Thursday, January 31, 2008

கள்ளியின் கண்ணீர்

கள்ளியின் கண்ணீர்

என் இதயத்தைத் திருடிவிட்டு

என்னை மறந்த

அந்தக் கள்ளியை

நினைத்து நினைத்து

என் வேதனையைக்

கள்ளிச் செடியில்

கவிதையாக எழுதினேன்

கள்ளியும் கண்ணீர் விட்டது

என்னுடன் சேர்ந்து




அன்புடன் ஜோதிபாரதி

நெஞ்சு பொறுக்குதில்லையே!

கனியிருப்ப?

வேற்று மொழியில்

பேசிக்கொண்டு வந்த

தமிழர்கள் இருவர்

இடையிடையே பேசினார்கள்

தன் தாய்த் தமிழிலும்

கெட்ட வார்த்தைகளை மட்டும்



நான் பார்த்து வேதனைப்பட்ட நிகழ்வை எழுதியிருக்கிறேன்.


அன்புடன் ஜோதிபாரதி

Monday, January 28, 2008

பேராசை

பேராசை

ஆஸ்தி உள்ளவனுக்கு

அஸ்தி கரைக்க

அகர வரிசையில்

ஆயிரம் பேர்



அன்புடன் ஜோதிபாரதி

கூண்டுக்குள் நான்

கூண்டுக்குள் நான்!

சிறகுகளை இழந்து

சிறைபட்டுப் போனேன்

குரல் இருந்தும் -நான்

கூண்டுக்கிளிதானே!



அன்புடன் ஜோதிபாரதி

நிறப்பிரிகை

நிறப்பிரிகை

கண்ணே!

நான் உறங்கும் போதும்

உன் பிம்பம் என்னுள்

நிறப்பிரிகையாய்...



அன்புடன் ஜோதிபாரதி

விட்டொழி

விட்டொழி

கணத்தைக்

கனமாக்கி

ரணமாக்கும்

கவலையை

விட்டொழி



அன்புடன் ஜோதிபாரதி

கவிதைகள் எப்படி இருக்க வேண்டும்?

கவிதைகள் எப்படி இருக்க வேண்டும்?

கடந்த சனிக்கிழமை 26.01.2008 அன்று 92-வது கவிமாலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கவிதை எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி கவிமாலை நிறுவனர் கவிஞர் திரு பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் எல்லோரையும் பகிர்ந்து கொள்ளச்சொன்னார்கள். என்னுடைய கருத்தை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

கவிதை என்பது கருவாக உருவாகி பிரசவ வேதனையுடன் சுகமாகப் பிறக்க வேண்டும். நினைத்த நேரத்தில் பிறக்கும் சிசேரியன் கூடாது. வெட்டப்படுபவைகளும் ஓட்டப்படுபவைகளும் செயற்கையாகவே அமையும்.

கவிதை என்பது ஒரு ஓவியமாக (Art) இருக்க வேண்டும். வரைபடமாக(Drawing) இருக்கக்கூடாது. Drawing என்பதற்கு ஆங்கிலத்தில் இலக்கணம்(Definition) இவ்வாறு சொல்லுவார்கள். An art of representation of an object by the systematic line. Object என்பதை கரு என்று எடுத்துக்கொண்டால், அதற்கு நிறைய வரையறைகள் வைத்துக் கொண்டால், அது அளவெடுத்து வரையும் வரைபடம் போல் ஆகி விடும். வானமே எல்லை என்பது போல் கற்பனை வளத்துடன் ஒரு கலையாக உருவாக வேண்டும்.

கவிதை எழுதும் போது, அதில் வார்த்தை விளையாட்டுக்களையும், ஜாலங்களையும், சொல்லாடல்களையும் கையாண்டால் நன்றாக இருக்கும். சிலேடையாகச் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும், சத்தம், சந்தம், எதுகை, மோனை பயன்படுத்தி இன்னும் அழகூட்டலாம். சொல்லவந்த விடயங்களைச் கவி ரசம் சொட்ட சொல்லி விட்டு, இறுதி வரிகளைப் பளிச்சென்று சொன்னால் நன்றாக இருக்கும். இடையிடையே படிப்பவர்களை சிந்திக்க வைக்கும்படி வரிகளை உருவாக்கலாம்.

கவிதைகள் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி கவிஞர் மாதங்கி எழுதிய கவிதை படிக்கக் கிடைத்தது. அதை இங்கே தருகிறேன்.

பாமரனுக்கும்
புரியாமல்
படித்தவனுக்கும்
புரியாமல்
பண்டிதனுக்கும்
புரியாமல்
படைத்தவனுக்கு
மட்டுமே
புரியும்
கவிதைகள்
வெடிக்காத
பட்டாசுகள்

எனது கருத்தும் இதேதான்.

கவிதைகள் எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும்படி அமைய வேண்டும். இல்லை என்றால் அந்தக் கவிதைகள் எந்தத் தாக்கத்தையும் உண்டாக்காமல் பயனற்றுப் போகும். வெடிக்காத பட்டாசுகளைப் போல.



அன்புடன் ஜோதிபாரதி.

முன்னுக்கு வாருங்கள்

முன்னுக்கு வாருங்கள்

என்னைப் பின்பற்றுகிறவர்களை

எனக்குப் பிடிக்காது

-கழுதை



அன்புடன் ஜோதிபாரதி

Friday, January 25, 2008

என்னை மறந்துவிட்டீர்களே?

என்னை மறந்துவிட்டீர்களே?

வேகாத வெயில்

வெந்த தணல்

தண்ணீரே இல்லை

என்னை நினைத்து

எத்தனை கூக்குரல்கள்

ஒரு மழை பெய்ததும் -ஏன்

என்னை மறந்து விட்டீர்கள்?

காவிரிப் பிரச்சனை



அன்புடன் ஜோதிபாரதி

மாசமோ மார்கழி மாசம்!

மாசமோ மார்கழி மாசம்!

பார்த்தேன் ரசித்தேன்

பசுமையானவளை

அவளுக்கு வியர்த்திருந்தது

வெண்பனியோ என்று

நினைத்துக் கொண்டேன்

நான் தொட்டவுடன்

வெட்கப்பட்டாள்

தொட்டாற் சுருங்கி



அன்புடன் ஜோதிபாரதி

Thursday, January 24, 2008

சிங்கப்பூர் - ஜுரோங் தீவு

சிங்கப்பூர் - ஜுரோங் தீவு

சிங்கை ஈன்றெடுத்தக் குழந்தை
சிங்கை இராணுவத்தின் தத்துப்பிள்ளை

மண்ணால் உருவான
மாபெரும் சமுத்திரம்

சிறப்பு அனுமதியுடன் -ஒரு
சிறிய பயணம்

கப்பல் பட்டறைகளின் கற்பனை உலகம்
கற்பனை செய்ய முடியாக் களப்பணிகள்

சாரக்கட்டுகளில் சறுக்கு விளையாட்டு
கோரம் நடக்கும் என குறி கூட தெரியாமல்

கொடிய வாயுக்களிடம்
குசலம் விசாரிப்பு

எல்லா வேலைகளும் இங்கு கிடக்கும்
எண்ணெய் தொட்டிகளும் இதில் அடக்கம்

வெல்டிங் வேலையும்
விவேக சிந்தனையும்

மின் தூக்கி இல்லா மிடுக்கான பயணம்
பாரந்தூக்கி மட்டுமே இப்போது
நம் பாரத்தை தாங்கி

எறும்புகளாய்
எம் உழைக்கும் வர்க்கம்

எண்ணிலடங்கா எண்ணெய் நிறுவனங்கள்
என்னைப் பிரமிக்க வைக்கும் எழில்

பூங்கா போன்ற காட்சி -அதற்கு
புகை மட்டுமே சாட்சி

ஓசோன் காக்கும் ஆசான் -அந்த
ஒரே நாடு சிங்கை

மாசு இல்லை இங்கு -மண்
தூசு இல்லை எங்கும்

பொருளாதாரப் பொழில் -அது
பொங்கிவரும் எழில்

விசாலமான சாலையில்
வாகனங்கள் மட்டும் காற்றுடன்
வெற்றிடத்தை மட்டும் பார்த்தேன்
வேறு யாரும் அங்கு இல்லை

தீயணைப்பு வண்டிகளின்
தியாக அணிவகுப்பு

அவசர நிலைக்கான
அயராத விழிப்பு நிலை

முதலுதவிக்கான
முன்னேற்பாடு

உழைக்கும் வர்க்கமே
உழலும் சொர்க்கமே

வந்தது நமக்கு வியர்வை -அது
தந்தது நமக்கு உயர்வை

குருதி வருமென்றாலும் -அது
இறுதி அல்லவே

உழைப்பு மட்டுமே உறுதி -நம்
உன்னத வாழ்க்கையைக் கருதி


அன்புடன் ஜோதிபாரதி

வார்ப்பு இணைய இதழ் 10.02.2008
திண்ணை இணைய இதழ் 07.02.2008
கீற்று இணைய இதழ்
தமிழ் சிஃபி சித்திரைச் சிறப்பிதழ் 2008

Wednesday, January 23, 2008

உல்லாசக் கப்பல்

உல்லாசக் கப்பல்


ஓவியமா அல்லது உண்மையா
ஒரு கணம் அசந்துவிட்டேன்

கடவுச்சீட்டுடன்
கையில் பையோடு

களிப்புடனும் -சில
கற்பனைகளுடனும்

முதல் அனுபவம்
முத்தாய்ப்பாக

நட்சத்திரக் கப்பல்
நற்பயணம்

நுழைவாயிலில்
நல்வரவு வரவேற்பு

கன்னியர்கள் காளையர்கள்
களிப்புடனே

புன்முறுவல் பூத்தார்கள்
நறுமணமும் வீச

படமெடுத்துவிட்டர்கள்
பார்க்காதபோதே

வெள்ளி நிலவு
துள்ளி வரும் நேரம்
வேகமாய் நடந்து

அறை எண் அறிந்து
அழகாய் திறந்தமர்ந்து
அளவளாவினோம்
நிகழ்ச்சிநிரல் கையேட்டுடன்

வழுக்கும் கண்ணாடி
வழவழக்கும் மெத்தை
வண்ண வண்ணத் தரை விரிப்பு

பகட்டை ரசிக்கும் போதே
பயணம் தொடங்கியது தெரியவில்லை

உணவுக்கு ஓரிடமா ஈரிடமா?
நாம் விரும்பும் இந்திய உணவு
நமக்கு பிடிக்கும் சீன உணவு
நமது சாயலில் மலேசிய உணவு
மெச்சும் படி மேற்கத்திய உணவு
சத்துள்ள ஜப்பானிய உணவு

உலகமே இங்கு பணியில்
ஒவ்வொரு நாட்டவரும்
ஒரு தொனியில்

கரீபியன் பாடகர்களின்
கவின் மிகு கானங்களும்

ஆஸ்திரேலிய அழகிகளின்
அரங்கம் நிறை ஆட்டங்களும்

குதிரைப் பந்தையங்களும்
குதூகலங்களும்

சூதாட்டக் கூடத்தில்
சீனர்களெல்லாம் ஐக்கியம்

உற்சாக பானத்துடன்
ஒரு கூட்டம்

அட்டைகள் விளையாட
அட்டைபோல் ஒட்டிக்கொண்டது
ஒரு கூட்டம்

டிஸ்கொத்தே நடனங்களும்
தரை அதிரும் ஆட்டங்களும்

பூப்பந்தாட்டமும்
பூவையர் கூட்டமும்

கூடைப்பந்தாட்டமும்
கோல்ப் விளையாட்டும்


நீச்சல் குளத்தினிலே
நீராடல் உண்டு

இரவுப்பயணத்திலே
எட்டுத்திக்கும் இருட்டு

எட்டிப்பார்த்தால்
எறும்பு போல் படகுகளும்
எங்காவது ஒரு கப்பலும்

நிகழ்ச்சிகளை நெறிபடுத்த
நேரமே கிடைக்கவில்லை

ஓட்டமும் நடையுமாய் -நான்
ஒரு பொழுதும் நிற்கவே இல்லை

எப்படியோ முடிந்து விட்டது
இரண்டுநாள்
எனக்குத் தெரியவே இல்லை

எதுவுமே வாங்கவில்லை
எனக்கு நேரமும் இல்லை





அன்புடன் ஜோதிபாரதி

Monday, January 21, 2008

நல்ல நாளும், பெரிய நாளும்

நல்ல நாளும், பெரிய நாளும்

புத்தாண்டு வந்தது,

பிறந்தநாள் வந்தது,

தீபாவளி வந்தது,

பொங்கல் வந்தது -அட

அட்சயத் திருதியை கூட வந்தது,

அவள் அழுகை மட்டும்

நிற்கவே இல்லை -அவளுக்கு

பொன்னுக்கு வீங்கி!


அன்புடன் ஜோதிபாரதி

Saturday, January 19, 2008

சீமானின் சீற்றமும், கம்யூனிசக் கொள்கையும்

சீமானின் சீற்றமும், கம்யூனிசக் கொள்கையும்

சீமான் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் இயக்குனர் சீமான் அல்ல, தமிழ்ப் பற்றாளர், இன உணர்வு கொண்டவர், தமிழன் மீது ஓர் உரிமையுடன் கூடிய கோபக்கனல் வீசக்கூடியவர், ஈழத்தமிழர்கள் மீது மாறாப் பற்றும், பாசமும் கொண்டவர் என்பது தான் நம் தமிழ் நல்லுலகுக்கு தெரியும்.

முதல் முறையாக அவரின் உரையை ஆருயிர் அண்ணன் சிங்கப்பூர் கவிமாலை நிறுவனர் கவிஞர் திரு பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் முதல் ஓசை, உயிக் குடை, பூமகன் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டபோது கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு திரைப்பட இயக்குனர் என்பதையும் தாண்டி, ஓர் உணர்வை தன் கூரிய வார்த்தைகளால் குத்தி எழுப்பக் கூடியவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவருடைய கொள்கைகளில் சில எனது கொள்கையாகவும் இருப்பதால் பிடித்திருந்தது. அதன் பின்னர் அவரை, அவருடைய நிகழ்ச்சிகளை, கருத்துக்களை ஊடகங்கள் வழியாக கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

சீமான் அவர்கள் தனது திரைப்படங்களில் கிராமத்து வாசனையை குழைத்துக் கொடுத்திருப்பார். மரண தண்டனை, தூக்குத் தண்டனை போன்றவற்றை எதிர்ப்பதாகவும், யாரையும் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றும் கோபக்கனல் வீச பேசுவார். ஈழத்தமிழர்கள் படும் துயரத்தை நினைத்து நினைத்து வேதனை அடைபவர். கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர். நான் பெரியாரின் பேரன் என்றும், மார்க்ஸின் மாணவன் என்றும் கூட உரிமையோடு சொல்லிக்கொள்வார்.
கியூபா வீரன், சுதந்திரப்பறவை, பொதுவுடைமைவாதி சே குவேரா (சே என்றால் நண்பன்) அவர்களின் தியாகங்களால் கவரப்பட்டு அவரின் வாழ்க்கையை நேசிக்கக் கூடியவர்.

திரைத்துறையில் இருந்துகொண்டே திரைப்பட நடிகர், நடிகைகளை தைரியமாக விமர்சிக்கக் கூடியவர். நல்ல திறமைசாலி, நல்ல பேச்சாளர், கிராமத்து வாசனையுடன் கூடிய நாட்டுப்புறப் பாடல்களை அருமையாகப் பாடுவார். அம்மாவிடம் கற்றுக்கொண்டேன், நான் இதெல்லாம் பாடுவதை பற்றி நீங்கள் ஒன்றும் ஆச்சர்யப் படவேண்டியதில்லை. நான் வேறு மொழியில் பாடினால் தான் நீங்கள் வியப்படையவேண்டும். என் தாய்மொழியில் பேசுவதையோ, என் தாய்மொழிமீது பற்று கொள்வதையோ நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை என்று கோபமாக பொறி தட்டும் படி உரைக்கக்கூடியவர். திருமணமாகாத இளைஞர்.

இவரைப்பார்த்து நிறைய பொறாமைப் படவேண்டிய விடயங்கள் உண்டு. கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் உண்டு.
இவரது கம்யூனிசக்(பொதுவுடைமை) கொள்கைகளை உடைய மற்றவர்களைப் பற்றி இங்கு நினைவு கூற கடமைப் பட்டிருக்கிறேன்.

சீமான் அவர்களால் வெறுக்கப் படுகின்ற சிங்கள இனவாத ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கின்ற, தமிழர்களை பூண்டோடு ஒழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜெ.வி.பி) என்கிற ஒரு கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சி எல்லோரும் சமம் என்றல்லவா போராடவேண்டும். அல்லது எந்த உயிருக்கும் தீங்கு இழக்கக் கூடாது என்கிற புத்தர் கொள்கையையாவது பின்பற்றவேண்டும் இது சீமானுக்கு தெரியுமோ தெரியாதோ?

சீமான் அவர்களால் போற்றப் படுகின்ற மார்க்சிசத்தின் சித்தாந்தத்தை பின் பற்றுகிற நம்மூர் மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்கள் தொழிற்சங்க வாதி என்ற பெயரில்
உழைக்காத வர்க்கமாய் நிறுவன காண்டீனோடு, வேலைக்குச் செல்லாமல் வீட்டுக்கு வருவது, முல்லை பெரியாறு அணைப்பிரச்சனையில் கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு ஆதரவாக மௌனியாக இருந்தது, லஞ்சம் வாங்காத முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தியைக் கட்சியை விட்டு நீங்கியது. தற்போது மேற்கு வங்கத்தில், நந்திகிராமில் பலர் படுகொலை செய்யப் பட்டது.

கடல்சார் பல்கலைக் கழகத்தை தமிழத்தில், சென்னையில் அமைக்கக்கூடாது, கொல்கத்தாவில் அமைக்கவேண்டும் என்றும் நம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களை நாடளுமன்றத்தில் அடிக்கப்பாய்ந்தது. இதுவா கம்யூனிசம்?
அவர்கள் தொடர்ந்து ஆண்டுவரும் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்கள் எந்த வகையில் முன்னேறி இருக்கிறது?

இந்திய அரசு ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டால் மகிழ்ச்சியடைவது. மற்ற நாடுகளுடன் போடும் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது. (அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை இதில் சேர்க்க வேண்டாம்). கம்யூனிசக் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று முன்னாள் ரஷ்ய அதிபர் திரு கோர்பசேவ் அவர்கள் அதைக் கைவிட்டது எல்லோருக்கும் தெரியும். சீன கம்யூனிச அரசாங்கம் எல்லாவகைகளிலும் உலகமயமாதலை ஆதரித்து இன்று முன்னேறிய நாடுகள் வரிசையில் வந்துகொண்டு இருக்கிறது. சீனா பின்பற்றும் அதே கொள்கையை இந்தியா பின்பற்ற முற்படும் போது, உலகமயமாதல் கூடாது என்று கண்ணை மூடிக்கொண்டு எதிப்பவர்கள் நம் கம்யூனிஸ்டுகள். இந்த பதிவின் நோக்கமே முரண்பாடுகளின் மொத்த உருவம் இக்கால கம்யூனிசவாதிகள் என்று உணர்த்துவதற்காக மட்டும் தான். தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் திரு சீமான் அவர்கள் பற்றிய செய்திகளையும் இதில் சேர்க்க வேண்டியதாயிற்று.

அன்பர்கள் இந்த கட்டுரை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.



அன்புடன் ஜோதிபாரதி

Friday, January 18, 2008

அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்!


அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்!

போகியில் தீயன போகி
யோகமும் போகமும் பொங்க

இல்லம் புதுப்பிப்பு
இரவல் பொருள் திருப்பி ஒப்படைப்பு

வசதிக்காரர் வீட்டில்
வண்ண வண்ண சாயங்களும்
வகை வகையான பொருட்களும்

நடுத்தர குடும்பம்
நமக்கு வெள்ளை மட்டும் தான்
நகை போதும் புன்னகை

ஏழை மக்கள்
ஏங்கி மொழுகினார் சாணத்தால்
ஏற்றம் வரும் என நம்பி

மதுக்கூர் சந்தையிலே
மஞ்சள் கொத்து,
வாழைத்தார்கள்
வகைவகையாய்
செங்கரும்பு வாங்கி
செழிக்க வைப்போம் -நம்
செவ்வேர் விவசாயியை

வறுத்தெடுக்க வாளை மீனும்
வகை வகையாய் காய்கறியும்

வண்ண வண்ண கொம்புச்சாயம்
வசீகரிக்கும் நெத்திசுட்டி

சின்ன சின்ன இதழ் தொடுத்த
சிங்கார மாட்டு மாலை

தேடித் தேடி வாங்கி வந்து
தேக்கி வைத்த நன்றிதனை
தெவிட்டத் தெவிட்ட தந்திடுவோம்

அதிகாலை பொங்கலன்று விழித்து
வீட்டை சுத்தம் செய்து கழுவி
விதவிதமாய் கோலங்களால் தழுவி
மங்கையர்கள் மகிழ்ந்து மகிழ்ந்து உலவி
மற்றவர்கள் இல்லங்களில் போய்
மகிழ்ந்து மகிழ்ந்து
கோலங்களைப் பார்ப்பர்
கூடிப் பேசி குதூகளிப்பர்.

சரியான நேரத்தில்
சரமாக கோடு திறந்து
தளமேடை அமைத்து
சாணத்திலே அருகம்புல் பிள்ளையார்
கிழக்குப்பக்கம் பார்க்கவைத்து
வாழைப்பழ சீப்பும், செங்கரும்பும், மஞ்சள் கொத்தும்
வழமை போல் சர்க்கரைப்பொங்கல் வெற்றுப்பொங்கல்
பொங்கி வரும் நேரந்தனில்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலே பொலிக!!
பொங்கலே பொலிக!! -என்று
கூவிக் கூவிக் குதூகளிப்போம்

பொங்கிய பொங்கலுக்கு
மஞ்சள் கொத்தால்
மாலையிட்டு
ஞாயிறு தொழுது குடும்பத்தோடு
நன்றிக்கடன் தீர்த்துவைப்போம்.

ஆண்டிற்கு ஒருமுறை
அறுதியிட்டு கூறாவிட்டால்
அதனையும் மறந்து விடுவோமோ?

மறுநாள் மாட்டுப்பொங்கல்
மகிழ்வுடனே எதிர்பார்த்து
வருடமெலாம் திங்கும் வைக்கோலுக்கு
வசதியாய் விடைகொடுக்க
வந்தது பொங்கலென்று
வாரி வாரி அறுத்திடுவோம்
வயல்களிலே வளர்ந்த புல்லை

காலையிலிருந்து கால்நடைகளிடம்
கனிவுடனே நடந்துகொள்வோம்
களத்துமேட்டிலே நற்ப் புல்
கண்ட இடம் மேய்த்து
கானோடை ஓடை செவந்தான்,
சாமந்தி பிச்சினி ஒடப்பா
திரிகுளம் வீரையன்குளம் வன்னார்குளம்
தண்ணீர் காட்டி குளிப்பாட்டி
வீட்டுக்கு ஓட்டிவரும் முன்னே
செங்கல் மாவில் கோலமிட்டு
மங்கையர்கள்
மகிழ்வுடனே காத்திருப்பார் வரவேற்க
குங்குமமும் இட்டிடுவார்
கோலமிடும் பொற்ச்செல்வி
சங்கதனைக் கட்டிடுவார்
சரஞ்சரமாய் வண்ண மாலையும் இட்டு
செதுக்கப்பட்ட கூரிய
கொம்புக்கு வண்ணம் தீட்டி

பெரியவன் வைரவன் வனத்தில் பெற்ற
ஈச்சை மட்டை கசங்கை
மெல்லிய சுத்தியால் இழைத்து
மாவிலை வேப்பிலை பெரண்டை
ஆவாரம்பூ கன்னிப்பூ நெல்லிக்கொத்து
மாலையாய் தொடுத்து ஒற்றைப்படையில்
மகிழ்வுடனே மாட்டுக்கு மாலையிட்டு

பொங்கிய பொங்கலை ஊட்ட
தண்ணீர் நல்லெண்ணெய் அரப்பிட்டு
தண்ணீரிட்டு கழுவி
பொங்கலூட்டி வாய் கழுவி
தாரை தப்பட்டையோடு
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலே பொலிக!
பொங்கலே பொலிக!! -என்று
போற்றிடுவோம் மாடுகளை என்றும்...

திட்டியதை சுற்றியும் போட்டு
மாட்டை தாண்டவிட்டு
கட்டிடுவோம் புது அச்சில்
கொட்டிடுவோம் புல்லதனை
தெவிட்டத் தெவிட்ட

பசியறியா விரதம் இன்று
விருந்தினரை உபசரித்து -பின்
பசியாறி விருந்தோம்பல் போற்றிடுவோம்

கண்ணுப் பொங்கலை
காணும்பொங்கலாய்
கன்னிப் பொங்கலாய்
கவின்மிகு கலைநிகழ்ச்சிகளும்
களித்திடுவோம் பிள்ளைகள் விளையாடக் கண்டு
காத்திடுவோம் தமிழர் பண்பாடு என்றும்...


அன்புடன் ஜோதிபாரதி

Friday, January 11, 2008

பிச்சைக்காரர்களை ஒழிப்பது எப்படி?


பிச்சைக்காரர்களை ஒழிப்பது எப்படி?

இந்தியாவில்/தமிழகத்தில் நாம் அன்றாடம் வெளியில் செல்லும் போது ஏகப்பட்ட பிச்சைக்கரர்களை சந்திக்க வேண்டியுள்ளது என்பதை நாம் வெட்க்கப்படாமல் ஒத்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இவர்களை ஒழித்து என்று சொல்வதற்கு பதில் அவர்களுக்கு எவ்வாறு மறுவாழ்வு அளிப்பது? அரசாங்கத்துக்கு இது ஒன்றும் மிகக் கடினமான வேலை இல்லை. தமிழகம் முழுக்கவும் ஒரு ஐந்து லட்சம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், (நூறு பேருக்கு ஒரு பிச்சைக்காரரா? அய்யோ!)

பத்து பிச்சைக்காரர்களை ஒரு காவல்துறை அதிகாரி பிடித்துக்கொண்டு வரவேண்டும் என்றும் அதற்கு ஒரு வாரம் அவகாசமும் கொடுக்கலாம். இதற்கு ஐயாயிரம் காவல்துறை அதிகாரிகளின் தேவைப்படுவார்கள். இருக்கிறார்களே பயன்படுத்திக்கொள்ளலாம். (ஒரு பிரதமர்/குடியரசு தலைவர் சென்னை வந்தால் மூவாயிரம் போலீஸ் தேவைப்படுகிறது. ஒரு அரசியல் கட்சி மாநாடு என்றால் பத்தாயிரம் போலீஸ் தேவைப்படுகிறது. இதற்கு முடியாதா என்ன? அவர்கள் பாணியில் சொன்னால் இது நூற்றாண்டு கால கனவு அல்லவா?) இதற்கு ஒரு திறமையான ஐ.ஜி -யை தலைவராக நியமிக்கலாம். இதற்குத் தேவைப்பட்டால் எப்போதும் போல் ஆங்கிலத்திலேயே ஆப்பெரேசன் பெக்கர்ஸ்(Operation Beggers) என்று வைத்துக்கொள்ளலாம். அவர்கள் தங்குவதற்கு, தற்போது ஏழைகளுக்கு கொடுப்பதாக கூறுகிறார்களே அந்த புறம்போக்கு நிலத்தில், குறைந்த செலவில் தங்கும் இடம் உருவாக்கலாம்(இந்த இலவச வேட்டி சேலைக்கு கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் செலவு பண்ணினாலே இதை சமாளித்து விடலாம்) அரசாங்கத்துக்கு கட்ட தெரியாவிட்டால் தனியாரிடம் ஒப்படைத்தால் ஒரு மாதத்தில் முடித்துக் கொடுப்பார்கள்.

அந்த இடத்தில் அவர்களுக்கு சாப்பாடு சமைத்து போட்டு(தற்போது போடுகிற சத்துணவு அளவுக்கு தரமாக இருந்தால் போதும்) அவர்களுடைய குழந்தைகளுக்கு பால் போன்றவைகள் கிடக்க ஏற்பாடு செய்யலாம்.
அவர்களில் திடகாத்திரமானவர்களை தேர்ந்தெடுத்து கட்டிடவேலைகளுக்கு போக்குவரத்து வசதியுடன் அனுப்பலாம்.(கட்டிட வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று தவிக்கிறார்கள்) பொறுப்பை கட்டிட கான்டிராக்டரிடம் விட்டுவிடலாம். பெண்களுக்கும், முதியவர்களுக்கும் கைத்தொழில் கற்றுக் கொடுக்கலாம்.(பாய் நெய்தல், வயர் கூடை பின்னுதல், தையல், ஓலை,மரம் ஆகியவற்றை கொண்டு செய்யும் கைவினை பொருட்களை செய்ய அரசாங்கத்தின் பூம்புகார் மூலம் பயிற்சி கொடுக்கலாம்) குழந்தைகளை பாட சாலைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யலாம்.
அவர்களின் திறமையை பொறுத்து ஊதியம் வழங்கி வங்கியில் இருப்பு வைக்கலாம்.
மருத்துவ வசதி செய்து கொடுக்கலாம். இதேபோன்று தமிழ்நாடு முழுதும் இருபது மையங்களை உருவாக்கிச் செயல் படுத்தலாம்.

அரசாங்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒரே மாதத்தில் செய்து முடிக்கலாம்.
ஏன் செய்யவில்லை என்பதுதான் கேள்விக்குறி???

மீன் குழம்பு போட்டு சாப்பாடு போடுவதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது நல்லது இல்லையா? முதலாவது நாம் எப்பவும் செய்துகொண்டே இருக்கவேண்டும். இரண்டாவது ஒரு முறை கற்றுக்கொடுத்தால் போதும். என்னைப் பொறுத்தவரை கற்றுக்கொடுப்பதுதான் சுலபமாக தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


குறிப்பு : பிச்சைக்காரர்களை துன்புறுத்தக்கூடாது. காவல்துறையினர் பிச்சைக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள பறக்கும் படை அமைக்கலாம்.


அன்புடன் ஜோதிபாரதி

Thursday, January 10, 2008

நம் பாரதிக்கு சாதிச்சாயமா?


நம் பாரதிக்கு சாதிச்சாயமா?

இணையத்தில் சிலர் நம் பாரதியை பற்றி தவறான தகவல்களையும், அவரை ஒரு சாதி வெறியர் என்றும் எழுதுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் இந்த பதிவைச் செய்ய நேரிட்டது.

பாரதியாரின் கவிதைகளை முழுமையாக படிக்காதவர்களும், ஒரு சில சாதியினர் மீது ஏற்படுகின்ற காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் நம் பாரதியை அந்த சாதி வலைக்குள் திணிக்கப் பார்க்கிறார்கள். "சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்." என்ற பாரதியின் பாடலைக் கூட அவர்கள் படித்ததில்லை போலும். இன்னும் எத்தனையோ பாடல்கள் முற்போக்கு சிந்தனைகள், கருத்துக்கள் அடங்கியதாக இருக்கின்றது. அத்தனையும் இந்த மானிடரை, தமிழனை, இந்தியனை கோபம் கொப்பளிக்க வேதனையுடன் பாடியது.

ஒரு வலைப்பக்கத்தில் நம் பாரதியை ஒரு பைத்தியக்காரன் என்று சித்தரித்து இருக்கிறார்கள். இது வேதனையிலும் வேதனை. நான் சொல்கிறேன் பாரதி பைத்தியக்காரன்தான், தாமஸ் ஆல்வா எடிசனைப்போல. எடிசனை ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லையா? "ஆம்" என்றால் நீங்கள் பாரதியை ஏற்றுகொள்ளதான் வேண்டும். "இல்லை" என்றால் உங்கள் வீட்டில் மின் விளக்குகளை நிறுத்தி விட்டு வாழுங்கள். பைத்தியக்காரனுக்கு அறிவு இல்லை என்று யார் சொன்னது? மனித ஜடங்களைப் பார்த்து பாரதி பைத்தியமானது உண்மைதான். உங்கள் கூற்றும் இந்தவகையில் உண்மைதான்.

கம்பனை, இளங்கோவை, ஒளவையை பாரதிக்குப் பிடித்தது. பாரதியை பாரதிதாசனுக்குப் பிடித்தது. பாரதிதாசனைப் பிடித்தவர்களுக்குப் பாரதியாரைப் பிடிக்காமல் போனது ஏனோ? அவன் பிறந்த சாதியின் குற்றமா? அல்லது அவனுடைய குற்றமா? இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

நான் ஒரு இடத்தில் படித்தேன், பாரதிதாசனுக்கு பாவேந்தர் என்று பெயர் சூட்டி அதை மட்டுமே உச்சரித்து பாரதியின் பெயர் பாரதிதாசன் என்று உச்சரிப்பதில் கூட வந்து விடக்கூடாது என்று சிலர் இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்களை இங்கே தெரிவிக்க விரும்பவில்லை. பாரதியை எதற்காக இவர்கள் வெறுக்கிறார்கள்? பாரதிக்கு மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் ஒருங்கே இயற்கையிலேயே இருந்ததாலா? யார் சொல்லுவார் இதற்கு பதில்?

பாரதி வானம், அவனுக்கு வெள்ளை அடிக்க முயல வேண்டாம். முயன்றால் தோற்று போவது நிச்சயம்.

உங்கள் கருத்துக்களைப் பதிய வேண்டுகிறேன்.

அன்பன்,
ஜோதிபாரதி.

Wednesday, January 9, 2008

சாலமன் பாப்பையாவை நாம் வெறுக்கக் காரணம்?

சாலமன் பாப்பையாவை நாம் வெறுக்கக் காரணம்?

அண்மையில் எனது வலைப்பக்கத்தில் சிறந்த பட்டிமன்ற நடுவர் யார்? என்று கேட்டு அதில் சாலமன் பாப்பையா, சோ.சத்தியசீலன், இலங்கை தமிழருவி த.சிவகுமாரன், திண்டுக்கல் லியோனி, சரஸ்வதி இராமநாதன், பெரியார்தாசன் ஆகியோரின் பெயர்களை ஓட்டெடுப்புக்கு விட்டிருந்தேன். எனது வலைப்பக்கத்திற்கு விஜயம் செய்யும் சகோதர, சகோதரிகள்,நண்பர்கள் ஓட்டு போட்டுடிருக்கிறார்கள். சதவிகித வாக்குக்களை பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆச்சர்யமும், வியப்பும் ஏற்ப்பட்டது. ஏன் என்றால், இதில் நாமெல்லாம் பட்டிமன்ற நாயகர் என்று போற்றும் திரு சாலமன் பாப்பையா அவர்களுக்கு வாக்குகளே கிடைக்கவில்லை.

சாலமன் பாப்பையா 0 (0%)

சோ.சத்தியசீலன் 2 (20%)

தமிழருவி 2 (20%)

லியோனி 2 (20%)

சரஸ்வதி இராமநாதன் 3 (30%)

பெரியார்தாசன் 1 (10%)

சிலர் பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் என்று சொல்லுவார்கள். நானும் பார்த்திருக்கிறேன், அவர் கலந்துகொள்ளும் எந்த பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, அல்லது வேறு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, நல்ல கலகலப்புடன் ஜனரஞ்சகமாக, நகைச்சுவையாக இருக்கும். அந்த மதுரைத்தமிழ், தேன் மதுரமாகக் கிடைக்கும். கணீர் என்ற குரலால் கட்டுண்டு கிடக்கச்செய்யும் ஆற்றல் பெற்றவர்.

90 -களில் சின்னத்திரையை தனது பட்டிமன்றத்தின் மூலம் கட்டிப்போட்டவர். தாய்மார்களை கவரும் பேச்சுக்குச் சொந்தக்காரர். இன்றும் தொலைக்காட்சியில் பட்டிமன்றம் மற்றும் மற்ற நிகழ்சிகளை தருபவர். திருக்குறள் போன்ற நாம் போற்றிப் பாதுகாக்கும் பொக்கிஷங்களுக்கு உரை எழுதிஇருக்கிறார். (திருக்குறளுக்கு டாக்டர் மு.வரதராசனார், கலைஞர் மு.கருணாநிதி, நாவலர் இரா.நெடுஞ்செழியன் போன்றோர் உரை எழுதி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது)


எனக்குத் தெரிந்து சமீபத்தில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் சங்கர் அவர்கள், திரு பாப்பையா அவர்களின் தமிழ் மற்றும் பட்டிமன்ற நடுவராக அவருடைய உரை(பேச்சு) ஆகியவற்றால் கவரப்பட்டு வாய்ப்பளித்திருக்கக்கூடும். சமீபத்தில் வந்த சிவாஜி படத்தில் அவர் ஏற்றிருந்த பாத்திரம் இரண்டு பெண்களின் (அங்கவை-சங்கவை) தந்தை. இந்த இரண்டு பெண்களின் அழகையும் கொஞ்சம் குறைத்துக்காட்டி இருப்பார்கள். அழகு குறைந்து இருந்தாலே திருமணம் ஆவது, மாப்பிள்ளை பார்ப்பது கொஞ்சம் கடினம் என்பது உலகம் முழுதுக்கும் எழுதப்படாத நியதியாகிவிட்டது. வாங்க பழகாலாம் என்று திரு ரஜினி, விவேக் ஆகியோரை திரு பாப்பையா அழைப்பது மாதிரி காட்சிப்படுத்தி இருப்பார் சங்கர். இங்கேதான் ஒரு உறுத்தல் ஏற்ப்படுகிறது. இந்தக் பாத்திரத்தை பாப்பையா ஏற்றுக்கொண்டதில், தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் நிறைய வருத்தம் இருந்திருக்கக்கூடும்.
சிலர் வெளிப்படையாக பாப்பையாவை விமர்சிப்பதை செய்திகளில் படிக்கிறோம். நமக்கு வேதனையாக இருக்கிறது. இதை எப்படி முறியடிப்பது?


தமிழை, தமிழர்களை கொச்சைபடுத்திவிட்டதாக பாப்பையாவைக் குற்றம் சாட்டுவது நியாயமா? உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அவர் வானம், அவருக்கு யாரும் சாயம் பூச முடியாது என்பது என் கருத்து.


அன்புடன் ஜோதிபாரதி

Friday, January 4, 2008

தமிழகத் தலைவர்களின் நீலிக்கண்ணீர், ஈழ மக்கள் நம்புவார்களா?

தமிழகத் தலைவர்களின் நீலிக்கண்ணீர், ஈழ மக்கள் நம்புவார்களா?

தமிழகத் தலைவர்கள் இலங்கை இனப்பிரச்சனையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களும், ஜெயலலிதாவும் இராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு இலங்கை விடுதலை போராளிக்குழுக்களை எதிர்த்துக்கொண்டும், பிரச்சனையில் பட்டும் படாமலும் இருந்துகொள்கிறார்கள். இவர்களால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையும் விழைந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்தியாவின் மத்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள், ராடார் போன்ற அதி நவீன ராணுவ தளவாடங்களை உதவுவதற்கு ஒப்பந்தம் போட்டு, கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இதை இந்திய ராணுவத் தளபதியே சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். சமீபத்தில் இந்தியாவும் இலங்கையும் கூட்டு விமான ரோந்துக்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். இதனால் பதிக்கப்படபோவது, அப்பாவி ஈழத்தமிழர்கள். மத்திய அரசு இதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. நமது தமிழர்களின் சகோதரர்கள் என்று நினைக்கவில்லை. வாரம்தோறும் இந்திய அதிகாரிகள் அமைச்சர்கள் கூட்டம் இலங்கை செல்வதும், அங்கெ நடைபெறும் விருந்தில் கலந்து கொள்வதும், பட்டம், பரிசு, விருது பெற்று வருவதும் ஈழத்தமிழர்களை மட்டும் அல்லாது தாய் தமிழகத்தை சேர்ந்த தமிழர்களையும் மிகுந்த வேதனைப்படுத்துகிறது.

சமீபத்தில் தமிழரான ப.சிதம்பரம் இலங்கை போய் பேட்டியளித்தது வேதனையிலும் வேதனை. தற்போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். இது எதைக்காட்டுகிறது என்றால் தமிழர்களை இந்திய அரசிடம் இருந்து பிரித்தாள இலங்கை அரசு செய்யும் சூழ்ச்சி என்று தெரிகிறது. அதற்கு ஏன் நம் மத்திய அரசில் உள்ளவர்கள் துணை போக வேண்டும்?


தமிழகத்தில் முதலமைச்சராக இருப்பவர் கவிதை எல்லாம் தீட்டினார், தமிழ் இரத்தம் ஓடுகிறது என்றார். மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறார். இவைகளை கண்டிக்காதது ஏன்? இவரால் தான் மத்திய அரசாங்கமே நடக்கிறது. இதை வைத்து அவர்ககளை வற்புறுத்தலாமே. முன்பு தனது பேரனுக்கு தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை தான் வேண்டும் என்று மத்திய அரசை மிரட்டியதாக செய்தி வந்திருந்ததே? இலங்கைத்தமிழர்களுக்காக வற்புறுத்தியதாக கூட நாங்கள் ஒன்றும் செய்தி படிக்கவில்லையே? செய்வாரா?

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அன்றாடம் மேடையில் முழங்கிக் கொண்டு இருக்கும் திரு. வைகோ அவர்கள் பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் எந்த பலனும் இல்லை. இவரது ஆதரவில் மத்திய அரசு இல்லையே? பழ நெடுமாறன் அக்காலந்தொட்டு தொடர்ந்து போராடிவருகிறார். இவருக்கு பெரிய மக்கள் சக்தி ஆதரவு இல்லாததாலும், எம்.பி க்கள் இல்லாததாலும் இவர் சொல்லி யாரும் கேட்கமாட்டர்கள். கி.வீரமணி நீலிக்கண்ணீர் வடிப்பதெல்லாம் மக்களை ஏமாற்ற என்று எடுத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் இவர் கலைஞரை வற்புறுத்தலாமே? இதேபோல் தொல் திருமாவளவன் கலைஞரை வற்புறுத்தலாமே? ராமதாஸ் மத்திய அரசை வற்புறுத்தலாமே? இவர்கள் இருவரிடமும் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் இருக்கிறார்கள். மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் ஈழமக்களையும், தமிழக மக்களையும் நீலிக்கண்ணீர் வடித்து ஏமாற்றுகிறார்கள் என்பது என்னுடைய கருத்து.



அன்புடன் ஜோதிபாரதி

Thursday, January 3, 2008

ராமர் பாலம் - ஜோதிபாரதியின் பதில்கள்

ராமர் பாலம் - ஜோதிபாரதியின் பதில்கள்



சேது சமுத்திரத் திட்டத்தால் யாருக்கு லாபம்?

இப்போதைய நிலவரத்தை பார்க்கும் பொழுது, கான்ட்ராக்ட்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் லாபம் கிடைக்கும் போல் தெரிகிறது.

சேது சமுத்திர திட்டம் நிறைவேறுமா?

மிகப்பெரிய நகரமாம் சென்னையில் துர்நாற்றம் அடித்துக்கொண்டு இருக்கும் கூவத்தை தூர்வாரி சுத்தம் செய்ய முடியாத சரித்திரத்தலைவர்கள், சமுத்திரத்தை தூர்வாருகிறேன் என்பது வெட்டிவேலை. வெற்றிகரமாக நிறைவேறுவது கடினம்.
தன் குடும்பத்தை நிர்வகிக்க தெரியாதவன், நான் நாடாளுவேன் என்பதற்குச் சமம்.

ராமர் பாலத்தை இடிப்போம் என்று கலைஞரும், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் சொல்வது சரியா?


சரியா சரியில்லையா என்பதை விட, இந்தவிடயம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனதை, உணர்வை புண் படுத்துகிறதென்றால், அதை அரசாங்கம் விட்டுவிடுவது நல்லது. கொள்கையில் வேறுபட்டவர்களாக கலைஞரும், டி.ஆர். பாலுவும் இருந்தாலும். பதவியில் இருக்கும் போது தனது சொந்த கொள்கைத் திணிப்பை செய்யக்கூடாது. இது விருப்பு வெறுப்பின்றி உறுதி கூறப்பட்ட பதவி பிரமாணத்துக்கு முரணானதாகும். நம் பாரதியே “சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்று சொல்லி இருக்கிறான்.
அவன் சொன்னதை சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதன் அர்த்தமாக எனக்கு படுவது, இலங்கைத் தீவில் நம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள், நாம் சேது பாலத்தை மேடாக்கி ரோடு போட்டு நம் சொந்தங்களாகிய, ஈழத்தமிழர்களுடன் நம் உறவுகளை மேம்படுத்துவோம் என்பது தான்.

சேது பாலத்திற்கும் ராமனுக்கும் என்ன சம்பத்தம்?

ஒரு உதாரணம் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். அந்த காலந்தொட்டு நம் நாட்டில் சேதுராமன் என்று நிறைய பேருக்கு பெயர் இருக்கிறது. ராமேஸ்வரம் என்று இடம் இருக்கிறது. அது எப்படி வந்திருக்கும் என்று ஆராய்ந்தால் நல்ல பதில் கிடைக்கும்.

ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கலைஞர் கேட்டிருப்பது பற்றி?

ஒரு கேள்வியை நாம் மற்றவர்களிடம் கேட்கும் போது அதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு கேட்க வேண்டும். அதேபோன்று நாமும் அவரிடம் சில கேள்விகளை சுலபமாகக் கேட்டுவிடலாம். நீங்கள் எந்த பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டம் பெற்றீர்கள் தமிழ்நாட்டிற்க்கே பட்ஜெட் போடுவதற்கு? பொருளாதார பட்டம் பெற்ற முன்னணி தலைவர்களான நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, பத்தாம் வகுப்பில் தோல்வி கண்டு மாடர்ன் தியேட்டரில் வேலைபார்த்த நீங்கள் பேரறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு, எம்.ஜி.ஆர் உதவியுடன் முதலமைச்ச்சர் பதவியை சூடிக்கொண்டது ஏன்? அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அண்ணா கண்டெடுத்த முத்துக்கள், தகுதியும் திறமையும் ஒரு சேர பொருளாதார பட்டமும் பெற்றிருந்தார்களே?

பா.ஜ.க, ஜெயலலிதா ஆகியோர் சேது பாலத்தை இடிப்பதை எதிர்ப்பது ஏன்?

அது ராமர் கட்டிய பாலம் என்பதால் எதிர்க்கிறார்களா அல்லது இதை வைத்து அரசியல் லாபம் தேடுவதற்காக எதிர்க்கிறார்களா என்பது தெரியவில்லை.

கலைஞர்களுக்கு பத்வா அறிவித்த சாமியார் வேதாந்தி பற்றி?

இப்போதெல்லாம் சாமியார்கள், அந்த பெயருக்கே அர்த்தம் தெரியாமல் திரிகிறார்கள்.
கண்டிக்கத்தக்கது.

ஆதாம் பாலம் உள்ளது என்று அமெரிக்காவின் நாசா உறுதிசெய்துள்ளது என்று நம் அரசியல் வாதிகள் கூறுவது?

நாம் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை என்று காட்டுகிறது. அவமானப்பட வேண்டிய விடயம்

இந்துக்கடவுள்களை அடிக்கடித் தாக்கும் கலைஞர் பற்றி?

பாதுகாக்கப்பட்ட வீட்டில் இருந்து கொண்டு கல் வீசுவதாக நினைத்துக்கொள்கிறார். பதவியைத் துறந்து சமுக விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்ப்பித்து எல்லா மதக்கடவுள்களையும் தாக்கிப் பார்க்கட்டும். பின்பு என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.



அன்புடன் ஜோதிபாரதி

Wednesday, January 2, 2008

கூவத்தமிழன் கூவுகிறேன்!


அழுக்குகளின் வாசம்

அவலங்களின் குரல்

கொசுக்களின் இசை முரசும்

கொடுக்காமல் குருதி உறிஞ்சும்

படித்து உரை இல் பிறக்கும் குழந்தை

பார் போற்றும் தலைவர்கள் வரும் பாதை

சிங்காரச் சென்னை எல்லாம் வெறும் போதை -நாங்கள்

சிரமாட்டி கேட்டுக்கொள்ளும் பேதை

சுத்த குடிநீர் இல்லாமல் தவிக்கும் -இந்த

கோலத்தை எந்த நாய் பார்க்கும்

கண் குருடாக இருந்தாலும் தெரியும் -நாற்றம்

கண நேரத்தில் நாசியை பிளக்கும்

தொழிற்சாலை சாரம் இங்கு வடியும்

தூக்கம் இன்றி வாழ எப்படி முடியும்

எட்டிப்பார்த்தால் எல்லாம் மாளிகை

எட்டடி குடிசையில் ஏழைகளின் வாழ்க்கை

சாக்கடை சகதி

அதுதான் எங்கள் வசதி

இந்த வாழ்க்கையே பழகிப்போச்சு

இந்த வாசமே வாழ்க்கையாச்சு




அன்புடன் ஜோதிபாரதி

நன்றி:
திண்ணை இணைய இதழ் 28.03.2008
முத்துக்கமலம் இணைய இதழ் 02.04.2008
பதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008

வண்ணமயில் பெண்ணொருத்தி...

வண்ணமயில் பெண்ணொருத்தி...

- ஜோதிபாரதி


ஒரத்தநாடு செல்வதற்கு பட்டுக்கொட்டையிலுருந்து தஞ்சாவூர் செல்லும் சாமியப்பா பஸ்ஸில் ஏறினேன். அன்று திங்கட்கிழமையாதலால் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பலர் ஏறியதால் பயங்கர கூட்டம். இருந்தாலும் ஒருவர் எனக்கு முன் படிக்கு அருகாமையில் ஒரு இடம் கொடுத்தார். மகிழ்ச்சியாகப் போய் அமர்ந்துகொண்டேன். பஸ்ஸில் அழகழகான சிட்டுக்களாய் மாணவிகள் கூட்டம் எல்லாம் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரிக்கு செல்கிறார்கள். அவர்களில் ஒரு பெண் என்னையே பார்ப்பது போல் இருந்தது, நானும் பார்த்தேன். நல்ல சிவந்த நிறம், சிரித்த முகம், புன்னகை அரசியோ என்று நினைக்கத்தோன்றியது. சுடிதார் அணிந்த சுடராகத் தெரிந்தாள். வனப்புடன் வண்ண மயில் போல் காட்சியளித்தாள். அவள் புன்னகைத்தாள், நானும் புன்னகைத்தேன். பேச வேண்டும் போல் இருந்தது. பேசுவதற்கு கூச்சமாகவும் இருந்தது. பஸ் கிளம்பி பாப்பாநாடு வந்துவிட்டது. நான் ஓரத்தநாட்டில் இறங்க வேண்டும். பஸ் மெதுவாகப் போகவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டேன். அவள் இன்னும் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் கண்கள் பேசுகின்றன. என் கண்ணுக்கு ரதி போல் தெரிந்தாள். உன்னை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். தயங்கினேன். பஸ் ஓரத்தநாட்டை நெருங்குகிறது. எப்படி அவளை விட்டு பிரிவது என்று தெரியவில்லை. தஞ்சவூருக்கே போய் இறங்கிவிடலமா என்று நினைத்தேன். ஒரத்தநாடு வரைக்கும் தான் டிக்கெட் எடுத்திருக்கிறேன். பஸ் ஓரத்தநாட்டில் நின்றது. தயக்கத்தோடு, புன்னகையுடன் அவளைப் பார்த்துக்கொண்டே இறங்கச் சென்றேன். அப்போது நடத்துனர் அவசரத்துடன், கோபமாக என்னைப்பார்த்து "யோவ் பெருசு சீக்கிரம் இறங்கய்யா" என்று கத்தியவுடன்தான் எனக்கு ஞாபகம் வந்தது போனவாரம் எனக்கு நடந்த அறுபதாம் கல்யாணம்.



அன்புடன் ஜோதிபாரதி

Tuesday, January 1, 2008

கிராமத்து மார்கழியே வாழி!

கிராமத்து மார்கழியே வாழி!

தும்பைப்பூவின் பனிக்குளியல்

தூவான வாடை தென்றல்

அதிகாலை பெண்களின் விழிப்பு

இல்ல வாசலில் சாணம் தெளிப்பு

கூட்டிய பின் கோலம் போட்டு

கோலத்தின் நடுவே பரங்கி பூக்கள் போட்டு

கோவிலில் கேட்கும் பக்திப் பாடல்

கோலமிடும் பெண்கள் ஒன்று கூடல்

காளையர்கள் அதிகாலை விழித்து

கதிர் முற்றிய தம் வயலை பார்த்து

அறுவடைக்கு உகந்த நாள் குறித்து

அதுவரைக்கும் கதிரை பாதுகாத்து

பொங்கலுக்கு முன்னரே களம் கண்டு

போற்றிடுவார் புது நெல் கொண்டு



அன்புடன் ஜோதிபாரதி

புத்தாண்டே வருக! புத்தாக்கம் தருக!!

புத்தாண்டே வருக! புத்தாக்கம் தருக!!

அன்பும் அரவணைப்பும் தந்து
ஆக்கமும் ஆளுமையும் தா!

இயற்றமிழ் இயம்ப
ஈடுபாடும் ஈர்ப்பும் தா!

உன்னத வாழ்வைத் தந்து
ஊக்கத்தையும் ஒருங்கே தா!

எட்டுத்திக்கும் புகழ் மனம் கமழ
ஏற்றத்தை எழிலைத் தா!

ஐயங்கள் தீர்த்து அரைகுறை களைய
மையங்கள் பலவும் தா!

ஒவ்வாதவைகள் தவிர்த்து
ஓங்காரம் ரீங்காரம் தா!

ஒளவையின் வரிகளைச் சூடி
அதுவே எனக்கு கோடி!


அன்புடன் ஜோதிபாரதி

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை