Monday, May 31, 2010

நானும் கவியும் - புனைவல்ல உண்மை


இரண்டகம்

அழுகியோ

கனிந்தோ

அணில் குடைந்தோ

பிஞ்சிலே பழுத்தோ

நல்ல விலை கிடைத்தாலோ

பொத்தென்று விழும்

காம்பழுகிய பழம்



அழகிய நகை

நரி மிரட்டலைத் தாண்டி

நடுநடுவே தொங்காமல் மிளிரும்

குறு நகை



இருட்டடிப்பு

பார்வை ஈர்க்கவில்லை

பழுதுமில்லை

ஒலியில் மட்டும்

ஒளியைச் சுமந்து

முகவரியைத் தேடும்

கருங்குயில்



மூளைச்சலவை

சரியான சாவியிட்டால்

கள்வனுக்கும் கட்டுப்படும்

கதவு



சமூக நீதி

வரிசையாக

நிற்க வைக்கப்பட்ட

சாதித் தலைகளில்

எதிலும் கொம்பில்லாததால்

எல்லாம்

ஒன்றெனப்பட்டது





Thursday, May 20, 2010

நாம் தமிழர் - சீமான் பெரிய இவரா?



2005-ம் ஆண்டில் அருமை அண்ணன் கவிமாலை கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் மூன்று கவிதைத் தொகுப்புகள் சிங்கப்பூரில் வெளியீடு கண்டன. அந்த நிழ்ச்சிக்கான அழைப்பிதழை என்னிடம் கொடுக்கும் போது நான் கேட்ட கேள்வி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. என்னண்ணே திரைப்பட இயக்குநரைப் போய் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு அழைத்திருக்கிறீர்கள். உகந்தவராக இருப்பாரா? என்று கேட்டதற்கு, அவர், சீமான் கவிதை ஆர்வலர், தமிழின உணர்வாளர், சிறப்பாக பேசக்கூடியவர் என்றெல்லாம் சொன்னார். நான் அப்போது அறை மனதுடன் தலையாட்டி வைத்துவிட்டு ஒரு வினாவோடு விடைபெற்று வீட்டுக்குச் சென்றேன்.

விழா நாளன்று குடும்பத்துடன் விழாவிற்கு சென்றோம். அப்போது வெகு சிலரே அரங்கத்தில் இருந்தனர். அண்ணன் இளங்கோ அவர்களிடம் ”சீமான் வந்துவிட்டாரா” என்று கேட்டேன். ஆம். வந்துவிட்டார். இதோ அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்கள் சம்பிரதாயம் எல்லாம் பார்க்கக் கூடியவர் இல்லை. அவரே வந்திடுவார் என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சி பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சிறிது நேரத்தில் சீமானை அழைத்து வந்ததனர். ஒர் இளைஞராக இருக்கிறாரே, ஒரு பண்பட்ட கவிஞரின் மூன்று கவிதைத் தொகுப்புகளாக அமைந்துள்ள நூல்களை வெளியிட இவரைப் போய் அழைத்திருக்கிறார்களே? இன்னும் என் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை.

விழாவின் நிறைவில் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய திரு.சீமான், தனக்கிட்ட பணிக்கு உகந்தவராக உறுதிப்படுத்திய பின்னரே உரையை நிறைவு செய்தார். எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை தவிடு பொடியாக்கி விட்டே அமர்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அரங்கு நிறைந்த, நிரம்பி வழிந்த நிலையில் வியக்கும் வண்ணம் அவரது உரை சிறப்பாக அமைந்தது. நாட்டுப்புற பாடல்களை நயமாக பாடும் தன்மை, கிராமங்களில் கொட்டிக்கிடக்கும் கவிதைத் துளிகளை எடுத்துக் காட்டிய பாங்கு, தமிழர் அடையாளம், தனித்தமிழ் முயற்சி என்று முற்றிலும் வேறுபட்ட அழகான உணர்வுமிக்க உரையாக அமைந்தது. அவரது உரையில் எனக்கு உடன்பாடில்லாத சிலவும் உண்டு. பதர் விசமல்ல அதை தள்ளி வைத்து விடலாம் என்கிற அரிய நோக்கில் நெல் மணிகளை மட்டும் அறுவடை செய்வது எனது அணுகுமுறை. அந்த வகையில் திரு.சீமான் அவர்களை உற்று நோக்கத் தொடங்கினேன். இன்று வரை பல்வேறு படிப்பினைகளை பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் பெற்றிருப்பார் என்று ஆணித்தரமாக நம்புகிறேன். பட்டால் தான் புத்தி வரும் என்னும் சொல்லாடலுக்கு மாற்று என்கிற பகுத்தறிவு நிலையை உணர்ந்தவருக்குக்குக் கூட இந்த நிலையா என்பதை அறியும் போது கொஞ்சம் முரண்பாடாகத் தெரியலாம். இருப்பினும் நம்ப வைத்து கழுத்தறுக்கும் புதிய(நவீன) பாணியில் தலைவர்கள் தங்களது செயல்களினூடாக செதுக்கிய ஒருவர்தான் திரு.சீமான் என்றால் அது மிகையாகாது.

இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து பல்வேறு இடங்களில் உரையாற்றி, தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களில் வாழும் தமிழர்களுக்கு உண்மை நிலையை, ஈழத்தில் நடந்த கோரத்தை யாருக்கும் சோரம் போகாமல், புரியும் வண்ணம் எடுத்து சொன்ன வகையில் திரு.சீமான் தனித்து நிற்கிறார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு உண்மை, அவர் தனித்து விடப்பட்டிருக்கிறார் என்பதும். இப்படிப்பட்ட இளைஞனை இராசேந்திர சோழனுக்கு பிறகு வந்த ஒரே தமிழ் வீரன், தமிழ் தேசிய தலைவர் அவர்கள் அழைத்து, பார்த்துப் பேசியிருக்கிறார். உண்மையான உணர்வார்களை உண்மையான போராளி இனங்கண்டு கொள்வதில் ஒன்றும் ஐயமில்லை.

ஈழப்போர் தோல்வியில் முடிந்தது மட்டும் நமது பின்னடைவல்ல. அதை விட கொடுமையானது பண, அதிகார முதலைகளிடம், ஆட்சியாளர்களிடம் காட்டிக்கொடுப்பது, அயலாரிடம் விலை போவது இதை நன்கு உணர்ந்திருப்பார் சீமான் என்று மட்டும் நம்புகிறேன். பண்டைய ஒட்டுமொத்த இந்தியா-இலங்கை நாடுகளை ஆண்ட நம் பாட்டன் இராசேந்திர சோழன் செய்த தவறுக்கு நாம் இப்போது பிரயசித்தம் தேடிக்கொண்டிருக்கிறோம். அவன் அன்று தமிழை ஆட்சிமொழியாக்கி இருந்தால் இன்று நாம் சிங்களனிடமோ, இத்தாலியைச் சேர்ந்த அண்டோனியா மொய்னாவிடமோ அஞ்சிக் கொண்டு கெஞ்ச வேண்டியதில்லை. அன்று கங்கை வெள்ளப்பெருக்கின் போது யானைகளை குறுக்கே நிறுத்தி அதில் படை நடத்தி வெற்றி கொண்ட கங்கை கொண்ட சோழன் இராசேந்திரன், கங்கையையும் காவிரியையும் இணைத்திருந்தால் இன்று நாம் கன்னடரிடம் தண்ணீருக்குப் போராட வேண்டியதில்லை. அன்று தனித்தமிழை ஊக்குவித்திருந்தால், இன்றும் நாம் வடமொழி கலப்பின்றி தமிழ் பேசுவோம். இவ்வளவு பெரிய தமிழ் மாமன்னன் செய்யத்தவறியதை சொல்லிச் சொல்லி நாம் வருந்துவதை விட, நாம் தமிழர், நாம் இனி என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கிற நிலையில் இருக்கிறோம். அந்தவகையில் திராவிட என்கிற சொல்லாடலுடன் கட்சி நடத்தும் இன்றைய திராவிட கட்சிகள் கேரளத்தையும்,கர்னாடகத்தையும்,ஆந்திரத்தையும் எதிர்த்து அரசியல் நடத்தும் போது மிகவும் வேடிக்கையாக இருக்கும். திராவிட மொழிகளில் இவர்களின் மொழிகளும் அடக்கம் என்பதை அறியாதவர்களா நம் திராவிட கட்சியினர். திராவிட இனங்கள் யாவை? திராவிட நிலப்பகுதிகள் எவை எவை? திராவிட மொழிகள் எவை? திராவிடர்கள் எல்லோரும் இன்றைய கால கட்டத்தில் ஒரே குடையின் கீழ் வருகிறார்களா? தமிழர்கள் யார்? என்று பல்வேறு கேள்விகளை நாம் சுமக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தேசிய பிரச்சனைகளில் ஓட்டு நிறைந்திருக்கும் மாநிலத்துக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் கட்சியான, காந்தியாரால் விடுதலைக்குப் பின்னர் கலைக்கப் பரிந்துரைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி ஒரு புறம். அதையும் தாண்டி மதத்தின் பெயரால்,சாதியின் பெயரால் தமிழர்களை கூறுபோட்டு விற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் இருக்க, இன்றைய பிரியானியிச கொள்கையுடனும்,காந்தி நோட்டில் நோட்டம் பார்க்கும் தற்கால சனநாயகத்தில், திரு சீமான், தனது நாம் தமிழர் கட்சியினூடாக தமிழர்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதே ஒவ்வொரு தமிழரின் எதிர்பார்ப்பும்.






Wednesday, May 19, 2010

நாம் தமிழர் - பிரமாண்ட மாநாடு - மதுரையில் எழுச்சி





நாம் தமிழர் மாநாடு : ராமசாமி பேச்சு


நாம் தமிழர் அரசியல் கட்சி மாநாடு மதுரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இம்மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் பேசும் போது, ‘’இந்த மாநாடு ஒரு மிக முக்கியமான மாநாடு. நான் இந்த மாநாட்டில் துணை முதல்வராக கலந்துகொள்ளவில்லை. ஒரு தமிழனாக கலந்துகொண்டிருக்கிறேன்.

தம்பி சீமானைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நேரிலும் பேசியிருக்கிறேன். அவர் தன்மானமுள்ள தமிழன்.

தமிழனின் தலையெழுத்தை மாற்றவேண்டும் என்றால் புதிய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். அந்த மறுமலர்ச்சியை நாம் தமிழர் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தம்பி சீமானிடம் நல்ல திறமை இருக்கிறது; அவர் இந்த கட்சியை திறமையுடன் நடத்திச்செல்வார்.

நான் அரசாங்கங்களைப்பற்றி நிறைய பேசிவிட்டேன். அதனால் அரசுகளைப்பற்றி பேசப்போவதில்லை. தமிழர்களைப்பற்றித்தான் பேசப்போகிறேன்.

உலகமெங்கும் தமிழர்கள் இருந்தாலும் தமிழகத்தில்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். உங்கள் எழுச்சிதான் ஈழத்தமிழர்களுக்குக் தேவை. நமது அடையாளம் என்று நினைத்துக்கொண்டிருக்காதீர்கள். நமது அடையாளம் தமிழ்; அதை மறந்துவிடாதீர்கள்’’என்று தெரிவித்தார்.

பணம்,உணவுப்பொட்டலங்கள் கொடுத்து கூட்டிய கூட்டமல்ல:

நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் சாகுல் அமீது பேச்சு

நாம் தமிழர் இயக்கம் இன்று முதல் அரசியல் இயக்கமாக மாறுகிறது. இதற்கான அறிவிப்பு மாநாடு மதுரையில் இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கியது.

மதுரையில் வீரகனூர் சுற்றுச்சாலை அருகே முத்துக்குமார் அரங்கத்தில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

மாநாடு துவங்குவதற்கு முன்னதாக பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் சீமான், காந்திய அரசியல் இயக்கத்தை சேர்ந்த தமிழருவி மணியன், மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது உட்பட ஏராளமான தமிழ் பிரமுகர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

மாநாட்டில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது பேசும் போது, ‘’இன்றைக்கு இருக்கக்கூடிய எழுச்சி ஓராண்டுக்கு முன்பு இருந்திருக்குமேயானால் இத்தனை இழப்பு நமக்கு ஏற்பட்டிருக்காது.

சீமான் மீது மிகப்பெரிய பொறுப்பை ஏற்றி வைத்திருக்கிறோம். அவர் அந்த பொறுப்பை ஏற்று வலிமையுடன் செயல்பட்டு வருகிறார்.

ஊர் ஊராக சென்று கலந்துரையாடல் நடத்தி இந்த அரசியல் மாநாட்டிற்கு முடிவு செய்துள்ளார். இங்கே கூடியிருக்கும் பெருங்கூட்டம் பணம் கொடுத்து, உணவுப்பொட்டலங்கள் கொடுத்து கூட்டி வந்த கூட்டம் அல்ல.உணர்ச்சி பெருக்குடன் இங்கு கூடியிருக்கிறார்கள்.

மற்ற இயக்கங்கள் எல்லா இந்த மே- 18ம் தேதியை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்று துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் தமிழர் அரசியல் கட்சியோ இந்த நாளில் எழுச்சித்தமிழர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

இது மாற்று அரசியல் கட்சி’’என்று தெரிவித்தார்.


நாம் தமிழர் அரசியல் மாநாடு : முக்கியத்தீர்மானம் மற்றும் 27 கொள்கைகள்

இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சித் துவக்கவிழா இன்று இரவு மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பெரும் அளவில் ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் குவிந்துவிட்டனர். ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வந்திருந்ததாக மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மாநாடு ஆரம்பிக்கும் முன் விரகனூர் சுற்றுவட்ட சாலை அருகே, தியாகி முத்துக்குமார் நினைவு நுழைவாயிலிலிருந்து பேரணி துவங்கப்பட்டது. மாலை 5 மணிக்குத் துவங்கிய இப்பேரணி, 7.30 மணிக்குப் பிறகும் தொடர்ந்தது.

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழீழத் தனியரசு அமைப்பதே என்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த மாநாடு துவங்கும் போது, போர்க் குற்றம் புரிந்த இலங்கை அரசு மற்றும் ராஜபக்சேக்கு சர்வதேச நெருக்கடி ஆய்வுக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, போர்க்குற்றவாளி ராஜபக்சே, அவருக்கு துணை நின்ற சர்வதேச சக்திகளுக்கு தண்டனை நிறைவேற்றுவதைச் சித்தரிக்கும் வகையில் நாம் தமிழர் அமைப்பினர் நாடகம் நடத்தினர்.

கடந்த மே 17 மற்றும் 18-ம் தேதிகளில் வன்னியில் நடந்த இறுதிப் போரில் பல்லாயிரம் தமிழர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அந்த நேரத்தில் இயக்குநர் சீமானால் துவக்கப்பட்டதுதான் நாம் தமிழர் இயக்கம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் முடிந்து ஒரு ஆண்டு நிறைவுறும் இந்த தருணத்தில் நாம் தமிழர் இயக்கத்தை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றுவதாக அறிவித்தார் சீமான்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் மே 18-ம் தேதியை தமிழரின் துக்க நாளாகக் கொண்டாடும் நிலையில், சீமான் இந்த நாளை தமிழரின் எழுச்சி நாளாகக் கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்தார். இந்த நாளிலேயே நாம் தமிழர் இயக்கத்தையும் முழுமையான அரசியல் கட்சியாக அறிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் துணைக் கொள்கைகளை நிர்வாகிகள் படித்தனர்.

தமிழர் இறையாண்மை மீட்பே நமது வாழ்வின் லட்சியம், ஈழப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி தமிழீழம்தான், தமிழை எங்கும் வாழ வைப்போம், உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் பாடுபடுவோம், மகளிருக்கு சம உரிமை, ஊடகம் மூலம் பரவும் பண்பாட்டுச் சீரழிவுகளைத் தடுப்போம், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட 26 முதன்மைக் கொள்கைகள் மற்றும் துணைக் கொள்கைகளை அறிவித்தனர்.

என்னை தலைவராக பார்க்காதீர்கள் : சீமான் பேச்சு

இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சித் துவக்கவிழா மதுரையில் நடந்தது. பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக உதயமானது.

செவ்வாய்க்கிழமை மாலை, மதுரை ரிங் ரோடு அருகே உள்ள மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் நாம் தமிழர் கட்சி, பாயும் புலி கொடியோடு உதயமானது.

மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மற்றும் காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தனர்.

7 மணிக்கு துவங்கிய மாநாடு,

இம்மாநாட்டில் சீமான் எழுச்சி முழக்கமிட்டார்.

அவர், ‘’கட்சிக்கு நிதிக்கு என்ன செய்யப்போகிறீர்கள் எனு கேட்கிறார்கள். பணத்தை நம்பி நான் இந்த கட்சி ஆரம்பிக்கவில்லை.

இனத்தை நம்பி ஆரம்பித்திருக்கிறேன்.இனம் சேர்ந்தா பணம் தானா வரும்.

திரைப்படங்கள் இயக்கி என்னால் சம்பாதிக்க முடியும். வருமானம் எனக்கு தேவையில்லை; இனமானம்தான் முக்கியம்.

என்னை தலைவராக பார்க்காதீர்கள். அண்ணன் பிரபாகரனுக்கு நான் தம்பி. இங்கே கூடியிருக்கும் அன்பு தம்பிகளுக்கு நான் அண்ணன்.

அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் மூக்கை பிடித்துக்கொண்டு போனால் யார்தான் உள்ளே இறங்கி சுத்தம் செய்வது.

ஒரு விசயத்தை செயல்படுத்த அரசியல் தேவைப்படுகிறது. அப்போதுதான் புரட்சி செய்ய முடிகிறது.

நன்றி: நக்கீரன்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=32378

Tuesday, May 18, 2010

நாம் தமிழர் - நமது எழுச்சி


Saturday, May 15, 2010

புரட்சி நடிகையான குஷ்பு! -ஆட்சியைப் பிடிப்பாரா?




திலகவதி அம்மா இந்தப்பக்கம் திர்ம்பி நம்பள பாத்தா கொஞ்சம் எளக்கியம் கத்துக்கலாம். கலிஞர்ட்ட அரிசியல் பண்ணனுனா அது தேவப்படுமே!



இந்தப்படத்த சேஃபா வச்சிக்குவேன் பின்னால நான் மொதல்வரா வரத்துக்கு ஒதவும். இதை பிலக்ஸ் போடுலையும், கட்டவ்ட்லயும் போட்டு ஓட்டு வாங்கிர்லாம்!









தலைவரே, பூம்புகார் படத்த நீங்க எகைன் எடுத்தீங்கன்னா அதுல நான் தான் ஆக்ட் பண்ணுவேன். கண்ணகி ரோலுக்கு சரியா இருப்பேனா? நீங்க தான் சொல்லனும். எம்.ஜி.ஆருக்கு கொடுத்தமாரி எனக்கும் புரட்சி நடிகை என்ற பட்டம் கொடுத்தா புண்ணியமாப்போவும்.





தளபதி நீங்களும் ஆக்ட் பண்ணலாமே! தலயிலேர்ந்து இளைய தளபதி வரிக்கும் ஆக்ட் பண்றப்ப நீங் பண்ணக்கூடாதா?





செம்மொழி மானாடு மயிலாடு வர்றத்துனால தான் திருமா செகப்பு சர்ட் போட்டிருக்காரு. இந்த புக்க நீங்களே வச்சுக்குங்க கொஞ்சம் தமிள் கத்துகிட்டு அப்பரம் வாங்கிக்கிறேன்.





கற்பு என்றால் நினைவுக்கு வருவது குஷ்பு! திருமணத்திற்கு முன்பு பாதுகாப்பான உறவு கொள்வதில் தவறேதும் இல்லை என்னும் ஆலோசனையை இளைய தலைமுறையினருக்கு வழங்கியவர்.


இதனை, இந்த வேதவாக்கை ஆலோசனையாக வழங்கியதைக் காரணம் காட்டி விசமிகளால் தன் மீது நீதிமன்றதில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து அண்மையில் விடுதலை பெற்று சமூக நீதி காத்த வீராங்கனையாக, பெரியாரியம் கற்க திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களைச் சந்தித்து நேற்று(14.05.10) தன்னை தி.மு.கழகத்தில் இணைத்துக்கொண்டார்.




பின் குறிப்பு:

குஷ்பு திராவிட இனத்தைச் சேர்ந்தவர். நமீதாவும் தான்!

மாராத்தியர்களும், கூர்ச்சரதினரும் இனத்தால் திராவிடர்களே!

மொழியால் அவர்கள் ஆரியராக இருக்கக் காரணம், அவர்களுடைய மொழியை சமஸ்கிருதம் முக்கால்வாசி விழுங்கியதால் தான்!

:)

Friday, May 14, 2010

எம்.ஜி.ஆர் - சேரனுக்கு உறவா?



”எம்.ஜி.ஆர் - நடிகர் முதல்வரானது எப்படி?” அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த, எம்.ஜி.ஆர் பற்றிய அருமையான தகவல்கள் அடங்கிய நூல் என்று சொல்லலாம். இந்த நூலை வாசித்து நிறைவு செய்கையில் நூலாசிரியரின் உழைப்பு, எம்.ஜி.ஆர் பற்றிய தேடல் அப்பட்டமாகத் தெரிகிறது. நடிகராக இருந்து, பின் அரசியலுக்கு வருவது, தமிழக முதல்வர் ஆவது மிகவும் எளிது என்று நினைக்கும் திரு.விஜயகாந்த்,சரத்குமார்,கார்த்திக் போன்றவர்கள் இந்த நூலைப் படித்திருப்பார்களேயானால் கண்டிப்பாக அவர்களுக்கு முதல்வர் பதவியின் மீது ஆசை வந்திருக்காது, தங்களை சுய விமர்சனம் செய்துகொண்டு ஆயத்தப் படுத்திக்கொண்டு வந்திருப்பார்கள் ஜெயலலிதா முதல்வராக வந்தது, எம்.ஜி.ஆர் கட்டி வைத்த அதிமுக கட்சி அமைப்பு எனும் கோட்டை வழியாக. அதில் அரசியாக வந்து அமர்ந்து கொண்டார் என்று சொல்லலாம். அதுவே அவரை முதல்வர் பதவிக்கு அழைத்துச் சென்றது.

எம்.ஜி.ஆர் அவர்கள் தன் வரலாறு கூறும் பொருட்டு 1970-72 -ல் தன்னைப் பற்றி எழுதினார். அது எந்தளவுக்கு அவரது வாழ்க்கை வரலாற்றை பேசும் என்பதைவிட அதற்கு பின்பே அவர் தனது வாழ்வில் மிகப்பெரிய திருப்பங்களை எதிர்கொண்டார். உலகிலேயே முதன்முதலில் நடிகர் அரசியலில் பங்கெடுத்து அரசு பதவி வகித்தது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1966-ல் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ரொனால்ட் ரீகன் அவர்கள் மட்டும் தான். அவருக்குப் பின் இந்தியாவில், தமிழ் நாட்டில் 1977-ல் முதல்வராக திரு.எம்.ஜி.ஆர். இவர்கள் இருவருக்கும் இன்னொரு ஒற்றுமை இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள். ரீகன் ஒரு பட்டதாரி, எம்.ஜி.ஆரோ மூன்றாம் வகுப்பு வரை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணா 1949 -ல் திராவிட முன்னேற்றக் கழகம் கண்டு, 1969-ல் தமிழக முதல்வரானார், அதற்கு 18 ஆண்டுகள் ஆனது. ஆனால் 1972-ல் கட்சி தொடங்கி(அதிமுக பின்னர் அஇஅதிமுக என்று மாற்றிக்கொண்டார்) ஐந்தே ஆண்டுகளில் தமிழக முதவரானார் என்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்று என்றால் அது மிகையாகாது.

இந்த நூலில், நூலாசிரியர் எம்.ஜி.ஆர் மலையாளி என்று நிரூபிக்க பல்வேறு ஆதாரங்களைத் திரட்டித் தருகிறார். அதைவிடவும் ஒரு தமிழரல்லாதவர் தமிழகத்தின் முதல்வராக கட்சி தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் வரமுடிந்ததை வியப்புடன் பகிர்கிறார். அதுமட்டுமல்ல அவர் தமிழ் நாட்டில் பிறந்தவருமல்லர். கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், இலங்கை கண்டியில் பிறந்து, தமிழகத்தில் கும்பகோணத்தில் குழந்தைப் பருவத்தை கொஞ்ச காலம் கழித்து, பின் வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்புடன் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பிதார். பின் திரைப்பட நடிகராக இருந்து எப்படி முதல்வராக முடிந்தது என்பதை நேர்மறை, எதிர்மறை விமர்சனத்துடன் இந்நூல் சிறப்பாக அலசுகிறது.
தற்போதைய கேரள மாநிலத்தில் ஒட்டப்பாலம் அருகில் உள்ள நல்லேப்பள்ளி என்னும் ஊரைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலமேனன். கேரளத்தில் பாலக்காட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடவனூர்(இங்குதான் மருதூர் உள்ளது) தாய் சத்தியபாமாவின் ஊர். கோபாலமேனனின் தாயார் பெயர் மேனக்கத் லெட்சுமி. மேனக்கத் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்பதைத் தான் எம்.ஜி.ஆர் என்று வைத்துக்கொண்டதாக பதிவு செய்கிறார். மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்று பலரும் குறிப்பிடுவதையும் இங்கு நாம் பதிவு செய்வது அவசியமாகிறது. எம்.ஜி.ஆரின் தாய் தந்தையர்கள் மலையாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களின் முன்னோர்கள் கொங்கு நாட்டைச் சேர்ந்த வேளாளர்கள் என்று புலவர் செ.இராசு அவர்கள் எழுதிய செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு எனும் நூலில் நிரூபிக்க முயன்றிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப்பழகிய வித்வான் வே.லட்சுமணன் எம்.ஜி.ஆர் பற்றி எழுதும்போது எம்.ஜி.ஆருடைய தந்தை கோபாலமேனன் அரூர்,திருச்சூர்,கரூர்,எர்ணாகுளம் முதலான இடங்களில் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றியவர் அநீதிக்கு துணைபோக விரும்பாமால் அந்தப் பதவியை துறந்தவர் என்றும், பின்னர் இலங்கைக்குச் சென்று கண்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பிரின்சிபாலாகப் பணியாற்றியவர் என்றும் அப்போதுதான் 1917 ஆம் ஆண்டு சனவரி 17 அன்று எம்.ஜி.ஆர் பிறந்தார் என்றும் குறிப்பிடுகிறார். கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகள். குழந்தைகளுடன் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் 1920-ல் கோபாலமேனன் திடீரென்று இறந்து விடுகிறார். தொடர்ந்து விசக்காய்ச்சலால் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் மரித்து விடுகிறார்கள். இப்போது சத்தியபாமாவுக்கு எஞ்சியிருந்த குழந்தைகள் எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் தான்.

தனது இரு குழந்தைகளுக்காக இவ்வளவு வேதனையையும் தாங்கிக்கொண்ட சத்தியபாமா கண்டியிலிருந்து தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வருகிறார். தூரத்து உறவினரான திரு வேலு நாயரின் ஆதரவில் வாழத் தொடங்குகிறது எம்.ஜி.ஆரின் குடும்பம். கும்பகோணம் நகராட்சி யானையடி தொடக்கப்பள்ளியில் 1922-ம் ஆண்டு சேர்க்கப்படுகிறார் எம்.ஜி.ஆர். பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபாலமேனன் என்றும், பிறந்த தேதியாக 25-05-1916 என்றும் வகுப்பு மலையாளி என்றும் பள்ளியில் பதிவு செய்கிறார்கள். வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்லும் வேளையில் 1925 - ஆண்டு பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறார்.

பின்னணி பாடும் கும்பகோணம் நாராயணன் நாயர் உதவியுடன் ஒரு நாடகக் கம்பெனியில் குழந்தைத் தொழிலாளர்களாக எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சேர்த்துவிடப்படுகிறார்கள். தொடர்ந்து நாடகக் கம்பெனியில் இருவரும் வேலை செய்கிறார்கள்

1939-ல் எம்.ஜி.ஆர் பார்கவி என்னும் பெண்ணை மணமுடித்துக் கொள்கிறார். இவரும் மலையாளியே ஆவார். எம்.ஜி.ஆரின் தாயார் இவரை தங்கமணி என்று அன்புடன் அழைத்தார். தங்கமணியின் தாயார் லட்சுமி குட்டி, தந்தை தமிழ் நாட்டுக்காரரான விசுவநாத அய்யர். 1942-ல் தங்கமணி திடீரென்று காலமாகிவிடுகிறார். இதே ஆண்டில் எம்.ஜி.ஆர், கடுங்க நாயர் என்பவரின் மகளான சதானந்தவதி என்ற பெண்ணை மணக்கிறார். இவரும் மலையாளியே பாலக்காட்டிலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ள குழல் மன்னம் என்ற இடத்தில் ஏரகாட் குடும்பத்தில் பெண் கிடைத்தது என்று குறிப்பிடுகிறார் எஸ்.விஜயன்.

ராஜமுக்தி திரைப்படம் 1948-ல் வெளிவந்தது, இந்த படத்தின படப்பிடிப்பில் தான் எம்.ஜி.ஆருக்கும், நடிகை வி.என்.ஜானகிக்கும் காதல் ஏற்பட்டதாக நடிகை சி.டி.ராஜகாந்தம் அறியத்தருகிறார். மிகப்பெரிய போராட்டத்தின் இறுதியில் வி.என்.ஜானகியை கரம் பிடிக்கிறார் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியுடைய கார்டியனாக இருந்தவரோடு எம்.ஜி.ஆர் - ஜானகி போராடியபோது இவர்களுக்கு ஆதரவாக ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் நீதிமன்றக் கூண்டில் ஏறி சாட்சி சொன்னாராம். காச நோய் பீடித்திருந்த தனது மனைவி சதானந்தவதியின் அனுமதியோடு 1957-ம் ஆண்டு வி.என்.ஜானகியை பதிவுத் திருமணம் செய்துகொண்டார் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியின் தாயினுடைய ஊர் பாலக்காட்டிற்கு அருகில் உள்ள வைக்கம். இவர் பிரபல கர்நாடகப் பாடல் ஆசிரியர் பாபநாசம் தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள். ஆக இவரும் பிறப்பால் மலையாளியே என்று எம்.ஜி.ஆரின் உதவியாளர் எம்.ஜி.ஆர் முத்து கூறியிருக்கிறார்.

ஒருமுறை எம்.ஜி.ஆர் திருவனந்தபுரத்துக்கு பயணிக்கும் போது வழி நெடுகிலும் எழுதப்பட்டிருந்த மொழி புரியவில்லை என்றும் அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்ததாகவும் எம்.ஜி.ஆரே குறிப்பிட்டிருக்கிறார்.

அவருக்கு மலையாள மொழி தெரியவில்லை என்று அவரது நண்பர்கள் கேலி செய்ததாகவும் குறிப்பிடுகிறார். அவர்களுக்கு தான் தமிழ்ப் பள்ளியில் தானே படித்தேன், மலையாளம் எங்கு போய் கற்பேன் என்று பதிலுரைத்திருக்கிறார். இருப்பினும் அவருக்கு மலையாள மொழி பேசத்தெரிந்திருக்கிறது. 1953-ல் ஜெனோவா என்னும் திரைப்படம் தமிழ்,மலையாளம் இரண்டிலும் வெளிவந்திருக்கிறது. இரண்டிலும் எம்.ஜி.ஆரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். அந்தந்த மொழிகளில் தானே டப்பிங் பேசியிருக்கிறார். இது பற்றி எம்.ஜி.ஆர் குறிப்பிடுகையில் “ நான் மலையாளத்தில் நடித்த கதாநாயகன் வேடத்தில் என்னால் பேசப்பட்டிருந்த மலையாள மொழி உரையாடல்கள் ஒரு மலையாள நடிகரால் டப்பிங் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன்”. இதிலிருந்து நமக்குத் தெரிவது எம்.ஜி.ஆர் தனது தாய் மொழியான மலையாளத்தில் பேசி ஒரு படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் பேசிய மலையாளம் தூய மலையாள ஓசையுடன் கூடியதாக இல்லை. தமிழ் மொழியை ஒத்த ஓசையுடன் இருக்கிறது என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரே எம்.ஜி.ஆரிடம் சொல்லி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் வீட்டில் என்ன மொழியில் பேசியிருப்பார்? பெரும்ப்பாலானவர்களுக்கு இந்த கேள்வி இயற்கையாகவே எழும். அவரது தாய்மொழியாக எதை நினைத்தார் என்பதை தனது மனைவி சதானந்தவதியுடன் நடந்த உரையாடலை வைத்து எம்.ஜி.ஆர் இப்படி கூறுகிறார்.

”அவள் சொன்னாள்: ‘என்னைப் பொறுத்தவரை ஆங்கிலமோ, தமிழோ, மலையாள மொழியைத் தவிர வேறு எதுவானாலும், அது எவ்வளவு பெரிய இலக்கியங்களைக் கொண்டதானாலும் எனக்கு அது தொட்டியில் ஊற்றிய தண்ணீர்தான். ஆனால் எனது தாய் மொழி ஊற்றெடுக்கும் நீர் ஊற்றாகும்.’

நான் அவளிடம் திருப்பிக் கேட்டேன் : ‘எனக்கும் தாய்மொழி மலையாளம் தானே. ஆனால் எனக்கு மட்டும் ஏன் தொட்டித் தண்ணீராகத் தமிழ் இல்லை, ஊற்று நீராகவே இருக்கிறது?’

அவளிடமிருந்து பளிச்சென பதில் வந்தது : ‘ நீங்கள் முதன்முதலில் படித்ததோ எழுதியதோ, உங்களைச் சுற்றிப் பேசப்பட்டதோ எல்லாமே தமிழ்தானே. நான் அப்படியல்லவே!”

அவளிடம் சொன்னேன் : “இன்று முதல் உன்னிடம் தமிழில் தான் பேசப்போகிறேன்”.

நான் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாகச் சொன்னேனோ அதற்கு நேர்மாறாக அமைதியாகச் சொன்னாள் : “ நானும் உங்களிடம் தமிழில் தான் பேசுவேன்”.

இவ்வுரையாடல் மூலம் எம்.ஜி.ஆர் மலையாளி என்பதையும் தனது தாய்மொழி மலையாளம் என்பதையும் உணர்ந்தே இருந்தார் என்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்துகிறார். இப்படி பிறப்பால் மலையாளியாக இருந்தவர்தான் தமிழகத்திற்கு முதல்வரானர் என்று நூலாசிரியர் குறிப்பிடுவது ஆதங்கமா அல்லது இயல்பா என்று இந்த இடத்தில் புரிந்துகொள்ள இயலவில்லை.

இப்படியெல்லாம் சிரத்தை எடுத்து எம்.ஜி.ஆரை மலையாளியாக நிரூபிக்க முயற்சி எடுத்த நூலாசிரியர் இன்னும் சில சுவையான தகவல்களை தரத் தவரவில்லை.

திரைப்படம் ஒன்றில் எம்.ஜி.ஆரை நோக்கி பாடும் கதாநாயகி,

”சேரனுக்கு உறவோ? செந்தமிழர் நிலவோ?” என்று பாடுவார்.

இதற்கு நூலாசிரியர் தரும் பதில் “இரண்டும் தான்” பிறப்பால் மலையாளியான எம்.ஜி.ஆர் பற்றி அவர் திமுகவில் இருந்து விலக்கப்படும் வரை பிரச்சனையாக தமிழகத்தில் எழுப்பப்படவில்லை. திராவிடம் என்று போர் முரசு கொட்டியவர்கள் எம்.ஜி.ஆர் மலையாளி என்று பரப்புரை செய்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை என்பதையும் எம்.ஜி.ஆர் செந்தமிழர் நிலவுதான் என்பதையும் வெளிப்படுத்தியதை விரிவாக எழுதுகிறார். எனினும் சேரனும் தமிழர் தான், அவன் சோழனுக்கு உறவுமுறைதான். சேரன்,சோழன் மற்றும் பாண்டியர்களும் நம் தமிழர்கள் தான் என்கிற நல்லெண்ணத்துடன் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.



தொடரும்...



அன்புடன்,

அத்திவெட்டி ஜோதிபாரதி.



எம்.ஜி.ஆர் - நடிகர் முதல்வரானது எப்படி?

நூலாசிரியர்: அருணன்

வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை