும் பல்வேறு வசனங்கள் பேசி இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்தி பேசினர் CPM பாசிஸ்டுகள், நந்திகிராமிற்க்குள் நுழைந்ததை ஏதோ அடுத்த நாட்டுக்குள் போர் தொடுத்து நுழைந்தது போல சாதனையாக கொண்டாடிய கையோடு மீண்டும் நந்திகிராமத்தை கூட்டி கொடுப்பது குறித்து விமரிசையாக பேச துவங்கிவிட்டனர். உண்மையில் 2000 CPM காரர்கள் அல்ல மாறாக நந்திகிராமின் வளங்களை நக்கி பிழைக்க CPMக்கு எலும்பு துண்டு வீசிய பன்னாட்டு எஜமானர்களின் கட்டளைக்கு வாலாட்டியே மக்கள் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது CPM வெறி நாய்.



Molina Malik, mother of Tapasi, whose body was found burning in the fields in Singurஇதோ சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த ஒரு செய்தியும் இவர்களின் கொலை, கொள்ளை கற்பழிப்புக்கு சாட்சி சொல்கின்றன. NDTV ஆட்கள் ஒரு கிராமத்தில் நுழைந்த பொழுது அங்கிருந்த 160க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் 85% மேல் எரித்து நாசம் செய்யப்பட்டிருந்தன (நந்திகிராமை முற்றிலும் கைப்பற்றிய பிறகே ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. அதற்க்கு முன்பே இந்த விசயத்தை மோப்பம் பிடித்த ஊடகங்களில் சில தமது சொந்த அரசியல் தேவைக்காக கவர்னரிடம் மனுச் செய்வதில் துவங்கி பல வகைகளில் CPMயை அம்பலப்படுத்த முனைப்பு காட்டியுள்ளன. ஒரு முன்னாள் நீதிபதி ஒருவரும் கவர்னருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியுள்ளார்).காம்ரேட்டுகள் இதற்க்கு முன்பு நடத்திய இதை விட பன்மடங்கு கோடூரமான தாக்குதலில் குண்டுகள் வீசியது, போலிசிடம் இருந்ததை விட அதி நவீன துப்பாக்கிகள் மூலம் மக்களின் முதுகுகளில் வயது வித்தியாசமின்றி சுட்டுக் கொன்றது, பெண்களை வன்புணர்ச்சி செய்தது, சிறுவர், சிறுமியர் முதல் பலரது சடலங்களை மறைக்கும் முகமாக அருகிலிருந்த செங்கல் சூளைக்கு எடுத்துச் சென்றது என்று CPMன் புதிய கம்யுனிச பாணியில் புரட்சி செய்திருந்தனர். இது தவிர்த்து இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க்க வந்த மேதாபட்கரையும் தாக்கியுள்ளனர்.

இத்தனை அநியாயங்களுக்கு பிறகும் கோடூரங்களுக்கு பிறகும் மக்கள் இந்த இழப்புகளை அக்கிரமங்களை எல்லாம் உடனே மறந்துவிட வேண்டுமாம், இவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் இன்னுமொரு தாக்குதல் நடத்தி ஏற்றுக் கொள்ள சொல்லி வன்புணர்ச்சி செய்வார்களாம். என்னே இவர்களது கம்யுனிஸ நடைமுறை. இவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்ல போலிகள் என்பதுதான் நமது நிலைப்பாடு. ஆனால் மறுகாலனிய சூழலில் இவர்கள் பாசிசஸ்டுகளாக புல் டைம் வேலை செய்ய துவங்கிவிட்டனர். போலிகள் என்ற அடைமொழி கூட இவர்களைக் கண்டு வெட்கி தலைகுனிந்து ஓடுகிறது.உண்மையான கம்யுனிஸ்டை விடுங்கள், உண்மையிலேயே சுயமரியாதை உள்ளவனும், மனிதாபிமானம் உள்ளவனும், மனிதனாக மதிக்க தகுதியுள்ளவனும் கூட இனிமேலும் தன்னை CPMக்காரன் என்று சொல்லமாட்டான். ஒரு நாய் கூட இன்னொரு நாயின் மீதான தாக்குதலை தூரமாகவேனும் நின்று பதட்டத்துடன் பார்க்கிறது. CPMக்காரன் என்று தன்னை இனிமேலும் சொல்லிக் கொள்பவன் அந்த நாய்க்கும் கீழானவன். ஏனேனில் சுயமாரியாதை விசயத்தில் அந்த நாய் CPMக்காரனைவிட பல மடங்கு மேலாகும்.CPM வெறிநாயை விடுங்கள் அது பாசிஸ்டு. ஆனால் CPMவோடையே இன்னொன்று சுற்றுமே அது இந்த சம்பவங்களின் போது என்ன செய்தது? இதனை கண்டித்து ஒரு அறிக்கை விட்டது அவ்வளவுதான். அறிக்கைவிட்ட கையோடு CPMயோடு சேர்ந்து மன்மோகன் சிங் அணு ஆயுத ஒப்பந்தம் மூலம் நாட்டை கூட்டிக் கொடுப்பதற்க்கும் சிகப்பு கொடி…ஸாரி பச்சை கொடி காட்டிவிட்டது. இடது சாரி கூட்டணியாம்… 80 வருட பாரம்பரியம் அல்லவா?CPI காரர்களிடம் அந்த கட்சியின் அருகதையை சொல்லி பேசினால் பின்வருமாரு ஒரு ரெடிமேட் பதில் ஒன்றை சொல்வார்கள்: “தோழர் CPI ஒன்றும் நல்ல கட்சி என்று சொல்லமாட்டேன். ஆனால் இருப்பதிலே அது நல்ல கட்சி.” இதை சொல்லி முடித்த பிறகு முகத்தை அப்படியே பரிதாபகரமாக வைத்துக் கொண்டு நம்மைப் பார்ப்பார்கள். அதாவது இவர்கள் நல்லவர்களாம், அப்பாவிகளாம். சாதாரணமான நல்லவர்கள் அல்ல எல்லாருக்கும் நல்லவர்கள். CPM பாசிச்டுகளுக்கும் இவர்கள் நல்லவர்கள். அதனால்தான் இப்படி அப்பட்டமான தனது நடவடிக்கைகள் மூலம் CPM தன்னை பாசிஸ்டுகளாக வெளிக்காட்டிக் கொண்டாலும் இவர்கள் அதனை தைரியமாக கட்சி ரீதியாக அம்பலப்படுத்தி பேசத் துணிவதில்லை. தனிப்பட்ட முறையில் கிசு கிசு பேசுகிறார்கள்.CPI, CPMயிலுள்ள உண்மையான மக்களை நேசிக்கும் தோழர்கள் மட்டுமல்ல மனிதாபிமானமுள்ள அனைவருமே செயல்பட வேண்டிய தருணம் இது. இந்து மத வெறி பாசிசமும், மறுகாலனிய பாசிசமும் தனது முழு வேகத்தில் நாட்டை நாசமாக்கி வரும் பொழுது சமரசங்களும், புரட்சிக்கு குறுக்கு வழிகளும் இப்படி அதிகார வர்க்க சேவையில் வந்தே முடியும். கடைசியில் மக்கள் விரோதிகளாக மாறி வரலாற்றிலானால் படு கேவலமாக பழிக்கப்படும் நிலைக்கு ஆளாவோம்.CPI அணிகளே உங்களது உண்மையான கம்யுனிஸ உணர்வை வெளிகாட்டுங்கள். CPM ஒரு பாசிஸ்டு கட்சி அது கம்யுனிஸ்டு கட்சியல்ல என்று மக்களிடம் இன்று அம்பலப்படுத்த தவறினால், அது கம்யுனிஸத்துக்கு செய்யும் துரோகம், உங்களுக்கே நேர்மையில்லாத செயலாகும். CPIயின் கையாலாகத தலையாட்டி பொம்மை தலைமையை கேள்வி கேட்டு அந்த போலி ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுங்கள். ஜனநாயக சக்திகளே பாசிச சக்திகள் முற்று முதலாக அம்பலப்பட்டுள்ள சூழலை மக்களிடம் விமரிசையாக கொண்டு செல்லுங்கள்.வரலாறு நமக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்குவதில்லை…..

இதோ வரலாறு கரிசனத்துடன் நமக்கு அபரிமிதமாக அள்ளிக் கொடுத்துள்ளது…. வாருங்கள் பயன்படுத்திக் கொள்வோம். ஒவ்வொரு டீக்கடையையும், ஒவ்வொரு சந்திப்பையும், ஒவ்வொரு உரையாடலையும், ஒவ்வொரு சொல்லையும் ஆயுதமாக பயன்படுத்தி இந்த மக்கள் விரோத அமைப்புகளை தனிமைப்படுத்துவதுடன் இவற்றில் உள்ள நல்ல நண்பர்களையும் மீட்டெடுப்போம்.

தமிழில் பெயர் மாற்றம்: அவமானப்படுத்தும் அதிகாரிகள்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பி அரசு அலுவலகத்திற்குச் செல்லும் தமிழ் உணர்வாளர்களை அரசு அதிகாரிகள் அவமானப்படுத்தி அனுப்பும் கொடுமை தமிழ்நாட்டில் நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் கா. பாலமுருகன் அண்மையில் தனது பெயரை தூயத்தமிழில் தமிழ் வேங்கை என மாற்றி அமைத்துக் கொண்டார், அதோடு அவரது துணைவி மகேசுவரியும் தனது பெயரை மங்கையர்க்கரசி எனத் தமிழில் மாற்றி அமைத்துக் கொண்டார்.இந்த பெயர்களை அரசு பதிவேட்டில் பதிவு செய்யும் பொருட்டு கடந்த ஆகஸ்டு 16-ஆம் நாள் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு எழுது பொருள் அச்சுத்துறை அலுவலகம் சென்று பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பம் கேட்டுள்ளார், அங்கிருந்த ஒரு ஊழியர் எதற்காகப் பெயரை தமிழில் மாற்றுகிறீர்கள் என கேட்டுள்ளார்.தான் விழுப்புரம் மாவட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவராக இருப்பதையும் தனது தமிழுணர்வின் காரணமாக தனது பெயரை தமிழில் மாற்ற விரும்புவதையும் அவர் கூறியுள்ளார்.பின்னர் அந்த ஊழியர் ஒரு பதிவேட்டைக் காட்டி, இதில் உன்னைப் பற்றிய விவரங்களை எழுது, ஆனால் அதில் ஒரு எழுத்து கூட ஆங்கிலத்தில் எழுதாமல் எழுது பார்ப்போம் என கேலியாக கூறியுள்ளார்.தோழர் பாலமுருகன் பொறுமையாக தனது முகவரியை தமிழில் எழுதி கையொப்பமிட்டிருக்கிறார், பிறகு அவருக்கு பெயர் மாற்ற விண்ணப்பத்தை அந்த ஊழியர் அளித்தார்.தனது துணைவியின் பெயரையும் மாற்ற இருப்பதால் அதற்கு மற்றொரு விண்ணப்பத்தை தோழர் பாலமுருகன் கேட்டுள்ளார்.உடனே அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர், ஏங்க தமிழ் தமிழ்னு விசயம் தெரியாம பெயர் மாற்றிக் கொள்ள வேண்டியது. அப்புறம் இங்கே வந்து கத்த வேண்டியது. யார் சொன்னா உங்களுக்கு இந்த ஐடியா எல்லாம். முதல்ல நீங்க இனிமே எங்கியுமே இங்கிலீசில் கையெழுத்துப் போட முடியாது தெரியுமா?தமிழ் தமிழ்நாட்டுலதான் இருக்கு. உலகம் பூரா தமிழா இருக்கு? இங்கிலீஸ் தான இருக்குது? எப்படி வெளிநாடு போவீங்க உங்களுக்கு எப்படி பாஸ்போர்ட் கிடைக்கும், அங்க தமிழ்ல கையெழுத்துப் போட்டா செல்லாது. என்று பலவாறாக மிரட்டியுள்ளார்.அதற்கு பாலமுருகன், ஏன் இப்படி தமிழில் பெயர் மாற்றம் செய்ய வருபவர்களை பயமுறுத்துகிறீர்கள்? இதுதான் உங்கள் வேலையா? இதை குறித்து நான் முதல்வரிடம் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார்.அதற்கு அந்த பெண் ஊழியர், நீ மறுபடியும் இங்கு வந்துதான ஆகணும் என்று மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளும் ஊழியர் களுமே தமிழுக்கு எதிராக இருக்கும் நிலை இருப்பது மிகுந்த வேதனையானது, அதோடு பொய்த் தகவல்களை கூறி மிரட்டுவது சட்ட விரோதமான ஒரு செயலாகும்.சட்டப்படி கையெழுத்து என்பது ஒரு குறியீடே ஒழிய அது ஒரு குறிப்பிட்ட மொழியில்தான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்பது அந்த ஊழியர்களுக்கு தெரியாதா அல்லது தெரிந்தே மாற்றிச் சொல்கிறார்களா?.உலகெங்கிலும் உள்ள மக்கள் தத்தம் தாய் மொழியிலேயே கையெழுத்து இடுகின்றனர், உலகம் முழுவதும் சுற்றுகின்றனர், தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர் உள்ள தமிழர்கள் யாரும் இது வரை வெளிநாடு சென்றதேயில்லையா?அல்லது தமிழில் கையெழுத்திடு பவர்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கிடைப்பதேயில்லையா? அப்படி தமிழில் கையெழுத்து இருப்பதன் காரணமாக ஒருவருக்கு கடவுச்சீட்டு மறுக்கப்படுமானால் அது சட்ட விரோதமாகும்.உண்மை நிலை இப்படி இருக்க தமிழக அரசு ஊழியர்களே இவ்வாறு தவறாக தகவல்கள் சொல்லி தமிழில் பெயர் மாற்ற வருபவர்களை மிரட்டுவது மோசமான செயலாகும், தமிழக முதல்வர் இதில் உடனே தலையிட்டு இனி இவ்வாறு நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(நன்றி-தென் செய்தி)

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ

வெற்றிடம்

வெற்றிடத்தின் பெருமை
தெரியாமல் போய்விட்டது
இருப்பு வைப்பதிலேயே
கவனமாகி விட்டேன்

இருப்பால் நிறைந்து
வழிகிறபோது
புதிய இருப்புக்கு
ஏது இடம்?
புதியவை
புகாமல் போய்விட்டது

காலம்
இல்லாமல் இருப்பதில்தான்
எத்துணையோ இருக்கிறது

புல்லாங்குழல்
நிறைந்ததா?
நிறையாததா?
இரண்டும்தான் இதுவரை

வெறுமையில்
நிறைவாயிருக்கும் உண்மை
தெரியாமல் போய்விட்டதே.....

ஈழம் - தமிழகம் : தமிழக அரசியல் : கலைஞரின் ஈழ ஆதரவு



தமிழ்ச்செல்வனின் படுகொலை, தமிழகத்தில் அதனால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை எழுந்துள்ளதாக மிகைப்படுத்தும் ஈழ ஊடகங்கள், அப்படியான எந்த ஒரு உணர்வும் தமிழகத்தில் இல்லை என உண்மையை மூடி மறைக்கும் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் (மற்றும் அவற்றின் வலைப்பதிவு வால்கள்) என அந்தப் படுகொலையை விட அதனை விளம்பரப்படுத்தும் உத்தியும் - அதன் எதிர்நிலையும் காணப்பட்ட சூழ்நிலை மறைந்து மிக இயல்பான ஒரு சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கிற இந்த தருணத்திலே என்னுடைய இந்த இடுகை தாமதமாக எழுதப்படுகிறது.




ஜெயலலிதா குறித்து பெரிய விமர்சனத்தினை நாம் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஜெயலலிதா இவ்வாறு செய்யாமல் இருந்தால் தான் ஆச்சரியம். எந்தப் பிரச்சனையையும் அரசியலாக்கும் கோணத்திலேயே பார்க்கும் ஜெயலலிதா இந்தப் பிரச்சனையையும் அரசியலாக்க முனைந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பயமுறுத்தி பிறகு அடங்கிப் போய் விட்டார். இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் இவ்வாறு எழுதியது.Fearing isolation on the "Tamil issue" in a state dominated by ethnic politics, Jayalalitha quickly issued a statement claiming that Tamil blood ran in her veins too, even though she was born outside Tamil Nadu in Mysore. She has apparently given up the idea of going to the Supreme Court after seeing the general political mood in the state on the issue of Tamilselvan.கலைஞர் வழக்கம் போல ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்தார். முன்பெல்லாம், ஜெயலலிதா கலைஞரை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று தாக்கும் பொழுதெல்லாம் ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து இந்தியன் எக்ஸ்பிரசில் எப்பொழுதோ (1980களில் ?) வெளியிட்ட அறிக்கையை தான் சுட்டி காட்டுவார். எனவே விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தை ஆதரிப்பது தான் மட்டும் அல்ல. ஜெயலலிதா கூட "ஒரு காலத்தில்" ஆதரித்தார் என கலைஞர் சுட்டி காட்டுவார். ஆனால் இப்பொழுது வைகோ ஜெயலலிதா பக்கம் இருப்பதாலும், கலைஞருக்கும் வைகோவிற்கும் பகை இருப்பதாலும் விடுதலைப் புலிகளை ஜெயலலிதா அணியில் இருக்கும் வைகோ ஆதரிக்கிறாரே என கேள்வி கேட்டிருக்கிறார்.வழக்கம் போல தமிழக அரசியலில் இருக்கும் மிக மோசமான அரசியல் சூழ்நிலைக்கு இந்தப் பிரச்சனையும் இரையாகி இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு தமிழன் என்ற நிலையையும் கடந்து தன்னுள் இயல்பாக எழுந்த உணர்வின் காரணமாக இரங்கல் கவிதையை எழுதிய கலைஞர், அதனை வழக்கம் போல வெளிப்படையாக கூறிக்கொள்ள தயங்குகிறார். அவரின் இந்த தயக்கமும், அச்சமும் ஈழ விடுதலையின் எதிரிகளுக்கு பல நேரங்களில் வசதியாக இருந்து வந்துள்ளது.தமிழகத்தில் ஈழ விடுதலை குறித்து எந்தக் கருத்தும் இல்லை என்று கூற தொடங்கி விடுவார்கள்.ஆனால் இம்முறை கலைஞர் தெரிவித்த இரங்கல் இந்தப் பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் பல காலமாக அடங்கி இருந்த உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக மாறி எழத் தொடங்கியது.



இந்தப் பிரச்சனை குறித்து எழுதிய Economist தமிழகம் குறித்து இவ்வாறு எழுதியுள்ளது.One disturbing development is a revival of interest in Sri Lanka's Tamil issue in the Indian state of Tamil Nadu, just across the 30km-wide (19 -mile) Palk Strait. In the 1980s, its Tamils, now numbering some 60m, helped house, finance, train and arm Sri Lankan Tamil militants. The state's chief minister, M. Karunanidhi, opened a can of worms by penning a poem praising Tamilselvan and talking of the “Tamil brotherhood” binding Tamils across the globe. This revived memories of the late 1980s, when he was also chief minister and openly supported the Tigers.The main opposition party in Tamil Nadu, the All-India Anna Dravida Munnetra Kazhagam, condemned Mr Karunanidhi's condolence message, saying that he had broken the law by praising a member of a proscribed group. The Tigers were banned in India after the assassination of Rajiv Gandhi, a former prime minister, in 1991. Tamilselvan's death has revived the issue of Tamil ethnicity in Tamil Nadu, which could help whip up support for the Tigers there. This is worrying Sri Lanka. At least one newspaper has asked the government to take the matter up in Delhi.தமிழகத்தில் உள்ள நிலை குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரார் போன்ற பத்திரிக்கைகள் பல கட்டுரைகளை வெளியிட்டன.தமிழகம் என்றில்லாமல் தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தில்லியின் பல்கலைக்கழக வளாகத்திலும் இந்தப் பிரச்சனை எதிரொலித்தது.TN students at JNU term slain Tamil Tiger a martyrகலைஞர் தன்னுடைய விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டினை வெளிப்படையாக கூறாவிட்டாலும், தமிழகத்தின் பிற தலைவர்களான வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமா போன்றோர்களுக்கு கலைஞர் போல எந்த தயக்கமும் இல்லை. அவர்கள் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகளை தாங்கள் ஏன் ஆதரிக்கிறோம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.


கலைஞர், ஈழத்தமிழர்களை உணர்வால் ஆதரிக்ககூடியவர் என்றாலும் அவரின் நிலைப்பாடு ஒரளவிற்கு பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதாக தான் நான் நினைக்கிறேன். அது விடுதலைப் புலிகளை ஆதரித்தால் எழும் "ராஜீவ் படுகொலை பூதம்", இந்திய தேசியத்திற்கு எதிரான பிரிவினைவாதிகள் என்ற குற்றச்சாட்டு போன்றவையே. 1989ல் கலைஞரின் ஆட்சி திமுக விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கலைக்கப்பட்டது. 1998ல் மைய அரசின் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக ஜெயின் கமிஷன் பிரச்சனையில் (ராஜீவ் படுகொலை சார்ந்த விசாரணைக் கமிஷன்) ஆட்சியினை இழக்க நேரிட்டது. இந்த இரண்டு காரணங்களும் திமுக விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்க முடியாமைக்கு முக்கிய காரணமாக உள்ளது.இவை தவிர மைய அரசியலில் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா என இரு கட்சிகளுக்குள் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் இன்றைக்கு திமுகவிற்கு உள்ளது. கொள்கை ரீதியில் பாரதீய ஜனதா கட்சியுடன் ஒட்ட முடியாத ஒரு ஒவ்வாத நிலை கடந்த காலத்தில் திமுகவிற்கு இருந்தது. அந்த நிலையிலே தான் காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி தானாக முன் வந்து கடந்த பாரளுமன்ற தேர்தலில் திமுகவுடன் உடன்பாடு செய்ய முனைந்த பொழுது அந்த ஆதரவினை திமுக கெட்டியாக பிடித்துக் கொண்டது. காங்கிரசின் மிக முக்கியமான தோழமைக் கட்சியாக இன்று திமுக உள்ளது. எதிர்காலத்தில் பாரதீய ஜனதா போன்ற மத ரீதியான கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதை தவிர்ப்பதற்கு இது திமுகவிற்கு உதவும். அதுவும் தவிர பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்வதால் திமுகவிற்கு தமிழகத்தில் பெரிய பலம் இல்லை. மயிலாப்பூரில் வாக்குகளை பெறுவதே கடினம் என்னும் நிலையில் பாரதீய ஜனதா கூட்டணி மாநில அரசியலில் திமுகவிற்கு பெரிய பலம் கிடைத்து விடாது. மாறாக காங்கிரசுடன் கூட்டணி திமுகவிற்கு மாநில அரசியலிலும் பலத்தைச் சேர்க்கிறது. எனவே விடுதலைப் புலிகள் விடயத்தில் அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் நேருகிறது.


தமிழக அரசியல் நிலைப்பாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு ஈழ விடுதலை பின்னுக்கு தள்ளப்படும் சூழல் திமுகவிற்கு உள்ளது.திமுகவின் அரசியல் நிர்ப்பந்தம் இவ்வாறாக உள்ளது என்றால் ஜெயலலிதாவின் அரசியல் நிர்ப்பந்தமும் திமுகவை போல காங்கிரசைச் சார்ந்தே தான் அமைந்து உள்ளது. கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவை கைகழுவி விட்ட நிலையில் அடுத்து வரும் பாரளுமன்ற தேர்தல் அதிமுகவிற்கு முக்கியமான சவால். அதுவும் அந்த பாராளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சியாக எதிர்கொள்வது அதனை விட சவாலானது. சட்டமன்ற தேர்தலுக்குப் பின் நடந்த இடைத்தேர்தல்கள் விஜயகாந்த்தின் கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை, அதுவும் அதிமுக வாக்கு வங்கியில் இருந்து பிளந்து பெற்று வரும் நிலை அதிமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தமிழக வாக்கு அரசியலில் இருக்கும் சினிமா கவர்ச்சி கலாச்சாரம் அதிமுகவை சார்ந்தே இயங்கி வந்திருக்கிறது. அதிமுகவின் வாக்கு வங்கி சினிமா கவர்ச்சியை சார்ந்த வாக்கு வங்கி தான். திமுகவின் வாக்கு வங்கி என்பது அவ்வாறானது அல்ல. அதுபோலவே கடந்த காலங்களில் "கருணாநிதி எதிர்ப்பு" என்பது தமிழக அரசியலில் முக்கியமான ஒன்று. அதனைச் சார்ந்து தான் தமிழக அரசியல் இயங்கி வந்துள்ளது. சினிமாவும், கலைஞர் எதிர்ப்பும் அதிமுகவின் முக்கியமான பலமாக இருந்து வந்துள்ளது.விஜயகாந்தின் அரசியலை கவனிக்கும் பொழுது அவரும் இதே அரசியலை தான் பின்பற்றுகிறார் என்பதும், அவரது வளர்ச்சி அதிமுகவிற்கு வேட்டு வைக்க கூடியதாக உள்ளதையும் ஜெயலலிதா உணர்ந்திருக்கிறார். விஜயகாந்துடன் இருக்கும் பண்ருட்டியார் இவ்வாறான அரசியல் விளையாட்டுகளை கற்று தேர்ந்தவர் என்ற வகையிலே அதிமுக முன்வைக்க கூடிய அதே உத்திகளை முன்வைத்து வருகிறார்.



இவ்வாறான நிலையில் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க வேண்டுமெனில் காங்கிரசை தன்னுடைய கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் நேருகிறது. பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் ஓரளவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜெயலலிதா தான். 1998ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாரதீய ஜனதா கட்சியுடன் அமைத்த கூட்டணி மூலம் பாரதீய ஜனதா சார்ந்த அரசியலை தொடங்கி வைத்தார். அது போலவே பாரதீய ஜனதா சார்ந்த அரசியலை முடிவுக்கு கொண்டு வந்தவரும் ஜெயலலிதா தான்.




கடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாத நிலை இருந்தது. 1998ல் பாரதீய ஜனதா ஜெயலலிதாவின் equationக்குள் வர முக்கிய காரணம், அப்போதைய மைய அரசியல் சூழல் தான். தமிழகத்தைச் சார்ந்து இவை அமைந்ததில்லை. தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதே அதிமுகவிற்கு பலத்தை கொடுக்கும். ஜெயலலிதா அதற்கு தொடர்ந்து முயலுவார். அதனால் தான் சேது சமுத்திர திட்டத்தில் பாஜக தாமாக முன் வந்து "சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதையும் மறந்து" அதிமுகவிற்கு ஆதரவுக்கரம் நீட்டிய பொழுதும் ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை.காங்கிரசை தன் பக்கம் இழுக்க அதிமுக முனையும் பொழுது, காங்கிரசை தன் பக்கம் தக்க வைக்க திமுக நினைக்கும். எனவே விடுதலைப் புலிகள் விடயத்தில் திமுக எப்பொழுதுமே அடக்கியே வாசிக்க வேண்டிய அவசியம் உள்ளது. திமுக அந்த நிலையில் இருந்து மாற வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் நினைத்தால், அது நடக்கப்போவதில்லை.கலைஞரின் இந்த நிர்ப்பந்தம் வைகோவிற்கோ, ராமதாசிற்கோ, திருமாவிற்கோ இல்லை. காரணம் இவர்களுக்கு தேவை காங்கிரஸ் அல்ல. திமுக அல்லது அதிமுக. இவற்றில் ஏதேனும் ஒரு அணி இவர்களுக்கு போதுமானது. காங்கிரசை இழுக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கே உள்ளது. பாமக கூட கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியால் தீண்டத்தகாத கட்சியாகவே பார்க்கப்பட்டது. காரணம் பாமகவின் விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாடு தான். திமுக-காங்கிரஸ்-பாமக இவை மூன்றும் ஒரே அணியில் இருந்தும், புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவில் பாமக தேர்தலில் போட்டியிட்ட பொழுதும் கூட, எங்களுடைய கூட்டணி திமுகவுடன் தானே தவிர பாமகவுடன் அல்ல என்று காங்கிரஸ் கூறியதை இங்கே குறிப்பிடவேண்டும்.அவ்வாறான நிலையில் இருந்து காங்கிரசின் அரசியல் நிறைய மாற்றங்களை அடைந்துள்ள சூழலில் அதனை சிதைத்துக் கொள்ள திமுக தலைவர்கள் விரும்ப மாட்டார்கள்.கலைஞர் மீதான ஈழத்தமிழர்களின் வருத்தம் என்பது அவர் வெளிப்படையாக ஈழ விடுதலையையோ, விடுதலைப் புலிகளையோ ஆதரிப்பதில்லை என்பதாக உள்ளது. ஆனால் வைகோ இதனை "ஓங்கி" ஒலிப்பதால் ஈழத்தமிழர்கள் வைகோவை கலைஞரை விட நேசமாக பார்க்கிறார்கள். ஈழத்தமிழர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கலைஞரின் "தமிழ்" உணர்வுகள் என்பவை வேறானது. அரசியல் என்பது வேறானது. கலைஞரின் தமிழ் உணர்வுகளை யாரும் சந்தேகிக்க முடியாது.இன்றைக்கு தமிழகத்தில் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்த முடிகிறது. சுவரொட்டிகளை ஒட்ட முடிகிறது என்றால், அதற்கு காரணம் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் கலைஞரின் ஆட்சி என்பதை உணர வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியாக இருந்திருந்தால் இதே அளவிளான கருத்துச்சுதந்திரம், பேச்சுசுதந்திரம் இருந்திருக்க முடியாது. கலைஞர் இந்தப் பேச்சு சுதந்திரத்தை அனுமதித்து இருப்பதால் தான் சென்னையிலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்த முடிகிறது. அந்த வகையிலே சுப.வீரபாண்டியன் அவர்களின் கருத்துக்களைச் சார்ந்தே எனது கருத்துக்களும் உள்ளன.



தமிழகத்திலே மக்களின் மத்தியிலே ஈழப் போராட்டம் குறித்து தெளிவாக முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவ்வாறான சூழல் கடந்த காலங்களில் இல்லை. தற்பொழுது அதற்கான சூழல் அமைந்துள்ள நிலையில் அதனை தெளிவாக பயன்படுத்திக்கொள்வதில் தான் ஈழவிடுதலை ஆதரவினை தமிழக மக்கள் மத்தியில் எழுப்ப முடியும். தற்போதைய சூழலில் இதனையே நான் முக்கியமான நினைக்கிறேன். வைகோ போல விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரத்த குரல் எழுப்புவதால் இந்தப் பிரச்சனையில் பெரிதாக சாதித்து விட முடியாது.தமிழக மக்கள் மத்தியில் ஈழ போராட்டத்திற்கு எழும் ஆதரவு தான் தில்லியில் இருக்கும் "சில வெளியூறவு/பாதுகாப்பு அதிகாரிகளை" அச்சப்படுத்தும். இந்தியாவின் வெளியூறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை வகுக்கும் இந்த அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பது தான் இந்திய ஜனநாயக சூழலின் யதார்த்தமான உண்மை.யார் அந்த அதிகாரிகள் ?நான் குறிப்பிடும் அதிகாரி எம்.கே.நாராயணன் - பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் - National Security Advisor (NSA) to the Prime Minister of India.
Narayanan is an expert in security matters and a specialist on Sri Lankan affairs என விக்கிபீடியா குறிப்பிடுகிறது. அவ்வாறான ஒரு பிம்பம் தான் இந்தியாவின் மைய அரசின் வட்டாரத்தில் நிலவுகிறது. எம்.கே.நாராயணனும் சரி, இதற்கு முன்பு ஆலோசகராக இருந்தவரான ஜெ.என்.தீக்க்ஷ்த்தும் சரி விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்ப்பாளர்கள். எம்.கே.நாராயணன் Intelligence Bureau (IB) தலைவராக இருந்தவர். இலங்கை விவகாரத்தில் ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகர்களாக இருந்தவர்களில் எம்.கே.நாரயணனுன் ஒருவர்.ஆண்டன் பாலசிங்கம் எழுதிய "War and Peace Efforts of LTTE" என்ற புத்தகத்தில் எம்.கே.நாராயணன் குறித்தும், அவருடன் தானும், பிரபாகரனும் நடத்திய ஆலோசனைகள் குறித்தும் பாலசிங்கம் குறிப்பிடுகிறார். எம்.கே.நாரயணன், பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம் இடையேயான முதல் சந்திப்பு வட இந்தியாவில் உள்ள காசி நகரில் முதன் முதலாக நடைபெறுகிறது. ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற நேரம் அது. இந்திரா காந்தி சிங்கள அரசுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடுகளுக்கு மாறாக சிங்கள அரசுடன் இணக்கமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த ராஜீவின் ஆலோசகர்கள் ராஜீவ் காந்திக்கு அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி புலிகளை சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசின் உளவு நிறுவனமான ரா நெருக்குதல் செய்து கொண்டிருந்தது. இவ்வாறான சூழலில் தான் எம்.கே.நாராயணன் பிரபாகரனையும், ஆண்டன் பாலசிங்கத்தையும் சந்திக்கிறார். இதில் தொடங்கி 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழ்நிலை வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளில் எம்.கே.நாராயணனும் ஒருவர்.இவ்வாறு இலங்கை விவகாரத்தில் பணியாற்றிய எம்.கே.நாராயணன் இன்றைக்கு இந்திய பிரதமருக்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் சூழலில், மைய அரசு பெரும்பாலும் "பாதுகாப்பு" என்ற காரணம் காட்டி தமிழக அரசியல்வாதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலில் இந்தியா இந்தப் பிரச்சனையில் தமிழர்களுக்கு இணக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. கலைஞரால் இந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகள் மட்டுமே சிங்கள அரசை மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரும். இந்தியாவும் புலிகளுடன் பேசுமாறு சிங்கள அரசை தூண்டும். புலிகள் பலவீனப்பட்டிருப்பதாக ஒரு பிம்பம் தற்பொழுது உருவாகியுள்ள சூழலில் புலிகளை தோற்கடிக்கவே இந்தியாவும் விரும்பும். 20 வருடங்களாக இந்தியாவின் நிறைவேறாத ஆசை அது.புலிகள் போர் வெற்றிகளை பெற முடியுமா ? புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள் என்ற சிங்கள அரசின் பிராச்சாரத்தை முறியடிக்க முடியுமா ? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.அதுவரை, ஈழப் போராட்டம் பற்றிய உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பாக தற்போதைய கலைஞரின் ஆட்சியை கருத வேண்டும். இந்த வாய்ப்பை "தீவிரவாதம்" பேசி, கலைஞர் ஆட்சிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி சிதைத்து விடக்கூடாது.

-நன்றி தமிழ் மதி

இந்த கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை எழுதவும்
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - மகாகவியின் கூற்று; அதுவே எமதும்.

Friday, November 23, 2007

பேராசிரியர் தமிழருவி த.சிவகுமாரன்



சிங்கப்பூரில் பேராசிரியர் தமிழருவி த.சிவகுமாரன் -சிலோன் ரோடு செண்பகவினாயகர் ஆலயம். கந்தபுராண சொற்பொழிவு.


தமிழருவி அவர்களை, என் திருமணத்திற்கு தமிழகத்துக்கு அவர் வந்திருந்த போது சந்தித்த பிறகு, தற்போது நான்காவது முறையாக சந்திக்கிறேன்.

எங்கள் இல்லத்துக்கு அழைத்துவந்து உபசரிக்க அளவளாவ முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. இரண்டுநாள் அவருடைய கந்தபுராண உரையை செண்பக விநாயகர் ஆலயத்திலும் ஒருநாள் "சக்தியின் மகத்துவம்" உரையை ருத்ரகாளியம்மன் கோவிலிலும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. மெய் மறக்கும் பேச்சு. கணக்கிலடங்கா செய்திகள். கேள்விபடாதவை நிரம்ப. அத்தனையும் முத்துக்கள்.








சிங்கப்பூர், மலேசியாவிற்கு தமிழருவி ஆன்மீகப் பயணம்
[09 - November - 2007] [Font Size -
A - A - A]
வவுனியா தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் வவுனியா தமிழ்த் தேசிய கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியரும் சொற்பொழிவாளருமான தமிழருவி த.சிவகுமாரன் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள ஆலயங்கள், இலக்கிய மன்றங்களின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர், காத்தோங் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஷ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறவுள்ள கந்த சஷ்டி விரத விழாவில் "கந்தபுராணச் சிந்தனைகள்" என்னும் பொருளில் ஆறு தினங்கள் தொடர் தெய்வீகப் பேருரைகளையும், சிங்கப்பூர் ஸ்ரீ ருத்திரகாளியம்மன், அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயங்களிலும் ஆன்மீக விரிவுரைகளை ஆற்றவுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சிங்கப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்.
மேலும் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலுள்ள திருமுறைப் பெருமன்றத்தின் `திருமுறை விழா' விலும் பத்துகேவ் திவ்விய ஜீவன சத் சங்கத்தின் ஆன்மீக விழாவிலும் `திருமுறைகளின் வாழ்வியல் பயன்பாடு' என்னும் பொருளில் விரிவுரைகளை ஆற்றுவதோடு செரம்பான் நகரிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் `விநாயகரகவல்' எனும் பொருளிலும் சிறப்புரையாற்றுவார்.

உஷ்!

குறட்டை

நண்பனுடன் ஓர் இட உறக்கம்
எனக்கோ சற்றே சுனக்கம்
நண்பனோ கும்ப கர்ணம்
எனக்கோ தூக்கம் வரனும்
அவனுக்கு அயர்வு

எனக்கு உயர்வு -உசுப்பாதவரை

Proud Of The World!

ASIAJOTHI SWAMI VIVEKANANDHA

வணக்கம்!

Dear All,

Vanakkam to everyone, Nice to meet you through my blog. I hope we can share or record more information and all, regarding current affairs and crisis among the world in all kind of topics.

Thanks and Regards,
Jothibharathi.

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை