Friday, January 30, 2009

தம்பி முத்துக்குமரா!

தம்பி முத்துக்குமரா!



ஆற்றாமையால் தன்னை
அழித்துக் கொண்ட
முத்துக்குமார் தமிழினத்தின் முத்து
வெந்த உடலில் இருந்த கரி
தமிழக
நரி அரசியல்வாதிகளின் முகத்தில்
பூசப்பட்ட கரி
அரசியல்வாதிகளே
கரியை மட்டும் உங்கள்
முகத்தில் பூசவில்லை
நெறியையும் விட்டுச் சென்றிருக்கிறான்
அவன் மக்களில் ஒருவன்
நீங்கள் மாக்களில் ஒன்று
வேறுபாட்டில்
வெட்கித் தலைகுனித்து
இழுக்கு வந்ததற்குப் பின்
அழுக்கு தேய்க்க
நலுக்கிக் குலுக்கி வரும்
அரசியல் வியாபாரிகளே
உங்கள் வியாபாரத்தை
வேறு இடத்தில்
வைத்துக் கொள்ளுங்கள்.
மக்களிடம் வந்து
மாய்ந்து போவீர்கள் -பாவம்
நீங்கள் மாறவேண்டாம்
வராதீர்கள்.
மாளாத்துயரில் ஆழ்த்தி
மீளாத் துயில் கொண்டவனே
உன் பெயரை உச்சரிக்காத
தமிழ் உதடுகள் உண்டோ?
நீ வரலாறு
உன்னைப் படிக்கக்
கொடுத்துவிட்டு
பல்லக்கில் ஏறி இருக்கிறாய்.
உன் உயிரற்ற உடல்
பிணமல்ல தமிழ் மணம்
நீ இறந்தாலும்
அரசியல்வாதிகளை மட்டும்
அண்ட விடாதே
அவர்கள்
அண்டிப் பிழைத்தே
பழகி விட்டார்கள்
நீ மரிக்க வில்லை -மாறாக
ஒவ்வொரு தமிழனின்
இதயத்திலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!

கவிஞர் மலர்விழியின் கருவறைப் பூக்கள் - கவிதைத் தொகுப்பு வெளியீடு

கருவறைப் பூக்கள் - கவிதைத் தொகுப்பு வெளியீடு

கெழுதகை நட்பும், விழுமிய சுற்றமும் காணக்கிடைக்கும் இலக்கிய நிகழ்வுகளில், கவிமாலை, கவிச்சோலைகளில் என்று யாம் விருபினாலும் அரிதாகக் கலந்து கொள்ளும் நிலை தான் இன்றும்,

"உத்தியோகம் புருஷலட்சணம்"(இல்லத்தரசனுக்கு வேலை அழகு) எனும் ஆணாதிக்கச் சொற்றொடர் புலம் பெயர்ந்த வாழ்க்கையில் பொய்யாகிக் கொண்டிருக்கும் காலத்தில்,

சாதிகள் இல்லையடிப் பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் இந்த பாரதியின் பாடலை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க பயந்து கொண்டிருக்கும் காலம். சாதி என்றால் என்ன? குழந்தைகள் கேட்டால்?

உறவுகள், நண்பர்களின் குரல்களை கைப்பேசியின் ஒலிபெருக்கியில் மட்டுமே கேட்டுக் கொண்டு அவசர கோலம் அள்ளித் தெளிக்கும் மாவு என்றில்லாமல்,
மெல்லத்தமிழினி சாகும் என்பவர்களுக்கு, மெல்லத்தமிழினிதாகும் என்று செவியில் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பண்பாட்டு, இலக்கிய நிகழ்வுகள்.

அந்த வகையில் சிங்கப்பூர் கவிஞர் திருமதி மலர்விழி இளங்கோவன் அவர்களது "கருவறைப் பூக்கள்" முதல் கவிதைத் தொகுப்பு வெளியீடு ஒரு முத்தாய்ப்பு.

புலவர் பாண்டித்துரையும், கவிஞர் மாதங்கியும் விழா பற்றி என்னிடம் முன்னரே தெரிவித்திருந்தார்கள். கவிஞர் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். விழாவிற்கு வருகிறேன் என்று வாக்களித்தாயிற்று. சிங்கையில் சீனப் புத்தாண்டுக்கு விடுமுறையாக இருந்தாலும், பெரும்பாலான சீனரல்லாத தமிழர், மலாய்க்காரர்களுக்கு வேலை இருக்கும். அந்தவகையில் எனக்கும் அன்று வேலை இருந்தது. எப்படியும் கலந்து கொள்ளவேண்டும் என்கிற நிலை, வேலை முடிந்ததும் நேராக விழா நடக்கும் இடத்திற்குச் சென்றேன். என்னோடு வர இருந்த டொன் லீ சிவ தயாளன், அதிரை ஜமால் ஆகியோர் வேலையின் காரணமாக வர இயலவில்லை.


படம் அனுப்பிவைத்த புலவர் பாண்டித்துரைக்கு நன்றி!
நான் வந்து சேரும் போது விழா தொடங்கியிருந்தது, சிங்கப்பூரின் வெண்பா சிகரங்களான ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால்(தலைமையேற்றிருந்தார்) , பாத்தென்றல் முருகடியான் ஆகியோரின் உரை முடிவுற்றிருந்தது. அன்பிற்குரிய புதுமைத் தேனீ கவிஞர் மா.அன்பழகன் அவர்களும் உரையாற்றி அமர்ந்திருந்தார். திருமதி மலர்விழி இளங்கோவன் எழுதிய கவிதையைப் பாடலாக, தமிழ் வணக்கம் பாடிய காவியா பற்றி மற்றவர்கள் பேசும் போது குறிப்பிட்டார்கள். துளசி இளங்கோவன் நிகழ்ச்சியை நேர்த்தியாக நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்.

மார்கழிப் பூவைப் பற்றி அழகானப் பாடலை இசையில்லாமல் இசைந்து பாடினார் மருத்துவர் திருமதி உமா இராஜன் அவர்களின் உடன்பிறப்பு சோபா சங்கர், ஏ.ஆர் இரகுமான் இசையமைப்பில் மே மாதம் என்ற திரைப்படத்தில் பாடியவரும் இவரே.


இலக்கியத்தென்றல் கவிஞர் ந.வீ.விசயபாரதி அவர்கள் தென்றலாகத் தமிழ் மணம் வீசிக் கமழச் செய்தார். நூலாய்வு செய்ததைப் போல் ஓர் உணர்வு ஏற்பட்டது.

அடுத்து நூலாய்வு செய்த திரு ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள் கருவறைப் பூக்களில் உலகியல் என்றத் தலைப்பில் பொருளாதாரத்தைப் புட்டு புட்டு வைத்தார் என்பதை விட வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று எளிய ரசம் சொட்ட வட்டார வழக்கில் வகைப்படுத்திவிட்டு அமர்ந்தார். தொழில் வியாபாரம் செய்யும் சீனர்கள் சில தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு நம்மிடம் தமிழ் பேசுவதையும், நம்மவர்கள் தமிழ் ஆங்கிலம் இரண்டும் தெரிந்திருந்தும் நம்மிடத்தில் ஆங்கிலத்தில் பேசி அங்கலாய்ப்பதை வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். தனது உரையை கவிஞரின் கவிதையில் உள்ளிருத்திய உலகியல், பொருளாதாரம் சார்ந்த சிந்தனையைத் தொட்டுச் சிறப்பித்திருந்தார். வியாபாரத்துறையில் இருப்பவரை இந்தத் தலைப்பில் பேசத் தேர்ந்தெடுத்தது நன்றாக இருந்தது. இடையே அவர் தெரிவித்த குடியரசு தின வாழ்த்துகள் அன்றைய நாளில் அந்நியப்பட்டுப் போனதென்னவோ உண்மை.

அடுத்துப் பேசவந்த திருமதி விஜி ஜெகதீஷ், கருவறைப் பூக்களில் உறவியல் என்றத் தலைப்பில் உறவுகள், பந்தம், பாசம்,ஆணிவேர் போற்றவற்றை அக்குவேறு ஆணிவேராக அலசி நூலாய்வு செய்திருந்தார். இது தனது முதல் நூலாய்வு என்று பெருமைப்பட்டு பெருமைப் படுத்தினார். அதில் புலம் பெயர்தல் என்ற தலைப்பில் வந்த ஒரு கவிதையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நாற்று முதிர்ந்து



நாளாகி



நாடு மாற்றி நடவு செய்தாலும்



வேற்று மண் பதிந்து



விருப்புடனே வேர் பிடித்து



வியத்தகு மகசூல் தரும் ...



அவசிய வாழ்வினிலே



ஆணிவேர் தொலைத்த



அதிசய ரகம் நாங்கள்

புலம்பெயர் மக்கள் எந்த ரகம் என்பதை சுட்டாமல் சுட்டி இருக்கிறார் என்பதைவிட குட்டி இருக்கிறார் கவிஞர் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு கவிதை "ஆண்களின் ஆதங்கம்" என்ற தலைப்பில், இதில் ஆணாதிக்கம், பெண்ணியம் இரண்டையும் தராசிலிட்டு நிறுத்து கொடுத்திருக்கிறார். இதற்குமேல் விளக்கினால் அது விமர்சனமாகத் தெரியும். அதனால் இத்துடன் விட்டுவிட்டு நிகழ்ச்சிக்குச் செல்லலாம்.

இந்தக் கவிஞர் தனது கருவறைப் பூக்களைப் பிரசவிக்க ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தாலும் தனது மூன்றாவது குழந்தையான கருவறைப் பூக்களுக்கு விழா எடுத்துப் பிரசவம். மருத்துவர் திருமதி உமா இராஜன்(நமது ஈழத்துச் சொந்தம்) அவர்கள் நூலை வெளியிட வேதனையில்லாமல் வெளிக்கிட்டது கருவறைப் பூக்கள், பிறந்த குழந்தையின் மழலைச் சத்தம் விண்ணைப் பிளந்து அனைவரையும் ஒரு நிமிடம் குழந்தைகளாக்கிப் பார்த்தது.

அடுத்து, நூலை வெளியிட்ட மருத்துவர் திருமதி உமா இராஜன், தமது உரையில் கவிஞரிடம் உரையாடியதிலிருந்து கற்பனை செய்து வைத்திருந்த கவிஞரை நேரில் பார்க்கும் போது கற்பனை மெய்யானதை புனைவில்லாத  புதுக் கவிதையாகச் சொன்னது நன்றாக இருந்தது. பழக்க தோசத்தில் ஆங்கில வார்த்தைகள் வந்து விடுமோ என்று அச்சப் பட்டது, அதை வெளிப்படையாகச் சொல்லி வெட்கப்பட்டது, என்று சுவையாகச் சென்றது. அவர் தெரிவித்த வாழ்த்துகள் உள்ளக்கிடங்கையில் இருந்து வெளிப்பட்டு ஒப்பனையின்றி மிளிர்ந்தது.

அடுத்து ஏற்புரையாற்றிய கவிஞர் திருமதி மலர்விழி இளங்கோவன் யாருக்கு நன்றி சொல்வதென்று திக்குமுக்காடியதை கண்ணுற முடிந்தது. எனினும் நன்றி சொல்லி உங்களையெல்லாம் அந்நியப்படுத்த விரும்பவில்லை என்று தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டார். தனது உரையில் கவிஞர் திரு பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் தனது படைப்பு ஒன்றை  சிங்கைச்சுடர் மாத இதழில் வெளியிட்டதை நினைவு கூர்ந்தார். பின்னர் அண்ணன் திரு பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் மாதந்தோறும் நடத்தும் கடற்கரைச் சாலை கவிமாலையில் கலந்து கொண்டு கவிதைகள் படைத்ததையும், மரபுக் கவிதைப் போட்டியில் பங்கெடுத்ததையும், கவிஞர் ந.வீ.விசயபாரதி அவர்களிடம் இருந்து மரபை வரவாக்கிக் கொண்டதையும் நினைவு கூர்ந்தார். கவிஞர் புதுமைத் தேனீ மா. அன்பழகன் அவர்கள் பற்றியும் தெரிவித்து ஒட்டுமொத்த கவிஞர்களையும் ஒரே குடும்பமாக்கிக் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது கவியார்வத்தை ஊக்குவிக்கும் கணவர் திரு இளங்கோவன், மகன் மதன், மகள் துளசி ஆகியோர் பற்றிக் குறிப்பிடும் போது ஒவ்வொரு கவிதையையும் படித்துவிட்டு முதலில் விமர்சனம் செய்பவர் தனது கணவரே என்றார். இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கி  நெறிப்படுத்திய துளசி இளங்கோவன் கவிஞரது மகள் என்பது நிகழ்ச்சியின் பாதியில் தான் எனக்குத் தெரியும். வியப்பளிக்கும் வகையில் நேர்த்தியாக நிகழ்ச்சியைக் கொண்டு சென்றார் துளசி.


கருவறைப்பூக்கள் நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் திரு வைகோ அவர்கள்,

கவிதை என்பது பூக்களாக மட்டுமல்ல,
வாட்களாகவும்; தழுவும் தென்றலாக
மட்டுமல்ல, கிளர்ந்தெழும் புயலாகவும்
இருந்திட வேண்டும் என்பதை உணர்ந்தே
ஒவ்வொரு கவிதைகளையும்
வடித்திருக்கிறார் கவிஞர்.


கவிஞர் மலர்விழி இளங்கோவனின்
"கருவறைப் பூக்கள் காகிதப் பூக்களல்ல,
காவியப் பூக்கள்."

என்று முடித்திருக்கிறார்.


பேராசிரியர்  முனைவர் திரு.சுப.திண்ணப்பன், கவிமாமணி புதுமைத்தேனீ திரு. மா.அன்பழகன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா.ஆண்டியப்பன், கவிஞர் திரு.பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோரும் அணிந்துரை எழுதி சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

பின்பு நூல் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு தொடந்து நடந்து கொண்டிருந்தது.


இந்த நிகழ்வினூடாக தமிழ் இலக்கிய வட்டத்தின் உடன்பிறப்புகள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. முனைவர் இரெத்தின வெங்கடேசன், கவிஞர் பாலு மணிமாறன்,எழுத்தாளர் மாதங்கி, புலவர் பாண்டித்துரை, கவிஞர் நூருல் அமீன், பட்டிமன்ற பேச்சாளர்கள் பெரி.சிவக்குமார், ஸ்டாலின் போஸ், சிங்.செயக்குமார் மற்றும் நண்பர்கள்.

இறுதியாகச் சிற்றுண்டிக்குப் பிறகு விழா இனிதே நிறைவடைந்தது.


நூல் : கருவறைப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு)


ஆசிரியர் : மலர்விழி இளங்கோவன்


வெளியீடு : மது பதிப்பகம்


விலை : ரூ 80/ S$12




நூல் விமர்சனத்தை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.



Thursday, January 29, 2009

சானியாவுக்கு இரட்டைக் கொம்பு!

சானியாவுக்கு இரட்டைக் கொம்பு!


இங்கிலாந்து மேல் படிப்பு

இந்தியத் தாயின் குழந்தைமேல் பிடிப்பு

பகுதி நேர பனிக்கட்டிப் பாலேடு தஞ்சம்

பறிகொடுத்தாள் பசப்பி நெஞ்சம்

அரவணைத்தாள் இந்தியத்தாய் அன்று

அன்பிற்குரிய அழகு மகள் என்று



இளஞ்சிவப்பு கதர் சேலை தந்தார்

இன்முகத்துடன் எப்பவுமே வந்தார்

பொற்கோவில் புகுந்து நொந்தார்

பொன்மனமும் இன்னுயிரும் நீத்தார்



இளம் இரத்தம் இருக்கிறது பாரும் என்று

கிழந்தலைகள் கிளர்ந்து கொண்டுவந்தது அன்று

பொரிம்பிட்ட பூச்சரமாய் பொறுத்துக்கொண்டார்

புண்ணியப்பட்ட பூமி என்று நிறுத்துச்சொன்னார்



இராமா, யுத்தத்தில் இரத்த ஆறு ஓட

ஒரு ஓரத்துக் குடல்வால் மட்டும் வேதனையில் வாட

கேட்பார் சொல் கேட்டு கேளிர் துறந்தார்

மீட்பேன் என்றுரைத்து மெட்டுகள் போட்டார்

வெட்டிவிட நினைத்து வேதங்கள் சொன்னார்

சட்டி பானை உடைத்துச் சண்டாளனானார்



எவரோ யாரோ இன்னும் தெரியவில்லை

இன்னுயிர் நீத்தார் ஒன்றும் புரியவில்லை


விசாரணை முடித்துவைக்கப் பட்டது

விளக்கம் இல்லாமல் முடிந்து வைக்கப் பட்டது



சந்திரா,சூரியா, நரசிம்மா என்னே கொடுமை

சட்டங்களால் தங்களைத் தொடமுடியாத மகிமை

புரியாத புதிராக்கிச் சென்ற புண்ணியவான்களே

மரியாத இனத்தை மரிக்க வைக்கிறீர்களே



பிரியாத நீ நளினியைப் பார்க்க வந்த நளினம் -அது

தெரியாத நாம் உன்னை மனிதத்தின் கலசமாக

மல்லாந்து படுத்து மனக்கணக்குப் போட்டு நெகிழ்ந்துருகி

சொல்லாய்ந்து பார்க்காமல் சுனக்கப்பட்டு கசிந்துருகி



மென்மையை மேன்மையாக்கிப் மெருகூட்டினோமே

வன்மையை வகைப்படுத்தி எம்மை அழிக்கும் வல்லூறா நீ?

சறுக்காமல் விளையாடி

பதக்கங்கள் குவிக்க வேண்டும்


ஆசைப்பட்டேன் அவசரப்பட்டேன்

உனக்குக் கொம்பு முளைத்தது மட்டும்

எனக்கு எப்படி தெரியாமல் போயிற்று?

சல்லிக்கட்டுகளில் சறுக்கி விளையாடியது போதும்

உனது இரட்டைக் கொம்பு

உடைந்து விடாமல் இருக்கவேண்டும் மீதம்!

Tuesday, January 27, 2009

செய் அல்லது செத்துமடி

செய் அல்லது செத்துமடி
தமிழனின் தாரக மந்திரம்



வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!

Friday, January 23, 2009

கலர்புல் திமுக நிர்வாகிகள்

கலர்புல் திமுக நிர்வாகிகள்


திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக மு.க.அழகிரி இடம் பிடித்துள்ளார். கனிமொழி, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் மட்டக் குழுதான், திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழு ஆகும். இது நேற்று மாற்றி அமைக்கப்பட்டது.

இதுகுறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களாக, கட்சியின் தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கல்யாண சுந்தரம், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஏ.எல்.சுப்பிரமணியம், நாகநாதன், தயாநிதி மாறன், பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி, குப்புசாமி, மாதவன், சுப.தங்கவேலன், ஜி.எம்.ஷா, கோவை ராமநாதன், நேரு, ஐ.பெரியசாமி, ஏ.டி.கே.ஜெயசீலன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ...

அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கல்யாண சுந்தரம்; சட்டத் துறை செயலாளர் ஆலந்தூர் பாரதி; கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, திருச்சி சிவா; தலைமைக் கழக செய்தித் தொடர்பாளர்கள் ரகுமான்கான், விடுதலை விரும்பி; தலைமைக் கழக சட்ட ஆலோசகர் வக்கீல் என்.ஜோதி; தலைமைக் கழக வக்கீல்கள் பரந்தாமன், தண்டபாணி, ரவிச்சந்திரன்.

இளைஞர் அணிச் செயலாளர் மு.க.ஸ்டாலின், துணைச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சுகவனம், சேலம் ராஜேந்திரன், சுப.த.சம்பத், சந்திரசேகர்.

தேர்தல் பணிச் செயலாளர்கள் கம்பம் செல்வேந்திரன், ரகுபதி, சேடப்பட்டி முத்தையா, அரங்கநாயகம், செல்வகணபதி, முபாரக், பார்.இளங்கோவன்;

விவசாய அணித் தலைவர் என்.கே.கே.பெரியசாமி, தொண்டர் அணிச் செயலாளர் உமாபதி; மாணவர் அணிச் செயலாளர் கடலூர் புகழேந்தி.

பகுத்தறிவுப் பேரவை தலைவர் கனிமொழி

கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவர் கனிமொழி, செயலாளர்கள் பூங்கோதை, தமிழச்சி தங்கபாண்டியன்; இலக்கிய அணி புரவலர் நன்னன், தலைவர் வேழவேந்தன்;


மகளிர் அணிப் புரவலர் இந்திரகுமாரி, தலைவர் நூர்ஜகான் பேகம், துணைத் தலைவர்கள் காஞ்சனா கமலநாதன், விஜயா தாயன்பன், செயலாளர் புதுக்கோட்டை விஜயா;

மகளிர் அணி பிரசாரக் குழு செயலாளர்கள் பவானி ராஜேந்திரன், சங்கரி நாராயணன், நளினி சாரங்கன், சித்திரமுகி சத்தியவாணிமுத்து, வாசுகி ரமணன், ரொக்கையா மாலிக் என்ற சல்மா.

Thursday, January 22, 2009

தமிழக முதல்வரின் பணி மகத்தானது

தமிழகத்தின் அழுத்தம் எதுவும் டில்லியிடம் எடுபடவில்லை யுத்த நிறுத்தம் குறித்து மேனன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை


இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மேற்கொண்டுவரும் தவறான அழுத்தங்கள் எதுவுமே புதுடில்லியிடம் பலிக்கவில்லையெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், இந்தியா, இலங்கை விவகாரத்தை நேர்மையுடனேயே அணுகுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த வாரம் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் வன்னி மக்களுக்கு நிவாரண விநியோகம் பற்றி அரசிடம் கேட்டறிந்து கொண்டாரே தவிர போர்நிறுத்தமொன்று பற்றியோ, பேச்சு முயற்சிகுறித்தோ ஒரு வார்த்தை கூட கதைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தற்போதைய நாட்டு நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

இந்திய வெளியுறவுச் செயலாளரின் விஜயம் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

இந்திய வெளியுறவுச் செயலாளர் அரசாங்கத்துக்கு புதுடில்லியிலிருந்து எந்த விதமான செய்தியையும் கொண்டுவரவில்லை இங்குள்ள தற்போதைய நிலைமைகளைக்கண்டறிந்து செல்லமட்டுமே அவர் வருகை தந்தார். ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க , தமிழ் கட்சிகளின் தூதுக்குழுக்கள் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலரையும் அவர் சந்தித்துப்பேசியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அகதிமுகாங்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்குத் தேவையான உதவிகள் , நிவாரணங்கள் உரிய முறையில் சென்றடைகின்றனவா? அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கின்றதா என்பதை மட்டுமே கேட்டறிந்து கொண்டார்.

மீண்டுமொரு போர்நிறுத்தம் பற்றியோ, சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பது பற்றியோ எதுவுமே அவர் தெரிவிக்கவில்லை. அத்துடன் புதுடில்லியிடமிருந்து அவர் எந்த செய்தியையும் கொண்டுவரவில்லை.

புதுடில்லி மீதான தமிழ்நாட்டின் அழுத்தம் தொடர்பாகக் கூட அவர் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.

தமிழ் நாடு மத்திய அரசு மீது பிரயோகிக்க முயற்சிக்கும் எந்தவிதமான அழுத்தங்களையும் புதுடில்லி அலட்டிக் கொள்வதில்லை என்பது இதிலிருந்து நன்குபுலனாகின்றது. எனவே தமிழ்நாட்டின் அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் குறித்து நாமும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

மகிந்த ராஜபக்ஷவின் அரசு இனவாத அரசாங்கமல்ல இந்த நாட்டில் வாழும் அனைத்துப் பிரஜைகளையும் சமமாகவே அரசு நோக்குகின்றது. தமிழ் மக்களுக்கு உரிய காலத்தில் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும். யுத்தம் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காகவேயன்றி தமிழர்களுக்கு எதிரானதல்லவென்பதை அரசு முழு உலகத்துக்கும் வெளிப்படையாகவே காட்டியிருக்கிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நன்றி: தினக்குரல்

ஒன்றும் சொல்வதற்கில்லை. அப்பட்டமாக வெளிப்படுகின்றன அழகிய உண்மைகளும், அழுகிய பொய்களும்!

Monday, January 19, 2009

ஈழத்தமிழர்களுக்கு நல்ல பொழுது விடியும் - பா.ச.க சொல்கிறது


ஈழத் தமிழர்களின் பிரச்சினையை இந்தியாவின் பிரச்சினையாக்க வேண்டும்


* இல.கணேசன் பேட்டி
தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா

""இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் எதிரொலியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்திருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்கும் வசதிகளை இந்திய அரசு கவனித்து வருகிறது. ஈழத் தமிழ் அகதிகளுக்கான பராமரிப்புப் பொறுப்பை அரசு எப்போது ஏற்றுக்கொண்டதோ அன்று முதல் இவ்விவகாரம் "உள்நாட்டுப் பிரச்சினை' என்ற வட்டத்தைக் கடந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிடும் உரிமை இந்தியாவுக்கு வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் தலையிட எல்லா உரிமையும் உண்டு மட்டுமல்ல; கணிசமான பொறுப்பையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். முக்கிய பங்காற்ற வேண்டும். சொல்லொணாத் துன்பங்களுக்குள்ளாகி தினமும் உயிர் விட்டுக் கொண்டிருக்கும் அந்த ஈழத் தமிழ் மக்களுக்கு உடனடியாக பாதுகாப்புத் தரவேண்டிய கடமை, அவர்களது உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை, இந்தியாவின் பிரச்சினையாக ஆக்க வேண்டும்' என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் இல.கணேசன் "தினக்குரலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கருத்து வெளியிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக தமிழகத்திலும் டில்லியிலும் அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் பல அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ்ப் படைப்பாளிகளும் திரை உலகத்தினரும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் நடத்திவரும் சூழலில் எதிலுமே கலந்துகொள்ளாமல் தனியாகவும் போராட்டம் நடத்தாமலிருந்த பாரதிய ஜனதா கட்சி, தமிழகத் தலைவர் இல.கணேசன், திருநாவுக்கரசர் எம்.பி., தலைமையில் இம்மாதம் பன்னிரண்டாம் திகதி சென்னையில் உண்tவிரதப் போராட்டம் நடத்தி இன அழிவிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முதலில் போரை நிறுத்து என்று குரல் கொடுத்தனர். இப்போராட்டத்தில் பழ.நெடுமாறன் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். "தினக்குரலு'க்கு இல.கணேசன் நேற்று முன்தினம் அளித்த சிறப்புப் பேட்டியின் விபரம்.

தென்னாசியாவில் தொடர்ந்து வல்லரசாக நீடிக்க, இலங்கையை தனது கட்டுப் பாட்டுக்குள் இந்தியா வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதன் காரணமாக இலங்கை இரு அரசுகளாக பிரிவதை இந்தியா விரும்பாது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வந்தால் மட்டுமே, ஈழத் தமிழருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உரிமைகளை வழங்க முடியும். நான்கு மாதங்களில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவீர்களா?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் வாழவே விரும்பும். துண்டாடும்படியான கருத்தை இந்தியா சொல்ல முடியாது. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இங்கிருந்து கொண்டு தீர்மானம் எடுப்பது பொருத்தமற்றது என்பது எனது கருத்து. அந்த நாட்டு மக்களின் பிரச்சினை என்ன? அதன் பின்னணி, வரலாறு என்பன இந்திய அரசுக்கு முதலில் தெளிவாகத் தெரிய வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள், நிபுணர்கள் அமர்ந்து முடிவெடுக்க வேண்டும். இது நடந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இலங்கை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் கட்சி பாரதிய ஜனதா கட்சியாக@வ இருக்கும். அந்த நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து எல்.கே.அத்வானி தெளிவான கருத்தைக் கொண்டிருக்கிறார். உறுதியும் தந்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நிச்சயம் தீர்வு காணப்படும். இப்படியான ஒரு நம்பிக்கை எதிர்பார்ப்பில் வெளியுறவுக் கொள்கை மாற்றம் அவசியமாகத் தெரியவில்லை.

தமிழகம் மட்டுமல்ல, உலகத் தமிழரே ஒட்டு மொத்த குரலில் கோரிக்கை விடுத்தும் யுத்த நிறுத்தத்தை இந்தியப் பிரதமர் வலியுறுத்த வில்லையே?

ஈழத் தமிழர்களின் உண்மையான பிரச்சினை என்ன என்பது அரசுக்கு சரிவரப் புரியவில்லை என்பது எனது கருத்து. மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகள் சரி, தமிழக அரசியல் கட்சிகள் சரி, ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் தீவிர தன்மையை உணர்த்தவில்லை. இதன் காரணமாக தமிழருக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றியோ அவர்களது உரிமைகள் பற்றிக் கேட்கவோவா இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, நூற்று ஐம்பது கோகாடி பணமும் ஆயுதமும் ஆட்பலமும் தொழில் நுட்பமும் அளித்திருக்கிறது.

இலங்கைக்கு உடனடியாக பிரtப் முகர்ஜியை அனுப்பிவைப்பதாக தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்களிடமும் முதலமைச்சர் கருணாநிதியிடமும் பிரதமர் மன்மோகன்சிங் வாக்குறுதி அளித்திருந்தார். பல வாரங்களின் பின்னர் இப்பொழுது இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனனை கொழும்புக்கு அனுப்பிவைத்திருக்கி?ர். மாற்றம் எதுவும் வருமா?

நம்பிக்கை இல்லை. மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் கட்சிகளில் முக்கியமானவை அதன் கூட்டணியான தி.மு.க. மற்றும் பா.ம.க. இக்கட்சிகள் வெறும் @காரிக்கை மட்டுமே வைக்க முடியும். காங்கிரஸ் அக்கறை எடுக்காத நிலையில் என்ன நடக்கப் போகிறது? பிரதமர் சொன்னார். அமைச்சர் பிரணாப் முகர்ஜி போகவில்லை. தமிழக முதல்வர் பேச்சுக்கும் மத்தியில் மதிப்பு இல்லை. காரணம், இவ்விடயத்தில் காங்கிரஸ் தலையிடாது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குரிய தீர்வை, அங்கு வாழுகின்ற மக்கள்தான் முவுவுசெய்ய வேண்டும் என்று ஒரு இணையத் தளத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கின்றீர்கள். இதன் விளக்கம் என்ன?

அவர்களின் தீர்மானம்; சுயாட்சியோ அல்லது தனி நாடோ சரி. நாங்கள் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. அவர்களேள முடிவு செய்யட்டும். அதேநேரத்தில், அங்கு பிரிவினை வேண்டும் என்று கோகாருவது பொருத்தமாக இல்லை என்றாலும் கைகட்டிக் கொண்டு நிற்பது தவறு. அந்த மக்களின் முடிவு, அவர்களின் சம உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு இந்தியா உதவலாம்.

கேள்வி : இலங்கைஇந்திய பிரதமர்களுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து?

பதில் : எந்த ஒப்பந்தத்தையுமே இலங்கை மதிக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. கடைப்பிடித்ததாக வரலாறு இல்லை. எல்லாமே மீறப்பட்டிருக்கின்றன. கிழித்தெறியப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், பரந்த அரசியல் எண்ணம் கொண்ட சிங்களத் தலைவர்கள் அங்கு இல்லை. இலங்கை அரசு மீது நம்பகத் தன்மையே கிடையாது.

கேள்வி : கச்சதீவு ஒப்பந்தம் பற்றி...?

பதில் : அந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கக்கூடாது என்பது பா.ஜ.க. கருத்து. நீண்ட நாட்களாக இதனை வெளிப்படுத்தி வருகின்றோம். நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. தவிர இலங்கை இந்திய தலைவர்களுக்கிடையே (ஜே.ஆர்ராஜீவ்) கையெழுத்தான ஒரு சர்வதேச ஒப்பந்தமே மீறப்பட்டிருக்கையில் மற்றுமொரு (கச்சதீவு) ஒப்பந்தத்தை இந்தியா மீறி?ல் அது அத்துமீறல் என்று அர்த்தம் இல்லை.

கேள்வி :இலங்கை எதிர்நோக்கியுள்ள இன்றைய போர் நடவடிக்கைக்கு யார் மூல காரணம் என்று எண்ணுகிறீர்கள்?

பதில் :முழுக்க முழுக்க இலங்கை அரசுதான். விடுதலைப் புலிகள் வளர்ந்ததற்கு இலங்கை அரசுதான் காரணம். ஈழத் தமிழருக்கு சம உரிமை கொடுக்க மறுக்கும் இவர்கள், சிறுபான்மை அந்தஸ்தை அளிக்கக்கூட விரும்பவில்லை. தமிழர்களும் இலங்கைப் பிரஜைகள்தான் என்பதை ஏற்கிறார்கள் இல்லை. தனது நாட்டுப் பிரஜைகளை சமமாகக் கருதும் எண்ணம் இலங்கையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இல்லை. நியாயம் கேட்கும் தமிழருக்கு, என்ன உரிமைகளை வழங்குவோம் என்று அறிவிக்காமலேயே ஒரு தலைப்பட்ச யுத்தத்தை தொடங்கி விட்டனர். முதலில் புலிகளை ஒழிப்பது. பின்னர் தமிழருக்கு அவர்களே விரும்பும் உரிமை கொடுப்பது. இது எந்த வகையில் நியாயமானது? தமிழருக்கு வழங்கும் உரிமைகளை முதலில் அறிவிக்க வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் புலிகளை ஒழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறும் இலங்கை அரசு தமிழினப் படுகொலையே செய்கிறது. தமிழரின் மண்ணும் பறிபோகிறது.

கேள்வி : இந்தியாவின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

பதில் : இலங்கையில் இன்று மனித உரிமைகள் பகிரங்கமாக மறுக்கப்படுகிறது. இனப்படுகொலை நடக்கிறது. லட்சக் கணக்கில் ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளனர். இந்த அகதிகள் வருகை தினம் தினம் அதிகரிக்கிறது. இந்நிலையில், தலையிட உரிமை இல்லை என்று இந்தியா ஒதுங்கியிருக்கக் கூடாது. கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமல்ல. தலையிட எல்லா உரிமையும் உண்டு. தலையீடு என்பது எமது கோரிக்கை. தமிழருக்கு என்ன உரிமைகள் கொடுக்கப் போகிறீர்கள் என்பதை இலங்கையை அறிவிக்கச் செய்ய வேண்டும். அதேநேரம் அந்த அறிவிப்பை மட்டும் ஏற்று ஏமாறிவிடக்கூடாது. நடுநிலை என்று கூறிக்கொண்டு இலங்கைக்கு பணம் மற்றும் இராணுவ உதவி செய்வது கொடுமையானது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, பாதுகாப்புக்கென அளிக்கும் ஆயுதங்கள் இந்தியா மீதே திருப்பப்படுகிறது. இலங்கைக்கு எதிரி நாடுகள் எதுவும் இல்லை. இலங்கைக்கு இந்தியா அளிக்கும் பணம் அடுத்த நிமிடமே ஆயுதங்களாக வாங்கப்பட்டு அங்குள்ள தமிழர்கள் மீதுதான் ஏவப்படுகிறது. இந்த அணுகுமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

கேள்வி : ஈழத் தமிழர்களை இலங்கையராக சிங்கள அரசு கருதவில்லை. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா கூட அன்று பல தடவைகள் "இங்குள்ள தமிழர்கள் எந்த நேரத்திலும் இந்தியாவோடு சேர்ந்து விடுவார்கள்' என்று அச்சம் தெரிவித்தது இன்றைய நாட்டு நிலைமைக்கு சரியான கருத்தாகத் தெரிகிறது. அதேநேரம், ஈழத் தமிழரை ஒரு அங்கமாக ஏற்க இந்தியா தயாரில்லையே?

பதில் : இலங்கை வாழ் தமிழர்களுக்கு உரிமைகள் வழங்க மனமில்லாதவர்கள் சொல்கின்ற வாதம் இது. இந்தியாவிலிருந்து பிரிந்த ஒரு பகுதிதான் இலங்கை. தமிழர் பூர்வீகக் குடிகள். இரு நாடுகளினது தமிழர்களின் பண்பாடு ஒத்துப்போகிறது. அரசியல், நிர்வாக உறவுகள் வேறு. பண்பாட்டு, தொப்புள் உறவு வேறு. இந்த உறவுதான் நீடிக்கும். இலங்கையில் இந்து ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டு பௌத்த விகாரைகள் எழும்புகின்றன. சிங்கள அரசு பூச்சாண்டி காட்டுகிறது. ஈழத் தமிழரின் அச்சம் தேவையற்றது.

கேள்வி : நான்கு மாதத்தில் நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால்,இலங்கை தமிழர் பிரச்சினையை எவ்விதம் அணுகுவீர்கள்?

பதில் : பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இலங்கை தமிழர் பிரச்சினை தீர்த்துவைக்கப்படும் என்பதை நிச்சயமாக சொல்கின்றேன். ஆனால், எப்படி என்று இப்போது கூறமுடியாது. ஈழத் தமிழருக்கு சம உரிமை என்பது அவர்களது பிறப்புரிமை. ஆகக் கூடியது ஆறுமாத காலத்துக்குள் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டு இங்கு வந்த அகதிகள் தந்திரமாக, கௌரவமாக தாயகம் திரும்பி முகமாக வாழச்செய்வோம். நாங்கள் உங்களுடன் இருக்கின்??ம். பண்பாட்டு ரீதியில் ஒன்று பட்டுள்ளோம். தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடுங்கள். ஆண்டவனும் உதவுவார். தேசிய சிந்தனையில் ஒன்றுபட்டவர்கள், உணர்வுள்ளவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். ஈழத் தமிழருக்கு நல்ல முடிவு, விடிவு நிச்சயம் ஏற்படும்.


நன்றி: தினக்குரல்

இது தமிழக அரசியல் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்து பின்னர் ஈழப் பிரச்சனையை மறந்துவிடும் தந்திரமா அல்லது உளபூர்வமாக சொல்கிறார்களா என்பது அவர்கள் வணங்கும் இறைவனுக்கே வெளிச்சம். எனென்றால் இதுவரை ஈழப் பிரச்சனையை பெரிய அளவில் நாடாளுமன்றத்தில் பா.ச.க வோ அதன் தலைவர் அத்வானியோ எழுப்பி யாரும் கண்டதில்லை. இப்போது அவர்கள் மாறியிருந்தால்!? என்ன செய்கிறார்கள் என்று தான் பார்ப்போமே?

தொடையையும் கிள்ளி விட்டு தொட்டியையும் ஆட்டும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஈழ மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யும் என்று இன்னும் எதிர் பார்க்கிறீர்களா? நம்புகிறீர்களா?

Sunday, January 18, 2009

திருமாவும், வெறுமாவும்

தமிழீழம்



மரணிக்கும்


இறுதி கணத்தில் கூட


தன் வாழ்நாளில்


ஒவ்வொரு கணமும்


மடியில் சுமந்து வந்த


நெருப்பை


இறக்கி வைக்கக் கூட


இடைவெளி இல்லாமல்


ஓர் இனம் இங்கு


இறந்த


காலமாகிக் கொண்டிருக்கிறது.




திருமா



திருமா, உந்தன் உணர்வுகள், வரலாற்றில், சந்ததிகளுக்குப் பாடம்


வெறுமா (விருமா)




இதற்கு விளக்கம் தேவையில்லை


உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்.

Wednesday, January 14, 2009

வன்னி மக்களை எண்ணி 3

வன்னி மக்களை எண்ணி 3

புலம் பெயர்ந்து வாழும் மக்கள்

தங்கள் புண்ணிய பூமிக்குப்

போக முடியாத நிலையில்

நிலம் பெயர்ந்த மக்களை நினைத்து

நிம்மதி இழந்து தவிக்கும்

தாய்த் தமிழகத்து

ஆற்றாமைத் தமிழன் விடும்

கண்ணீரின் வெப்பம் சூடாகிக்

கனன்று கொண்டிருக்கிறது.

வன்னி மக்களை எண்ணி 2

வன்னி மக்களை எண்ணி 2

வெளிக்கிட்ட காலம் எல்லாம்

மலையேறிப் போய் விட்டது

வெளியே கிடப்பவர்களுக்கு

இழந்த வீடு கிடைக்க வேண்டுமே

வெளிக்கிட.

வன்னி மக்களை எண்ணி

வன்னி மக்களை எண்ணி

எல்லோருக்கும் எப்போவாவது சுற்றுலா

சுற்றிப் பார்த்து மகிழ்கிறார்கள்

எங்களுக்குத் தினமும் சுற்றுலா

நாங்கள் சுற்றுவது மட்டும்தான்

எதையும் பார்த்தது கிடையாது

எங்கட கண் மணிகளைத் தான்

விழி நீர் மறைத்து விட்டதே.

Monday, January 12, 2009

அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்!

அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்!

போகியில் தீயன போகி
யோகமும் போகமும் பொங்க

இல்லம் புதுப்பிப்பு
இரவல் பொருள் திருப்பி ஒப்படைப்பு

வசதிக்காரர் வீட்டில்
வண்ண வண்ண சாயங்களும்
வகை வகையான பொருட்களும்

நடுத்தர குடும்பம்
நமக்கு வெள்ளை மட்டும் தான்
நகை போதும் புன்னகை

ஏழை மக்கள்
ஏங்கி மொழுகினார் சாணத்தால்
ஏற்றம் வரும் என நம்பி

மதுக்கூர் சந்தையிலே
மஞ்சள் கொத்து,
வாழைத்தார்கள்
வகைவகையாய்
செங்கரும்பு வாங்கி
செழிக்க வைப்போம் -நம்
செவ்வேர் விவசாயியை

வறுத்தெடுக்க வாளை மீனும்
வகை வகையாய் காய்கறியும்

வண்ண வண்ண கொம்புச்சாயம்
வசீகரிக்கும் நெத்திசுட்டி

சின்ன சின்ன இதழ் தொடுத்த
சிங்கார மாட்டு மாலை

தேடித் தேடி வாங்கி வந்து
தேக்கி வைத்த நன்றிதனை
தெவிட்டத் தெவிட்ட தந்திடுவோம்

அதிகாலை பொங்கலன்று விழித்து
வீட்டை சுத்தம் செய்து கழுவி
விதவிதமாய் கோலங்களால் தழுவி
மங்கையர்கள் மகிழ்ந்து மகிழ்ந்து உலவி
மற்றவர்கள் இல்லங்களில் போய்
மகிழ்ந்து மகிழ்ந்து
கோலங்களைப் பார்ப்பர்
கூடிப் பேசி குதூகளிப்பர்.

சரியான நேரத்தில்
சரமாக கோடு திறந்து
தளமேடை அமைத்து
சாணத்திலே அருகம்புல் பிள்ளையார்
கிழக்குப்பக்கம் பார்க்கவைத்து
வாழைப்பழ சீப்பும், செங்கரும்பும், மஞ்சள் கொத்தும்
வழமை போல் சர்க்கரைப்பொங்கல் வெற்றுப்பொங்கல்
பொங்கி வரும் நேரந்தனில்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலே பொலிக!!
பொங்கலே பொலிக!! -என்று
கூவிக் கூவிக் குதூகளிப்போம்

பொங்கிய பொங்கலுக்கு
மஞ்சள் கொத்தால்
மாலையிட்டு
ஞாயிறு தொழுது குடும்பத்தோடு
நன்றிக்கடன் தீர்த்துவைப்போம்.

ஆண்டிற்கு ஒருமுறை
அறுதியிட்டு கூறாவிட்டால்
அதனையும் மறந்து விடுவோமோ?

மறுநாள் மாட்டுப்பொங்கல்
மகிழ்வுடனே எதிர்பார்த்து
வருடமெலாம் திங்கும் வைக்கோலுக்கு
வசதியாய் விடைகொடுக்க
வந்தது பொங்கலென்று
வாரி வாரி அறுத்திடுவோம்
வயல்களிலே வளர்ந்த புல்லை

காலையிலிருந்து கால்நடைகளிடம்
கனிவுடனே நடந்துகொள்வோம்
களத்துமேட்டிலே நற்ப் புல்
கண்ட இடம் மேய்த்து
கானோடை ஓடை செவந்தான்,
சாமந்தி பிச்சினி ஒடப்பா
திரிகுளம் வீரையன்குளம் வண்ணார்குளம்
தண்ணீர் காட்டி குளிப்பாட்டி
வீட்டுக்கு ஓட்டிவரும் முன்னே
செங்கல் மாவில் கோலமிட்டு
மங்கையர்கள்
மகிழ்வுடனே காத்திருப்பார் வரவேற்க
குங்குமமும் இட்டிடுவார்
கோலமிடும் பொற்ச்செல்வி
சங்கதனைக் கட்டிடுவார்
சரஞ்சரமாய் வண்ண மாலையும் இட்டு
செதுக்கப்பட்ட கூரிய
கொம்புக்கு வண்ணம் தீட்டி

பெரியவன் வைரவன் வனத்தில் பெற்ற
ஈச்சை மட்டை கசங்கை
மெல்லிய சுத்தியால் இழைத்து
மாவிலை வேப்பிலை பெரண்டை
ஆவாரம்பூ கன்னிப்பூ நெல்லிக்கொத்து
மாலையாய் தொடுத்து ஒற்றைப்படையில்
மகிழ்வுடனே மாட்டுக்கு மாலையிட்டு

பொங்கிய பொங்கலை ஊட்ட
தண்ணீர் நல்லெண்ணெய் அரப்பிட்டு
தண்ணீரிட்டு கழுவி
பொங்கலூட்டி வாய் கழுவி
தாரை தப்பட்டையோடு
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலே பொலிக!
பொங்கலே பொலிக!! -என்று
போற்றிடுவோம் மாடுகளை என்றும்...

திட்டியதை சுற்றியும் போட்டு
மாட்டை தாண்டவிட்டு
கட்டிடுவோம் புது அச்சில்
கொட்டிடுவோம் புல்லதனை
தெவிட்டத் தெவிட்ட

பசியறியா விரதம் இன்று
விருந்தினரை உபசரித்து -பின்
பசியாறி விருந்தோம்பல் போற்றிடுவோம்

கண்ணுப் பொங்கலை
காணும்பொங்கலாய்
கன்னிப் பொங்கலாய்
கவின்மிகு கலைநிகழ்ச்சிகளும்
களித்திடுவோம் பிள்ளைகள் விளையாடக் கண்டு
காத்திடுவோம் தமிழர் பண்பாடு என்றும்...


அன்புடன் ஜோதிபாரதி


நன்றி
வார்ப்பு
பதிவுகள்
திண்ணை
கீற்று

Sunday, January 11, 2009

பாட்டாம் பூச்சி விருதுகள் அறிவிப்பு

கிராமத்து பனம்பழத்திலும் வண்ணத்துப் பூச்சிகளை வகை வகையாய் ரசிச்சவனுக்கு பட்டாம் பூச்சி எனும் பகட்டான விருது கொடுத்து வீழ்த்திய பாசத்திற்குரிய எம் ஈழத்து இளவல் டொன்"லீ" தயாளன் அவகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பின் உருவான, அமைதியைக் குடிகொண்டு நகைச்சுவை நாதம் இசைக்கும் இளவல் தயாளன், சிங்கை வாழ் சக பதிவர்களின் அன்பிற்குரியவர். அவருடைய வலைப்பூவின் தலைப்பு கொஞ்சம் சோகத்தின் குறிப்புணர்த்தினாலும், அதன் விளக்கம் என்னவோ நகைச்சுவையை நயமாகக் கொண்டு வருகிறது.

பாட்டாம்பூச்சியின் சட்ட திட்டப் படி மூன்று பேருக்கு வழங்க வேண்டும் என்கிற மிகப் பெரிய பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் மார்கெட்டிங் துறை நலிவடைந்து வருகிறது. பொருளாதாரப் பிரச்சனையை நாமெல்லாம் சந்தித்துக் கொண்டு வரும் இந்த கால கட்டத்தில் என்னிடம், ஒரு மல்டி லெவல் மார்கெட்டிங் வேலையையும் கொடுத்து அதைத் திறம்பட செய்ய வேண்டும் என்றும் பணித்திருக்கிறார். ஏற்கனவே இதை ஒத்த வேலையை நான் செய்திருப்பதால் அது எனக்கு பக்க பலமாக இருந்து உதவி செய்யும் என்று கருதுகிறேன்.

பட்டாம் பூச்சி விருதுக்கு நான் தேர்ந்தடுக்கும் மூன்று பட்டாம்பூச்சிப் பதிவர்களை அகர வரிசையிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

அ) அகரம்.அமுதா : அழகான பெண் அல்ல, ஆண், அரிச்சுவடிகளை அலசி எடுப்பவர். வெள்ளந்தி வெண்பாவுடன் வெளிக்கிட்டுக் கொண்டிருப்பவர், வெண்பா எழுதும் நண்பா என்று இவரை அழைக்கலாம், பழக இனிமையானவர். வெண்பா பாடங்களும் நடத்துகிறார். இவருடைய வலைத் தோட்டத்தில் நாமும் மேயலாமே!

ஆ) வடுவூர் குமார் : கட்டுமானத்துறை வல்லுநர், சிங்கையில் இருந்து அமீரகம் சென்றிருப்பவர். தனது வாசிப்பு அனுபவங்களை வலை உலகுடன் இனிதே பகிர்பவர். பிரபலமான பதிவர்கள் எல்லாம் ஆரம்ப காலத்தில் இவரால் ஊக்குவிக்கப் பட்டவர்கள் என்றறிந்து மகிழ்கிறேன்.

இ) நிஜமா நல்லவன் : கவிதைகளில் ஈடுபாடு உள்ளவர். பின்னூட்டங்களில் பின்னி பெடலெடுப்பார் என்று மட்டும் தெரிந்தால் ஏமாந்து போக வேண்டியதுதான். தலையெழுத்தை விட கையெழுத்தை நம்புபவர். அரசியல் காமெடிகளை வெளிக்காட்டாமல் வெறுப்பவர்.

இவர்களும் தொடர் விதிமுறைப்படி
1) பட்டாம் பூச்சியை தங்கள் வலைப்பதிவில் இணைக்கவேண்டும்.
2) தங்களுக்கு விருது தந்த அந்த நல்லவர்(களி)ன் முகவரியை இணைக்க வேண்டும்.

3) 3 பதிவர்களை முன்மொழியவேண்டும்
4) அவர்களுக்கு உங்கள் பதிவில் இணைப்பு கொடுக்கப்படவேண்டும்.

5) அவர்களில் பதிவுகளில் இந்தச் செய்தியை தெரிவிக்க வேண்டும்.

பட்டாம் பூச்சி தொடர்ந்து சிறகடித்து பறக்கட்டும்.

Saturday, January 10, 2009

இஞ்சி தின்ன குரங்கு - கொஞ்சம் நகைச்சு"வை"

இஞ்சி தின்ன குரங்கு - கொஞ்சம் நகைச்சு"வை"

அத்திவெட்டி அலசலில் அத்தி(அத்து மீறி) வெட்டியாக அலசிப் பார்த்ததில் மகிழ்ச்சியை விட மன வேதனை தான் அதிகம் அகப்பட்டது என்றாலும், டேக் இட் ஈசி பாலிசி என்ற கவிப்பேரரசின் கண்ணியமான வார்த்தை விளையாட்டுக்களால் ஈர்க்கப் பட்டு நாமும் அவ்வாறு எடுத்துக் கொண்டோம். பெற்ற வேதனையை வித்துவிடலாம் என்று நினைத்து, வித்தாக்கிக் கொண்டிருக்கிறேன்


இருப்பினும் பொன்னகைகளின் விலை ஹைட்ரஜன் பலூன் போலும், அண்ணாமலை சைக்கிள் போலும் ரெக்கை கட்டிப் பறப்பதால் எட்டிப் பிடிக்க முயற்சி செய்து ஏமாந்து போவதை விட கொஞ்சம் புன்னகையை  முகத்தில் தேடலாம் என்று நினைக்கிறேன். வருகின்ற சிரிப்பை வக்கணையாக மறைத்து வைக்காமல் தோரணையாக வெள்ளிக் காசுகளை(தங்கக் காசுகளை இனி கனவுலதான் பார்க்க முடியும்) அள்ளி வீசியது போல் வீசி எறியும் படி விழைகிறேன். அப்படியும் சிரிக்க முடியாத பட்சத்தில் பின்னூட்டதில் நகைச்சு"வை"ங்கோ! நன்றி!!



ராமு: இப்போ சொல்றது அடுத்த நிமிடம் மறந்து போகுது டாக்டர்.


டாக்டர்: அப்படியா... எத்தனை நாளா இருக்குது இந்த வியாதி?

ராமு: எந்த வியாதி டாக்டர்?

********************************************************************************

டீச்சர்: சாப்பிடுறத்துக்கு முன்னாடி எல்லாரும் நல்லா பிரார்த்தனை பண்ணிக்குங்க!


மாணவி: இல்லை டீச்சர் எங்கம்மா நல்லா சமைப்பாங்க!

********************************************************************************

டாக்டர்: இதோ உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப் போறேன். அப்புறம் நான் என்ன பண்ணினாலும் உங்களுக்குத் தெரியாது!


நோயாளி: அப்படியா! கொஞ்சம் இருங்க டாக்டர், என்னோட பையில இருக்கிற பணத்தை எண்ணி வச்சுக்கறேன்!

********************************************************************************

குப்பு: கல்யாண வீட்டில் வெடிகுண்டு வெச்சுட்டாங்கன்னு சொல்றேன். இப்படி சாதாரணமா நிக்கிறீங்க?


பெண்ணின் தந்தை: சும்மா கத்தாதீங்க! சாப்பாடு எல்லார்க்கும் பத்தாது போலிருந்தது. கூட்டத்தைக் கலைக்க நான் தான் அப்படி ஒரு புரளியைக் கிளப்பி விட்டேன்.

********************************************************************************

வினோத்: டேய், அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் மறக்காம வந்திடு!


பிரேம்: கண்டிப்பா, உனக்கு ஒரு ஆபத்துன்னா நான் வர மாட்டேனா?

********************************************************************************

கணவன்: கமலா! பாத்தியா நம்ம பையனுக்கு என்னோட மூளை!


மனைவி: அதான் தெரியுதே! நல்லவேளை என்னோட மூளை எங்கிட்டத்தான் இருக்கு!

********************************************************************************

சோமு: ரெண்டு காதுகள்லயும் கட்டு போட்டிருக்கியே என்னாச்சு?

ராமு: அதை ஏன் கேட்கிறே? துணியை இஸ்திரி பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ செல்போன் அடிச்சது. ஞாபக மறதியா இஸ்திரிப் பெட்டியைக் காதுல எடுத்து வைச்சுட்டேன்.

சோமு: ஒரு காதில சரி, அடுத்த காதில் எப்படி புண்ணாச்சு?

ராமு: டாக்டருக்கு போன் பண்ண முயற்சி செய்தேன்.

*********************************************************************************

Friday, January 9, 2009

கிளிநொச்சி கன்றுக்குட்டி

கிளிநொச்சி கன்றுக்குட்டி


அம்மா அன்பே அலறுகிறேன்

ஒரு குருவியைக் கூட காணோம்

தேடித்தேடிப் பார்த்தேன்

தேம்பித் தவித்ததுதான் மிச்சம்



வான ஊர்திகளில் வல்லூறுகள்

வட்டமிட்டு வதைக்கின்றன

எஞ்சோட்டு கன்றுக்குட்டி எல்லாம்

எங்கேன்னு தெரியலையே

என் தாயைக் காணலையே

ஏங்கித் தவிக்கிறேனே



கழுகுகள் வட்டமிடும்

கழனித் தொட்டி கிட்டே

கவிழ்ந்து கிடப்பது என்தாயோ

காலன் வந்தானோ

களித்துக் கொன்றானோ

முகமே தெரியலையே

மூச்சடைச்சு நிற்கிறேனே

அடையாளம் தெரியாம

அலைஞ்சு திரிஞ்சேனே



எறிகணை பீரங்கி

இடிபட்ட இல்லங்கள்

என்று செப்பனிட்டு

எம் ஏக்கங்கள் தீர்ப்பாரோ

கல்லறைக் காவியங்களை

கயவர்கள் அழிப்பாரோ

எள்ளல் எண்ணத்துடன்

ஏவி விட்டு அலைகின்றார்

துள்ளல் மனதுடனே

துயரக் கொடி ஏற்றுகின்றார்

சிங்கம் என்று சொல்லி

சீறிப் பாய்கின்றார்



ஊர் கண்ணு பட்டதோ

உறவுகளைக் காணோமே

எங்கு சென்றீர் என்னை விட்டு

ஏங்குகிறேன் இளம் கன்று

சத்தம் குறைகிறது

சலனமற்றிருக்கிறது

முல்லைத் தீவுப் பக்கம்

முழக்கமாக் கேட்கிறது

என்னே நான் செய்ய

வறட்டு கௌரவத்தை

வளைச்சுச் பிடிச்சு நிக்கும்

வல்லுறவு கூட்டத்திலே

வகையா மாட்டிக்கிட்டேன் -எனை

வந்தழைப்பார் யார் உளரோ?



Thursday, January 8, 2009

பிரணாப் முகர்ஜி வருகையை ஆதரிக்கும் ரணில், ஆனால்......!

இவர் சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. இவருக்கும் இரண்டு முகம் உண்டு

புராணத்துக்கும் இலங்கைக்கும் தொடர்பு உண்டுதான், அதுக்காக இப்படியா கும்பகர்ணன் மாதிரி

இதற்கிடையே தேர்தல் பணியில் முதல்வரின் மகன்கள் மற்றும் பேரன், மதுரை திருமங்கலத்தில்!

நெருப்பாற்றில் நீந்தி வந்த பிரதமருடன் முதல்வர்!
இவரைத் தள்ளிவிட ரிக்கி பாண்டிங் ஒருவரால் தான் முடியும். தயவு செய்து அவரை அழையுங்களேன்!

பிரணாப் முகர்ஜி இலங்கை செல்கிறார் - நம்புங்கள் நாராயணனை இந்தவாரம் இதுதான்

வெளிநாட்டு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக வெள்ள நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் மாளிகையில், முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..முதல்வர் கருணாநிதி நேற்று இரவு ஆளுநர் மாளிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

இறுதியாக, இலங்கைப் பிரச்சினை குறித்து எடுத்துக் கூறி மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டவாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எப்போது இலங்கைக்கு செல்கிறார் என்பது பற்றியும், இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்தும் கருணாநிதி எடுத்துக் கூறினார்.முதல்வர் கருணாநிதியின் உணர்வைப் புரிந்து கொள்வதாகவும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக பிரணாப் முகர்ஜியை அனுப்பி வைப்பதாகவும் முதல்வர் கருணாநிதியிடம் உறுதி அளித்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.நிவாரண நிதி ...இதுதவிர வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1000 கோடியை தமிழகத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்தார்.விவசாயக் கடன் தள்ளுபடியால் ஏற்பட்ட மாநில அரசின் இழப்பை சரி கட்ட, 3 ஆயிரத்து 187 கோடியே 40 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அப்போது கோரிக்கை விடுத்தார்.அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தர வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை வைத்தார்.
நன்றி: தட்ஸ்தமிழ்

பிரணாப் முகர்ஜி இலங்கை செல்கிறார் - நம்புங்கள் நாராயணனை இந்தவாரம் இதுதான்

Wednesday, January 7, 2009

இந்தியாவில் யாருக்கு முதல் மரியாதை!

இந்தியாவில் யாருக்கு முதல் மரியாதை!
                                            போட்டிக்குப் பின் நட்சத்திர விடுதிக்குச் செல்லும் கிரிக்கெட் வீரர்கள்

இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான் என்கிற நிலைமை, வெள்ளைக் காரர்கள் நம் தலையில் கட்டிவைத்ததை அப்படியே பிடித்துக் கொண்டோம். உலகப் புகழ் பெற்ற விளையாட்டான கால்ப் பந்து  விளையாட்டு மிகவும் பின் தங்கிய நிலையில் தான் இன்றளவும் இருக்கிறது. காரணம் அதற்கான ஆதரவு, ஊக்குவிப்பு எதுவும் மத்திய மாநில அரசாங்கத்திடம் இருந்து கிடைக்காது, இருக்கும் வெகு சில கிளப் -களும் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றன. விளையாடுவதற்கு ஒரு தரமான விளையாட்டரங்கு அல்லது விளையாட்டு மைதானம் கிடையாது.

                                                          வெற்றிக்குப் பின் வெற்றி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில்

ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் இந்தியா சிறந்து விளங்கிய போதிலும், அங்கும் இவர்களின் அரசியல் சித்து விளையாட்டுக்கள் அரங்கேறுகின்றன. திறமையானவர்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். இது ஹாக்கி விளையாட்டுக்கு விடப்பட்ட சாபம் அல்ல. எல்லா விளையாட்டுக்களிலும் விளையாடுபவர்கள் என்னவோ அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கங்களும் தானே.

இந்தியா போன்ற ஏழை நாடுகளில்(யாரும் கோவிப்பவர்கள் இருந்தால் வளரும் நாட்டில் என்று எடுத்துக் கொள்ளலாம்) பணக்கார விளையாட்டான, கிரிக்கெட்டை எவ்வாறு வெள்ளைக்காரர்கள் பிரபலப் படுத்தி விட்டு போனார்களோ அதே போல் பிலிப்பைன்ஸ் நாட்டில் கூடைப் பந்தை அவர்கள் தலையில் கட்டிவிட்டு சென்று விட்டார்கள்.

வளரும் நாடுகளில், அரசியல் தலையீடு, விளையாட்டை ஊக்குவிக்காத மந்தநிலை, தேவையான மைதானங்கள் இல்லாமை, அரசாங்கங்களுக்கு அதைப் பற்றிய கவலை இன்மை போன்றவைகளால் மற்ற பிரபலமான விளையாட்டுக்கள் காலப் போக்கில் மறக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை, பிரதமருக்கு அடுத்தார் போல் அதிக அதிகாரங்களைக் கொண்டவர்களாக அனைவரும் பார்ப்பதை நாமும் வேடிக்கையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பத்து போட்டிகளில் தொடர்ந்து பூச்சியம் அடித்தாலும் கிரிக்கெட் வீரர்கள், பகட்டாகப் பவனி வர முடிகிறது. கிரிக்கெட் விளையாட்டில் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைவார், அதனால் ஸ்ரீசாந்தின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய வீரரை திட்டுவார், அதனால் எந்த உயிர்ச் சேதமும் இல்லை. பரிசு வழங்கும் போது ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர், மத்திய அமைச்சர் சரத்பவாரை பிடித்து தள்ளி விட்டு விட்டு போட்டோவிற்கு போஸ் கொடுப்பார்(ஓர் ஆஸ்திரேலிய அமைச்சரை இந்திய வீரர் தள்ளி விட்டு விட்டு இந்தியா வந்து சேரமுடியுமா?) அதனால் அவருக்கு எந்த உயிர் உடல் சேதமும் இல்லை.


இது போன்ற சில விரும்பத் தகாத விடயங்கள் நிகழ்ந்தேறினாலும், கிரிக்கெட் வீரர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டுதான் ஆடுகிறோம். விளையாட்டில் பூஜ்ஜியம் அடித்தாலும் விளம்பரத்தில் ராஜ்ஜியம் அமைத்துக் கொண்டிருப்பவர்கலாயிற்றே. அவர்களுக்கு பகட்டான விமானம், அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து. ராஜ மரியாதை. எல்லாம் செய்யலாம். தவறில்லை. ஆனால், நிற்க!
 
 
 
















தீவிரவாதிகளிடம் தாஜ் நட்சத்திர விடுதியில் சிக்கியவர்களை உயிரை பணையம் வைத்து மீட்ட கமாண்டோக்கள் தங்குமிடம் செல்கிறார்கள்

சமீபத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் மும்பையில்(வெளிநாட்டுக் காரனுக்கு புதுதில்லி எங்கே இருக்குன்னு கேட்டா பேந்த பேந்த விழிப்பான், ஆனால் மும்பை எங்கே இருக்குன்னா உடனே யா! பாலிவுட்!! இந்தியா!!! அப்படின்னு ஆரம்பிச்சுடுவான்) நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தங்களது உயிரைப் பணயம் வைத்து தாஜ் ஹோட்டலில் தீவிர வாதிகளிடம் சண்டையிட்டு அதில் சிலர் தங்கள் இன்னுயிரையும் நீத்து, அந்த ஹோட்டலில் இருந்த அப்பாவி மக்களை மீட்ட என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் எவ்வாறு மதிக்கப் படுகிறார்கள். அவர்கள் இந்த மும்பை தாஜ் ஹோட்டல் ஆப்பரேஷனை முடித்து விட்டு களைத்து பேருந்தில் செல்வதை, கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டை முடித்துவிட்டு(வெற்றியா தோல்வியா என்றெல்லாம் கேட்கக்கூடாது) பேருந்தில் செல்வதோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது கொஞ்சம் வேதனையாகத் தான் இருந்தது.

பெரும்பாலும் தேசிய பாதுகாப்புக் கமாண்டோக்கள் அரசியல் வாதிகளில் காருக்குப் பக்கத்தில் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களை எப்படி ஊக்கு விக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் கமாண்டோக்களை எப்படி நடத்துகின்றன என்று அந்த நாடுகளிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

அதை விடுத்து இந்தியா ஒளிர்கிறது, இந்தியா முன்னேறிய நாடாகிக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் கூக்குரலிட்டால் எந்த உலக நாடும் இந்த கூக்குரலை செவி மடுப்பதாக இல்லை. எந்த கட்டமைப்பும் இல்லை, முன்னேறிய கணினி மென்பொருள் துறையையும் ஒழுங்காகத் தக்கவைக்க இயலவில்லை. முன்னேறும் நாடுகளைப் பாருங்கள் அவர்கள் விளையாட்டில் அதிக பதக்கங்களைப் பெறுவதைக் கண்கூடாகப் பார்க்கமுடியும்.(உதாரணத்திற்கு சீனா, ஆஸ்திரேலியா) அதற்கான அறிகுறியே இங்கு தெரியவில்லையே.
 
கட்டுகிற வீட்டிற்கு அடித்தளத்தை ஒழுங்காகப் போடுங்கள், அதை ஒழுங்காகப் போடாமல் விட்டு விட்டு, வீட்டில் வைக்கும் அழகுப் பொருட்களைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டால் வேடிக்கையாகத் தானே இருக்கும்.

Friday, January 2, 2009

வீழ்ந்தது கிளிநொச்சி மட்டுமல்ல தமிழினத் தலைவரும் தான்!

வீழ்ந்தது கிளிநொச்சி மட்டுமல்ல தமிழினத் தலைவரும் தான்!


ஈழத்தின் மீது சிறிலங்க இராணுவத்தின் தொடர் தாக்குதல், விமானங்களின் குண்டுமழை,கடற்ப்படைகளின் கவிழ்ப்புக் கண், அதற்கு இந்திய கடற்ப்படையின் ஒத்துழைப்பு. இந்திய உளவுத்துறையின் உதவி, இந்தியா,பாகிஸ்தான்,சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆயுதங்கள், இந்திய இராணுவ தொழில் நுட்பவியலாளர்களின் ராடார் மற்றும் அதி நவீன கருவிகளின் கழுகுக் கண், இந்திய இராணுவ தொழில் நுட்ப வல்லுனர்களின் மேலான ஆலோசனைகள். எப்படித்தாக்குவது, எப்படி முறியடிப்பது, இந்திய இராணுவ அதிகாரிகளின் சிங்கள இராணுவத் திறன் ஆய்வு, இலக்கு நிர்ணயம்(Target), நேர கால அவதானிப்பு(Timeframe)..................,

இதற்கிடையே இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தின் முதல் அமைச்சர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் இந்திய மத்திய அரசுக்கான அறைகூவல்(ஜெயலலிதா மற்றும் தா.பாண்டியன் உதிர்த்த முத்துக்களைத் தொடர்ந்து தமிழ் சொத்து என்னுடையது என்ற நோக்குடன்), இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும், இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி செய்யக் கூடாது, அப்படி செய்தால் தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள்,

தமிழினத் தலைவர் விதித்த கெடு முடிவதற்குள், மத்திய அரசின் மன நிலை தெரிவதற்குள், முதல் ராஜினாமா கடிதம் கனிமொழி கருணாநிதியிடம் இருந்து பெற்றுக் கொள்ளப் படுகிறது. கனிமொழியோடு பதவி ஏற்றுக் கொண்ட இன்னொரு ராஜ்யசபா எம்பியான திருச்சி சிவாவிடமிருந்து வாங்கப் படவில்லை, இரண்டு மூன்று நாட்கள் கனிமொழி ராஜினாமாவை பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. தமிழினத் தலைவரின் மகளுக்கு எவ்வளவு தியாக உணர்வு, சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார், மற்ற திமுக எம்பிக்கள் பின்னர் ராஜினாமா கடிதம் கொடுத்தது கடலில் கரைத்த பெருங்காயம், இதற்கிடையில் இலங்கை அரசின் ஆலோசகர் (மகிந்தையின் தம்பி) தில்லி வருகை, சந்திப்புகள்


தமிழினத் தலைவர் விதித்த கெடு முடிகிறது(அதாவது நீலிக் கண்ணீர் விட்டாயிற்று). அப்போது கண் துடைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லவா, அதற்காக வந்தவர்தான் பிரணாப் முகர்ஜி, வந்தவர் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அதற்குப் பரிகாரமாக மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம், மத்திய அரசுக்கு எங்களால் எந்த ஆபத்தும் வராது போன்ற உத்திரவாதங்களை தமிழினத் தலைவரிடமிருந்து பெற்றுச் செல்கிறார், மற்ற கட்சித் தலைவர்களை கலந்தாலோசிக்கவில்லை, தமிழ் இன உணர்வாளர்களின் நெருக்கடி தொடர்கிறது, தமிழினத் தலைவர் ஈழத்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவோம் என்கிறார், வழங்கப்பட்டது, அதில் கொஞ்சம் இலங்கை இராணுவத்தால் சேதப் படுத்தப் பட்டது. மனிதச் சங்கிலி என்றார், செய்தாகிவிட்டது, ஊருக்கு தந்தியடிங்கோ டாக்டருக்கு சொல்லிவிடுங்கோ அப்படின்னார், செய்தாகிவிட்டது.

இதற்கிடையில் இலங்கை சிங்கள அரசின் சனாதிபதி மகிந்த இராசபக்ஷே இந்தியா வருகிறார். பிரதமரைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது, இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி இந்தியப் பிரதமர் என்னிடம் எதுவும் பேசவில்லை என்று வெளிப்படையான உண்மையைச் சொல்கிறார்.


பாழாய்ப் போன தமிழ் உணர்வாளர்கள் தமிழினத் தலைவரைக் கேள்வி மேல் கேள்வி கேட்க, மீண்டும் உணர்வு பெருக்கெடுத்து கண்கள் பனித்து அனைத்துக் கட்சிகளுக்கு அழைப்பு, போர்வைகளைப் போத்திக் கொண்டு நடுவண் அமைச்சரை சந்திக்க சிறு குறு கட்சித் தலைவர்களுடன் தில்லி பயணம், நடுவண் அமைச்சரை சந்தித்து பேசுகிறார், என்ன பேசினார்? எதற்குப் பேசினார்? என்ன நடந்தது?


தமிழ் உணர்வாளர்களின் தொடர் நெருக்கடியால், இந்த சந்திப்பின் போது தமிழினத் தலைவர் பிரதம அமைச்சரிடம் வைத்த பிரதான கோரிக்கை, இந்திய வெளியுறவு அமைச்சர் பெரியவர் பிரணாப் முகர்ஜியை சிங்கள அரசாங்கத்திடன் தூதாக அனுப்ப வேண்டும் என்பது தான். என்ன அஜெண்டா என்பது அரசியல் வல்லுனர்களுக்கே வெளிச்சம். அஜெண்டா இல்லாமல் தூது செல்ல விரும்பாமல், பதிலும் சொல்லாமல் மழுப்பி விட்டார் பிரணாப் முகர்ஜி, இடையே ஓர் ஆள் விட்டார் தமிழினத் தலைவர், மசியவில்லை, அவர் என்ன சாதாரண ஆளா? இந்திரா அமைச்சரவையிலேயே இருந்தவராயிற்றே? நான்கு பிரதமர்களைப் பார்த்தவராயிற்றே! இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையே இவர்தானே ரிசர்வ் வங்கி கவர்னர் ஆக்கினார். ஆக, தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் கோரிக்கைகள் யாவும் கண்டுகொள்ளப் படவில்லை. பதில் இல்லாமல் நிராகரிக்கப் பட்டன. இவரின் குரலுக்கு, கோரிக்கைக்கு மதிப்பில்லை என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?

கிளிநொச்சி வீழும் வரை பொறுத்திருங்கள் தமிழினத் தலைவரே என்று பிரணாப் மொகர்ஜி சொல்லி இருப்பாரோ? யார் கண்டார்?

வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ஆனால் தமிழினத் தலைவர் பட்டம்!

Thursday, January 1, 2009

அத்திவெட்டி-தஞ்சை-விடுதலை-கி.வீரமணி-பூசாரி

அத்திவெட்டி, அன்றும் - இன்றும்:


1983 பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஒரு பம்பு செட் மோட்டார் திருட்டை கண்டுபிடிக்க முக்காலி சோதிடம் பார்க்கப்படுகிறது.

முடிவு, முக்காலி, பூசாரி வீட்டில் போய் நிற்கிறது. மறுநாள் ஊர்க்கூட்டம் கூட்டப்படுகிறது. பூசாரிக்கு ரூ.5,000 அபராதம் விதித்து அவரிடமிருந்து வசூலும் செய்யப்பட்டு விட்டது. இதற்கு ஒரு முடிவு காண பூசாரி மகனும், அவர் நண்பரான தி.மு.க. இளைஞர் ஒருவரும் என்னை அலுவலகத்தில் சந்தித்து, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றார்கள். காரணம், இத்திருட்டுக்கும், பூசாரி குடும்பத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது ஆகும்.

அதற்குப் பிறகு அந்தக் கிராமத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற பகுத்தறிவு விளக்க நிகழ்ச்சிகள் காரணமாக அந்தக் கிராமமே மாற்றம் பெற்றது. அவ்வூரில் இருந்து இரண்டு இளைஞர்கள் (அதிரடி அன்பழகன் மற்றும் பெரியார் செல்வன்) கழகப் பேச்சாளர்களாகவும் இரண்டு இளைஞர்கள் (ஆடலரசு மற்றும் இராஜ்குமார்) மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சியாளர்களாகவும் ஆகியுள்ளார்கள்.

மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியான முதுகில் அலகு குத்தி கார் இழுத்தல், தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், அரிவாள்மீது ஏறுதல், நாக்கில் சூடம் ஏற்றுதல் ஆகியவற்றை தோழர் வீரையன் பொறுப்பேற்று நாடெங்கும் நடத்திக் கொண்டு வருகிறார்.

இன்று அந்தக் கிராமமே கழகக் கொள்கைக் கூடாரமாக விளங்குகிறது. அந்த பூசாரி மகன் தான் தோழர் வீரையன் அந்த திமுக இளைஞர்தான் அதிரடி அன்பழகன் அந்த ராஜ்குமார்தான் இன்றும் ஊ.ம. தலைவர்.

உரத்தநாடு ஒன்றியம் - அன்றும் - இன்றும்:

1988 ஜனவரி முதல் ஆகஸ்டு வரை நடைபெற்ற 242 கிராமப் பிரச்சாரக் கூட்டங்களில் 22 கூட்டங்கள் உரத்தநாடு ஒன்றியத்தில் நடத்தப்பட்டன. பகுத்தறிவு விளக்கம் தரும் விதத்தில் புதிய பேச்சாளர்கள் கொண்டு பகுத்தறிவுப் பாடல்கள், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி, அறிவு விளக்க சொற்பொழிவுகள், கொள்கைச் சார்ந்த திரைப்படங்கள் கிராமங்கள் தோறும் நடத்தியதன் விளைவாக, ஏராளமான இளைஞர்கள் இயக்கத்தின்பால் வந்தார்கள். அவர்களை தக்கவண்ணம் அடையாளம் கண்டு இயக்கத்தில் இணைத்து உரத்தநாட்டை பெரியார் நாடாக்கிய பெருமை தோழர்கள் முகிலன், குணசேகரன் ஆகியோரைச் சேர்ந்தது ஆகும்.

1988-இல் 22 கூட்டங்களை தோழர்கள் முகிலனும், குணசேகரனும் ஏற்பாடு செய்து கொடுத்து பயன் விளைவித்தார்கள். அக்காலக் கட்டத்தில் அந்த ஒன்றியத்தில் பன்னிரண்டு கழகப் பெரியவர்கள் மட்டுமே இருந்தார்கள்.

 தொடக்கப் பள்ளி பாடம் போல... பெரியார் கொள்கை விளக்கத்தை அய்ந்து வயது முதல் பதினைந்து வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்களும் குழந்தைப் பருவ மனோ நிலையில் உள்ள வயதான பெரியவர்களும் விளக்கம் பெறும் வகையில் ( விளம்பர நோட்டீஸ்களில் விவரம் காணவும்)

1. தீமிதி, 2. தீச்சட்டி ஏந்துதல், 3. அரிவாள்மீது ஏறுதல், 4. கையில் - நாக்கில் சூடம் கொளுத்துதல், 5. மந்திரமா? தந்திரமா?, 6. வீதி நாடகம் நிகழ்ச்சிகள் நடத்த 7 பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.


பட்டுக்கோட்டை அன்றும் - இன்றும்

பகுத்தறிவுக் கோட்டையாக விளங்கிய பட்டுக்கோட்டையில் இவ்வாண்டு மகாசிவராத்திரி அன்று 1,000 இருக்கைகள் கொண்ட, கோமள விலாஸ் திருமண அரங்கில் நடைபெற்ற ஜக்கிவாசுதேவ் நிகழ்ச்சியில் அரங்கில் இருந்த மூன்று கழகத்தவர் தவிர, மற்ற அனைவரும் எழுந்து நின்று சாமி ஆடினார்கள். இந்த நிகழ்வு, எனக்கு ஒரு போதி மரச் சிந்தனையைக் கொடுத்தது.

குயவர் வீட்டு பிள்ளையார் சிலை கணக்கெடுப்பும், ஜக்கி வாசுதேவ் நிகழ்வும், இவ்வாண்டு இந்நிகழ்வு நடத்த என்னைத் தூண்டியன.

இருக்கும் இடம் தேடி, என்னிடம் வந்து நாள்தோறும் அறிவுரை வழங்கும் வள்ளுவர் இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் என்ற அறிவுரைகள் என்னை சிறப்புரை துவக்க தூண்டின.

மாவீரன் அலெக்சாண்டர், அட்டில்லா, ஹன்னிஃபால் போலல் லாமல் மாறுபட்ட போர்விரன் செங்கிஷ்கான். அவன் படையெடுப்புக்கு உள்ளான நாடுகளும் - நகரங்களும், அப்படி ஒரு நாடும் - நகரமும் இருந்த அடிச்சுவடுகள்கூட இல்லாது அழித்தொழிக்கப்பட்டது போல்,  தொடக்கப் பள்ளி பாடம் போல! உயர்கல்வி பாடம் போல! அனைத்து வயது நிலையில் உள்ளோருக்கும் விளக்கம் அளித்து நிகழ்ச்சி நடத்தியதே. அத்திவெட்டி மாறியதற்கும் ஒரத்தநாடு - பெரியார் நாடாக மாறியதற்கும் காரணமாகும்.

கடந்த கால அனுபவங்களை கொண்டு பெரியாரின் 130-ஆவது பிறந்த நாள் மற்றும் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா தொடர்பாக பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றி யங்களில் உள்ள எல்லா கிராமங்களிலும், எல்லா வயதினருக்கும் கொள்கை விளக்கம் அளிக்கும் வண்ணம், நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை கழகக் கூட்டமே நடைபெறாத கிராமங்களான வளப் பிரமன்காடு - ரெட்டைவயல் - பளங்குளம் - விளாங்குளம் போன்ற பகுதிகளில் கூட்ட ஏற்பாடு செய்ய கழகப் பற்றாளர்கள் மூலம் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இத்திட்ட முறையில் நிகழ்ச்சி நடைபெறும்போது ஒவ்வொரு கிராமத்திலும் 100-க்கும் மேற்பட்ட கழகப் பற்றாளர்கள் உருவாவதைக் காண முடியும் என்பது உறுதி.


நன்றி: விடுதலை


விடுதலையில் வெளியான இந்த ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அத்திவெட்டியில் 1983-ல் இருந்து தான் திராவிடர் கழகம் வளர்ந்தது என்று வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஐம்பதுகளில் இருந்து திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின் பற்றியவர்கள், ஏராளமானவர்கள் அத்திவெட்டியில் இருந்தார்கள் இன்னும் இருக்கிறார்கள். அதை யாரும் மறுக்க முடியாது.

தி.க தலைமைக் கழக சிறப்புப் பேச்சாளர்களாக தமிழகமெங்கும் வலம் வரும் உறவுகள் திரு. அதிரடி.அன்பழகன் மற்றும் திரு.இரா.பெரியார் செல்வன், ஆருயிர் நண்பரும் தஞ்சை மாவட்ட தி.க. செயலாளருமான திரு.பெ.வீரையன், நகைச்சுவை பேச்சாளரும், பகுத்தறிவு கலை நிகழ்ச்சிகள் நடத்துபவருமான அருமை உடன்பிறப்பு ஆடலரசு, தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவரும், சமூக சேவகருமான, செயல் வீரர் திரு.இராஜ்குமார் மற்றும் சோதி ஆகியவர்கள் பெரியாரின் கொள்கைகளை இன்றளவும் மக்களிடம் சரியாகவே எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்  என்று நம்புகிறேன்.

 இவர்கள் எல்லாம் தலைஎடுத்ததற்கு பின்னர் தான் தெருக்களுக்கு அல்லது குக்கிராமங்களுக்கு பெரியார் நகர், பாவேந்தர் நகர் போன்ற பெயர் மாற்றங்கள் அத்திவெட்டியில் ஏற்பட்டன. (அதற்கு முன்னர் இருக்கும் பெயர்கள் காந்திநகர் மற்றும் அண்ணாநகர் மட்டுமே ) பெரியார் படிப்பகம் உருவானது. அதிகமான அளவில் அத்திவெட்டியில் சுயமரியாதைத் திருமணங்கள்  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. புரோகிதர் இல்லாதத் தமிழ்த் திருமணங்கள் ஐம்பதுகளில்  இருந்து நடைபெற்று வருவதும் அதில் முதல் திருமணம் எங்கள் பெரியம்மாவின் திருமணம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எனக்குத் தற்போதைய திராவிடர் கழகக் கொள்கை அல்லது நிலைப்பாட்டில் கருத்து வேறுபாடு இருந்தாலும், இந்த செய்தியைப் பற்றிய எனது கண்ணோட்டத்தைப் பதிவு செய்கிறேன்.

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை